Tuesday, October 30, 2007

எழுத்தாளர் பாலகுமாரன் - ஒரு எளிய அறிமுகம்


பெயர்

பாலகுமாரன்

பிறந்த தேதி
1946, ஜூலை 5

பிரசுரிக்கப்பட்ட நாவல்கள்
230 க்கும் மேல்.


பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகள்
100 க்கும் மேல்.


வசனகர்த்தாவாக பணியாற்றிய திரைப்படங்கள் :

நாயகன் , குணா , பாட்ஷா , ஜென்டில்மேன் , காதலன் , செண்பகத் தோட்டம் , கிழக்குமலை, மாதங்கள் ஏழு, ரகசிய போலீஸ், சிவசக்தி, உல்லாசம், வேலை, ஜீன்ஸ் , முகவரி, உயிரிலே கலந்து , சிட்டிசன், மஜ்னு, காதல் சடுகுடு, கிங், மன்மதன், கலாபக்காதலன், புதுப்பேட்டை, வல்லவன்।

இயக்குனர் சிகரம் திரு।கே. பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய திரைப்படங்கள் :

சிந்து பைரவி , புன்னகை மன்னன் , சுந்தர சொப்பனகளு (கன்னடம்)


இயக்குனராகப் பணியாற்றிய திரைப்படம் :

இது நம்ம ஆளு

“மன்னர் பாஸ்கர சேதுபதி” என்ற தொலைக்காட்சித் தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.

திரைப்பட விருதுகள் :

சினிமா எக்ஸ்பிரஸ் விருது - குணா (1993)
தமிழக அரசு விருது (சிறந்த வசனகர்த்தா) - காதலன் (1995)

இலக்கிய விருதுகள் :


இலக்கிய சிந்தனை விருது - “ மெர்க்குரிப் பூக்கள்” (1980)
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது – “இரும்பு குதிரைகள்”(1985)

தமிழக அரசு விருது ( சிறுகதைத் தொகுப்பு – இரண்டாம் பரிசு ) -
“ கடற்பாலம்” (1989)
தமிழக அரசு விருது ( சிறுகதைத் தொகுப்பு – முதல் பரிசு )
“சுக ஜீவனம்” (1990)

இலக்கிய சேவைக்காக தமிழக அரசு வழங்கிய பட்டம் -
“ கலைமாமணி” (2007)

மற்ற விருதுகள் :

- “ சிந்தனைச் செம்மல்” - சென்னை சிங்க குழுமம் அளித்த கெளரவ பட்டம். ( 1994 )
-“ ஆன்மீக எழுத்துலக வித்தகர்” – ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அளித்த விருது

தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகே உள்ள பழமார்நேரி என்ற
கிராமம் இவரது சொந்த ஊர். பள்ளி இறுதி வரை தேறிய பாலகுமாரன் பின்பு தட்டச்சும்,
சுருக்கெழுத்தும் கற்று தேறி தனியார் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணி
துவங்கி,ஒரு டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பதவி வகித்தவர். அலுவலில்
சேர்ந்த காலகட்டத்தில் (1969) கவிதைகள் எழுதத் துவங்கிய பாலகுமாரன் சிறுகதைகளில்
நாட்டம் செலுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார். சுமார்
இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் இதுவரை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் நாவல்கள்
விற்பனையில் முதலிடம் கொண்டவை।

பழந்தமிழ் இலக்கியப்பயிற்சி பாலகுமாரனுக்கு அவர் தாயார் தமிழ் பண்டிதை அமரர் சுலோசனா அவர்களால் கவனமுடன் தரப்பட்டது. முப்பத்தி ஆறு வருடம் ஆசிரியராக இருந்த
தாயின் துணையே பாலகுமாரன் எழுத்தில் சிறந்து விளங்க உதவிற்று। இவர் தனது நூல்களில் பாத்திரங்கள் வாயிலாக தேவார, திருவாசக ,பிரபந்த பாடல்களையும், அதன்
விளக்கங்களையும் அடிக்கடி எழுதி வருகிறார்.தகுந்த வடிவில் பழந்தமிழ் இலக்கிய பெருமைகளை நாவல்களின் ஊடே சொல்கிற போது அவைகளைப் பயிலும் ஆவல் மக்களிடையே ஏற்படுகிறது.

இவர் தன் நாவல்களில் குடும்பம் என்பதின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களை மதிக்க வேண்டிய அவசியம் குறித்தும் , இதற்காக தியானம் ,மூச்சுப்பயிற்சி போன்றவை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் ,தனி மனித மேம்பாடே சமூக மேம்பாடு என்கிற விளக்கமும் எளிய இனிய நடையில் எழுதியிருக்கிறார்.

இது மட்டுமன்றி கதைக்களன்களாய் பல்வேறு தொழில்களை ஆராய்ந்து , உள்ளது உள்ளபடியே
விளக்கும் திறமை இவரிடம் உண்டு. லாரி போக்குவரத்து ,விமான நிலையம் ,காய்கறி
மார்க்கெட்,தங்க நகை வியாபாரம் என்று பெரிய துறைகளை படம் பிடித்துக் காட்டுவது
போல் எழுதுவது,மக்களிடையே சமூக விழிப்பைத் தந்து சகமனிதர் வாழ்க்கையை
தெரியப்படுத்துகிறது.

Sunday, October 21, 2007

ஐயாவுடன்.........

இந்த வலைப்பக்கங்கள் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் அனுமதியோடு, ஆசியோடு அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.



இந்த நண்பர்களுக்கு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களோடு தினசரி தொடர்பு இருக்கிறது. இவர்கள் எல்லோரையும் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் தானே முன்வந்து அடிக்கடி தொடர்பு கொள்கிறார். இந்த நண்பர்கள் குடும்பமும் பாலகுமாரன் குடும்பமும் நன்கு பழகி வருகின்றனர்.


இந்த நண்பர்கள் பாலகுமாரன் எழுத்துக்களை முற்றிலும் படித்தவர்கள். விரும்பி அனுபவித்தவர்கள். அவருடைய எழுத்துக்களை நேசிப்பதாலேயே அவரைத் தொடர்பு கொண்டு அவரையும் நேசிக்கத் தொடங்கி அவருடைய அன்பை , அண்மையைப் பெற்றனர். கிட்டத்தட்ட ஐம்பது பேரைக் கொண்ட இந்த குழு இந்த வலைப்பக்கத்தை துவங்கியுள்ளது. எழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு பலமுறை சுற்றுலாக்கள் சென்றும், பல விழாக்களில் கலந்துகொண்டும், அவர் பேசுவதை அருகிலிருந்து கேட்கவும், அவர் சொற்பொழிவாற்றும் போது அந்த சபையில் இருக்கவும் அவர்கள் இடையறாது முயற்சி செய்கிறார்கள். பலமுறை இவைகள் நடந்தும் இருக்கின்றன.



எழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு இவர்கள் கொண்ட சினேகம் இவர்களுடைய சொந்த வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது. அவருடைய வழிகாட்டல் இவர்களுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பலத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை துவண்டு போனால் அருகில் இருந்து பெரும் உதவிகள் செய்ய எழுத்துச்சித்தர் தயங்கியதில்லை. அந்த நன்றியின் காரணமாகவும் இவர்கள் அவருக்கு நெருக்க மானவர்களாக இருக்கிறார்கள்.


இந்த நண்பர்கள் கூட்டம் கிருஷ்ணதுளசி என்பவரைத் தலைமையாகக் கொண்டு இந்த வலைப்பக்கத்தை திறந்திருக்கிறது. தொடர்ந்து பல விஷயங்களை இந்த பலகணியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது இவர்கள் எல்லாருடைய எண்ணமாக இருக்கிறது. திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்கள் மூலம் ஒரு நல்ல பக்குவத்தை வாசகர்கள் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் எழுத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த வலைப்பக்கம் செயல்படப் போகிறது. அவர் எழுத்தை நன்கு அனுபவித்து உங்கள் சொந்த வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.


எழுத்துச்சித்தரைப் பற்றிய சில புதிய குறிப்புக்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இருதய அறுவை சிகிச்சை இரண்டாயிரமாம் ஆண்டு நடந்து இரண்டு அடைப்புகள் நீக்கப்பட்டு ஒரு பைபாஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு காலையில் யோகா, மாலையில் துரித நடை என்ற தன் தினசரி நியதியை கடைபிடித்து வருகிறார். சர்க்கரை நோய் இருப்பதால் அளவான சாப்பாடு. தித்திப்பு அறவே கிடையாது. ஆனாலும் நொறுக்குத்தீனியில் ஆசை உண்டு, நண்பர்கள் கூட்டமும், அவர் துணைவியரும் கண்டித்து வைத்திருக்கிறார்கள் மற்றபடிக்கு சுறுசுறுப்பானவர். தினமும் காலையில் யோகாவிற்கு பிறகு தியானமும், அ தற்குப் பிறகு மூலமந்திரங்களோடு பூஜையும் செய்வது வழக்கம் .பிற்பகல் தூக்கம் நிச்சயம் உண்டு . இதற்கு காரணம் வயது என்று கூறுகிறார்.


எல்லோரோடும் பேசிப் பழக மாட்டார். அளவாகவே பேசுவார். ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் கேள்விகள் கேட்டால் பதில் கங்கை எனப்பொங்கிப் பாயும். கேட்ட அடுத்த வினாடியே பதில் ஆரம்பித்து விடும். கேள்விக்கு அப்பாலும் போய் இன்னும் விளக்கம் சொல்வதற்கும் அவர் முயற்சிப்பதுண்டு . புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவரை அவர் போற்றி நெறிப்படுத்துவது வழக்கம்.


பாட்டு பாடுவதில் நல்ல ரசனை உண்டு. கர்நாடக சங்கீதம் உள்ள சினிமா பாடல்கள் மீது பிரியம் உண்டு. உதாரணத்திற்கு முல்லை மலர் மேலே, கல்யாணத்தேன் நிலா போன்ற பாடல்களை மிகவும் அனுபவித்துப் பாடுவார். ஆனால் சங்கீத கச்சேரிகளை கேட்பதிலோ, கேசட்டில் பாடல்களை கேட்பதிலோ அவருக்கு அவ்வளவு நாட்டமில்லை. ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்க அவ்வப்போது பாடல்கள் காதில் விழுந்தால் போதும். பாட்டிற்கென்று உட்காருகின்ற மனோபாவம் அவருக்கு இல்லை. நாம் யோசிப்பதை பாடல்கள் தடை செய்கின்றன என்று சொல்வது அவர் இயல்பு.


அவர் நன்றாக ஓவியம் வரைவார். கோட்டுச் சித்திரங்களாக மளமளவென்று ஓவியங்கள் வரைகின்ற அழகு கண்டு நண்பர்கள் வியப்பார்கள். எழுத்தாளன் கூர்மையாகப்பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவன், அதனால் அவனுக்கு ஓவியம் இயல்பாக வரும் என்று அவர் சொல்வது வழக்கம்.


அவருக்குப் பிடித்த சிற்றுண்டி தோசை, பிடித்த நொறுக்குத் தீனி ஓமப்பொடி . மற்றபடி உணவில் இது வேண்டும் அது வேண்டும் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என்று சொல்வதும், மற்றவரிடம் விரும்பி கேட்டு வாங்குவதும் அநாகரிகம் என்பது அவர் எண்ணம். இலையில் என்ன விழுகிறதோ அதை உண்டு விட்டு கை அலம்பி எழுந்து விட வேண்டும் . பசிக்குத்தான் உணவு, அதிகம் ருசித்தால் வாழ்வு பற்றிய தெளிவு வராது, உணவில் எவரும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது அவர் கொள்கை.


அவர் தன் குருவை அதிகம் கொண்டாடுவார் . எல்லா விஷயத்திலும் அவரைப் பற்றிய எண்ணத்தோடு தான் அணுகுவார். அவரை வேண்டிக் கொண்டு தான் துவங்குவார். குருவிற்கு அடுத்தபடி அவர் நன்றியோடு நினைப்பது அவரது தாயார், தமிழ் பண்டிதை பா.சு.சுலோச்சனா அவர்களை. அவர் தந்தையைப் பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை. காரணம் வற்புறுத்தி கேட்ட போதும் சிரித்துக்கொண்டு விட்டுவிடுவார்.


முன்பெல்லாம் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் பழக்கம் உடையவர் இப்பொழுது வயதின் காரணமாக ஐந்தரை மணிக்கு எழுந்திருக்கிறார். இரவு தூங்க பதினோரு மணி ஆகிறது. அவருடைய உடைகள் எல்லாம் வெண்மை நிறமுடையவை, வேறு நிறம் உடுத்த அவருக்குப் பிடிப்பதில்லை. பனியன் அணிய பிடிக்காது.அது சங்கடமானது என்று சொல்கிறார். உடம்பை சுத்தமாக வைத்திருத்தலும், நகங்கள் திருத்தலும், உள்ளாடைகளை மிகத் தூய்மையாக வைத்திருத்தலும் அவர் குணங்களில் ஒன்று. வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.