Tuesday, May 4, 2010

சூரியனோடு சில நாட்கள் - 6 - பாலகுமாரன் பேசுகிறார்


நல்லவர்கள் மூலம் நல்ல விஷயங்கள், நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால் நிச்சயம் நடந்தே தீரும். பலபேர் சொல்லியும் நிறுத்த முடியாத என் புகை பிடிக்கும் பழக்கம் ரஜினிகாந்த் கவலைப்பட்ட மூன்று நாளில் நின்று போனதை நீங்கள் என்னவிதமாய் எடுத்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. ரஜினிகாந்தின் நல்ல மனம்தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடப் பழக்கம் அவரோடு எனக்கு உண்டு. எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் அவர் சிகரெட் நீட்ட, வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அதன் தொடர்ச்சியாய் என் சிகரெட்டுக்குத் தாவுவது உடனே அங்கு நடக்கும். அப்படி சந்தித்தபோது கூட ஒருமுறைகூட ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி கேட்டதேயில்லை. எனக்குத் தெரிந்த சில திரையுலகப் பிரமுகர்கள் உபதேசம் செய்ய ஆரம்பித்தால் சீக்கிரத்தில் ஓயமாட்டார்கள். பிறர் அந்தரங்கம் அறிவதில் ஆவல் உள்ளவர்களாய், அவர்கள் வாயைக் கிண்டி வம்புக்கு இழுத்து, அவர் பலவீனங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, அவர் பலவீனங்களை நீக்குவது எப்படி என்று அவருக்கே அறிவுரை சொல்வார்கள்.

“குடிங்க, வேணாம்னு சொல்லலை, ஆனா ஜாக்கிரதை” என்று மிகக் கபடமாய் பேசுவார்கள். அதே சமயம் வெளியே போய் “அந்தாளா, பெரிய குடிகாரன்”. என்று வதந்தி பரப்புவார்கள். என்னிடமிருந்து ஓரே கெட்ட பழக்கமான சிகரெட் பற்றி சில பிரமுகர்கள் அதிகம் பேசி கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிகரெட்டை விட கொடுமையான பழக்கங்கள் அவர்களுக்கு இருப்பதை நான் அறிவேன். நான் அறிய ரஜினிகாந்த் அறிவுரை சொல்வதேயில்லை. அதே சமயம் பிறருக்கு நல்ல வாழ்க்கை அமைவதிலும் அக்கறை இருக்கிறது.

டைரக்டர் ஷங்கருக்கு திருமணம் என்று நான் சொன்னதும் அப்படியா என்று மிகவும் சந்தோஷப்பட்டார். “யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். சினிமாவிலிருக்கும் பெண்ணா”. “இல்லை மணமகள் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்’.

“நல்லது.”-சட்டென்று கைகூப்பினார்.

“ஏன், சினிமாவிலிருக்கும் பெண்களைத் திருமணம் செய்வது பற்றி உங்களுக்கு வேறேதும் அபிப்பிராயம் இருக்கிறதா”.

“தவறாக எந்த அபிப்பிராயமும் இல்லை. புருஷன் மனைவிக்கு நடுவே மூன்றாவது ஆள் நுழையக்கூடாது. சினிமாவில் நடிக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் மூன்றாவது மனிதர் நுழைய வாய்ப்பிருக்கிறது. அவரைப் பற்றி பொய் சொல்லவோ, புறங்கூறவோ சில சமயம் ஆட்கள் முன் வரலாம். சினிமாவுக்கு அப்பால் உள்ள பெண்கள் எனில் இவை இருக்காது. வாய்ப்பு மிக மிக அரிது. வாழ்க்கையில் துவக்கம் பிரச்சனையே இல்லாது இருக்க வேண்டும் என்ற கவலையில் சொன்னேன்”.

இதுதான் ரஜினிகாந்த்.

கனிந்த அக்கறை. கண்ணியமான விசாரணை. எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக் கனிவான அக்கறை எப்போது ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சனையை அணுகவும் தெரிந்து விடுகிறது.

‘பாட்ஷா’ படப்பிடிப்பு முடியும் தருவாயில், ஒரு குறிப்பிட்ட நடிகைக்கு படக்கம்பெனி காசு தரவில்லை என்று தெரிந்தது. அன்று மாலைக்குள் தருவதாகப் பேச்சு. என்ன காரணமோ வரவில்லை. ஏன் பணம் வரவில்லை என்றதற்கு, தயாரிப்பு நிர்வாகிகளும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அந்த நடிகை மேக்கப் ரூமிலமர்ந்து கொண்டு செட்டுக்கு வர மறுத்துவிட்டார். செட்டில் முழு உடைகளுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட நடனப் பெண்களுடன் புகைக்கும், வெப்பத்துக்கும் நடுவே ரஜினிகாந்த் நடன அசைவுகளைப் பழகிக் கொண்டிருந்தார். நடிகை தளத்திற்கு வரமறுக்கும் செய்தி சொல்லப்பட்டது.

இனி நடிகை வந்தால்தான் அசைவுகள் பழக முடியும் என்கிற நிலை. கிட்டதட்ட ஒரு மணிநேரம் ரஜினிகாந்த் பொறுமையாக இருந்தார். தயாரிப்பு நிர்வாகிகள் தாமதத்துக்கான காரணங்கள் கூறி, படப்பிடிப்பு முடிவதற்குள் அன்று இரவுக்குள் பணம் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடிகை நம்பவில்லை. நம்ப முடியாதபடி பயம். வேறு எவரோ செய்த சில்மிஷம். வேறு எந்த நடிகராக இருந்தாலும் இதுதான் சாக்கு என்று கிளம்பிப் போய் விடுவார்கள். எக்கேடாவது கெட்டுப் போங்கள் என்று நகர்ந்து விடுவார்கள் அல்லது விஷயத்தைப் பெரிதாக்குவார்கள்.

ரஜினிகாந்த் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவோடு பேசினார். அன்றைய ஷுட்டிங் தடைபடுவதால் உண்டான நஷ்டத்தையும், படம் வெளிவருவது தாமதமாவதால் உண்டாகும் கஷ்டத்தையும் தெரிந்து கொண்டார். டைரக்டரை அழைத்துக் கொண்டு போய் அந்த நடிகையிடம் நேரே பேசினார். பத்தாவது நிமிடத்தில் நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட, மிக வேகமாக படப்பிடிப்பு வேலை நடந்தது. வந்து ஆடத்துவங்கியதும் அரை மணி நேரத்தில் நடிகை கேட்ட காசும் வந்து விட்டது.

‘வேலை நேரத்தில் காசைக் கொடுத்து கவனத்தைக் கலைப்பானேன். வேலை முடிந்து போகும்போது தரலாம் என்றிருந்தோம். அதற்குள், நடிகை அவசரப்பட்டுவிட்டார்’ என்று தயாரிப்பு தரப்பில் வருத்தப்பட்டார்கள். இந்த சமாதனங்களை ரஜினிகாந்த் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. ‘வேலை நிற்கவில்லை. நடக்கிறது. அதுதான் முக்கியம்’ என்று பரபரப்பாக இயங்கினார்.

ஷூட்டிங் முடிந்து டப்பிங் ஆரம்பமாயிற்று, ரஜினிகாந்த் டப்பிங் பேசும்போது தியேட்டருக்கு போயிருந்தேன். நான் சிகரெட் விட்டு கிட்டதட்ட பத்து நாளாகியிருந்தது. என்னைப் பார்த்து திரும்பியவர் வழக்கம் போல சிகரெட் பெட்டி திறந்து சிகரெட் நீட்டினார்.

“இல்லை வேண்டாம்”.

“ஏன் பிராண்ட் மாத்தினா இருமல் வருதா”.

“அதில்லை காரணம். நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன்”.

“என்ன..”

“பத்து நாளாயிற்று”.

“நிஜமாகவா”.

“ஒரு சிகரெட் கூடப் பிடிக்கவேயில்லை”.

“பதட்டமாக இல்லையா’.

“முதல் நாள் இருந்தது , இரண்டாம் நாள் இருந்தது, மூன்றாம் நாள் இருந்தது. இப்போது சிகரெட் பிடிக்கும் எண்ணமே இல்லை”.

“பொறாமையா இருக்கு பாலா சார். என்னால் இதை விட முடியலை ஏதாவது பிரச்சனை வந்து சிகரெட்டைத் தூக்கிப் போடுவாங்க. ஒரு பிரச்சனையும் இல்லாமல் எப்படி சிகரெட் நிறுத்த முடிஞ்சது”.

“ஏன் இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்கன்னு நீங்க கேட்டீங்க இல்லையா..ஷுட்டீங் நடக்கறப்ப அது ரொம்ப வருத்தமா இருந்தது எனக்கு, நீங்க இவ்விதமெல்லாம் கேட்கக்கூடியவர் இல்லை. நீங்களே பொறுக்க முடியாது கேட்கும் அளவுக்கு நான் சிகரெட் பிடித்திருக்கிறேன்.”

“அன்னைக்கு கொஞ்சம் டென்ஷனான சீன். நானும் டைரக்டரும் மாத்தி மாத்தி உங்களை தொந்தரவு பண்ணிட்டிருந்தோம். அதனால உங்களுக்கு சிகரெட் ஜாஸ்தியாயிடுச்சு .நிகோடின் ஃபில்டர் இல்லாம இவ்வளவு சிகரெட் பீடிக்கறீங்களே.. இருமல் வந்துரப் போவுதேன்னு பயந்து போய் கேட்டேன். நான் கேட்டேன், நீங்க வுட்டுடீங்க. நீங்க ஏதாவது செய்து நான் சிகரெட் நிறுத்த முயற்சி பண்ணுங்களேன்”.

நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன், எங்கள் தோழர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளும், நிரந்தரமான உடல் வலிவும், நிம்மதியான எண்ண ஓட்டங்களும், நிறைவான புகழும் கொண்டு வாழ்வதற்காக அவரிடம் உள்ள சிகரெட் பழக்கத்தை அவர் விட்டு விடுவதற்காக என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவர்களை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.

நல்லவர்கள் நிறைவோடு நீண்ட ஆயுளோடும் வாழ்வது நல்லது.

Saturday, May 1, 2010

குருவின் தனிச்சிறப்பு

இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் ‘குரு’ என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு. இந்துமத தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குரு ஆச்சார்யன் அல்ல, பாடம் சொல்லி கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ, பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்ட திட்டங்களை, ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.




ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. ‘அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது, தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை. பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல. ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே, அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது. ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை. மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.


அப்படியானால் குரு சிநேகிதனா, இல்லை. அதற்கும் மேலே. சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும். தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும். குரு அப்படிப்பட்டவரும் அல்ல. ஆமெனில், குரு எப்படிப்பட்டவர் என்ற ஒரு கேள்வி வருகிறது.


குரு என்பவர் ஒரு நேர்த்தியான மனிதர்.


“கருணை என்றால் ஒரு வரம்புதான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு. நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு. குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும். அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும். குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன.

அப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும் என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும்.



விருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும். எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல். மதம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ, தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும். இப்படி மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது. அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை. சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து வந்து நிற்பார்.


எவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம். அந்த சந்தோஷமான அமைதி தான் ஒருவரை குருவாக்குகிறது. சகலமும் அறிந்த சாந்தம் ஒருவரைத் தெளிவாக்குகிறது. தெளிவானவர் தான் குருவாக உருவாக முடியும். ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர். எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர்.

குரு எப்படி பேசுவார்.


“அவர் இளம் வயதில் மரணமடைந்து விட்டாரா என்ன செய்வது, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற சிறப்பு தான் உலகத்தின் இயல்பு . அடுத்தபடியாக ஆக வேண்டியதை கவனிப்போமே”

“அடடே.. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டதா . மிகவும் சந்தோஷம், பிறந்த குழந்தையின் மூலம் மகத்தான பணிகள் நிறைவேறட்டும், அன்பு பெருகட்டும், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அன்பு அதிகரிக்க வேண்டும், அன்புதான் சந்தோஷத்தின் வெளிப்பாடு. நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவதுதான். சந்தோஷத்தைத் தேடித்தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம்” என்று விளக்கிச் சொல்வார்.




“இந்த உலகத்தினுடைய பிரம்மாண்டத்தை, இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா. அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு ,அதற்கு ‘கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.


எது அது. என்ன உருவம் அது. என்ன தன்மை அது, என்ன வலிவு அது. அது எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள். நீ உண்மையாக இருப்பின் உனக்குள் எழும். அந்தக் கேள்விகளுக்கு பதில் நான் சொல்லி, நீ புரிந்து கொள்ள முடியாது, நீயாக அறிந்து கொள்ள வேண்டும். இதோ இந்தக் குடுவையிலிருந்து நான் தேன் குடித்து விட்டேன். தேன் மிகத் தித்திப்பாக இருக்கிறது, எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது என்று என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் உனக்கு அது புரியாது. நீ தேன் குடிக்கும் வரை உனக்கு அது தெரியாது. எனவே, என்னைத் தேன் எப்படியிருக்கிறது என்று கேட்பதை விட்டு விட்டு நீ குடி.”

ஒரு உத்தமமான குருவின் சத்தியமான வார்த்தைகள் இவைகள்.




தேன் குடித்தல் என்பது கடவுளைத் தேடுதல் என்று வைத்துக் கொள்வோம். அறிதல் என்று வைத்துக் கொள்வோம். வெறும் கடவுள் தேடுதல் மட்டும் சொல்பவரா குரு, இல்லை. நடுநிலையில் நிற்பவரின் மனம் எப்பொழுதும் கருணையில் ஊறி நிற்கும். நாம் அருகே நிற்க, அது நம் தலையைத் தொட, நம்மை அணைத்துக் கொள்ள, அதனுடைய கருணை நம்முடைய கருணையை ஊற வைக்கும். அவரோடு வெறுமே சுற்றி இருப்பதால், பார்ப்பதால், உட்கார்ந்து பேசுவதால் நம்மையும் மீறி, நமக்குள் ஒரு மலர்ச்சி ஏற்படும். இதுதான் சொல்லாமல் சொல்லுதல்.

“உன்னை மாற்றி விடுகிறேன், உனக்கு தீட்சை கொடுக்கிறேன், உனக்கு புதுப்பெயர் சூட்டுகிறேன்” என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு காசு வாங்காமல், தன்னுள் இருப்பதை உன்னுள் கொட்டிவிட்டு தனியே அமர்ந்திருக்கின்ற மிகப்பெரிய உன்னதம் குரு.


குருவை அனுபவித்தவன், குருவாவதற்கு எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அவன் வளர்ச்சியில் எந்தத் தடங்கலும் வராது. இது இந்துமதம் உணர்த்திடும் குருவின் தனிச்சிறப்பு.



- திரு பாலகுமாரன் எழுதி 2000ஆம் ஆண்டு வெளி வந்த 'குரு' என்ற புத்தகத்திலிருந்து....