Thursday, February 4, 2010

உடையார் - சில எதிரொலிகள்



பெருவுடையாரான இராஜராஜேச்சரமுடையார்க்கு, உடையார் இராஜராஜதேவர் எழுப்பிய ஆலயம் பற்றியும், அப்பேரரசன் காலத்து நிகழ்வுகளையும் கண் முன்னே காண்கின்ற அற்புதத்தைத் தகுதி உடையாரான தாங்கள் ‘உடையார்’ மூலம் சாதித்திருக்கிறீர்கள். வரலாறு எழுதும் எழுத்தாளர்களான எங்களது படைப்புகள் ஒரு போதும் கடைக்கோடியில் உள்ள ஒரு பாமரனிடம் சென்றடைந்தில்லை, காரணம் அவை புள்ளி விவரங்கள் தாம். அவை புள்ளி விவரங்கள் தாம், அந்தப் புள்ளிகளைக் கோலமாககிக் காட்டும் மாயாஜாலம் தங்களைப் போன்றவர்களால் மட்டுமே இயலும்.

உடையாரைப் படைப்பதற்கு தாங்கள் புரியும் களவேள்வி, கல்வெட்டுப் படிப்பு, தேடும் ஆதாரங்கள், உண்மை காண முயலும் தவிப்பு ஆகியவற்றை நன்கறிந்தவன் என்ற முறையில் எழுதுகிறேன். தங்களின் இப்புதினம் அஸ்வமேத வெற்றி. வரலாற்றில் ஒரு சில மாறுதல்களுக்காகச் சிலர் முணு முணுக்கலாம். ஆனால், அப்படியே வரலாறு எழுதுவது புதினமாகாது. ஆங்காங்கே கற்பனை எனும் தேனருவி பாய வேண்டும். அந்த அருவியின் குளிர்ச்சியை, மூலிகைக் கலப்பின் சுகத்தை என்னால் முழுதும் நுகர முடிந்தது. வரலாற்றுப் புதினம் எழுதுவது என்பது பின்னோக்கிப் பயணிக்கும் ஜால வித்தை. அப்பயணத்தில் எத்தனையோ மேடு பள்ளங்கள், வழுக்குப் பாறைகள், அத்தனையும் கடந்து வாசகர்களுக்கோர் சுகமான தடத்தைக் காட்டி, அதில் உடையாரைப் பயணிக்கச் செய்திருக்கிறீர்கள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இராஜராஜேச்சரமுடைய பரமசாமி என்றும் துணை நிற்பார்.

குடவாயில் முனைவர்
பாலசுப்ரமணியன்,
தஞ்சாவூர்.

2 comments:

said...

Thank you Thulasi.
At leisure, you may publish, all those letters on UDAYAR.
Namaskaram.
anbudan,
srinivasan.

said...

மிகவும் அருமை. தனி மனிதனைப் பற்றிய நெகிழ்ச்சியான விளக்கங்கள்! \

நன்றி!