Saturday, April 24, 2010

சூரியனோடு சில நாட்கள் - 5-- பாலகுமாரன் பேசுகிறார்

“ நகரத்துலேர்ந்து கொஞ்சம் தள்ளிப் போயிடணும். மனசுக்குப் புடிச்ச இடமா பார்த்து கொஞ்சம் நிலம் வாங்கணும். ஐநூறு மாடுகள் வளர்க்க, மேய்க்கத் தகுந்த இடமா வாங்கணும். அதாவது பால்பண்ணை. கொஞ்சம் தள்ளி பெரிசா ஒரு தோப்பு ஏற்படுத்தணும். குரங்குகளை அங்கு குடியேற வைக்கணும். கொஞ்சம் தொலைவா நின்னுகிட்டு அந்த குரங்குகளை வேடிக்கை பார்க்கணும், பிறகு மாடுகள் மேய்ச்சு, சுத்தம் பண்ணி, பால் திறந்து அப்படி வேலை செய்யணும்.

அந்தப் பண்ணைக்கு நடுவுல, இரண்டு ரூம், மூணு ரூம் இருக்கற வீடு கட்டிக்கிட்டு, நாம நடிச்ச படத்தை நாம போட்டு பார்த்துகிட்டு, அப்ப காமிரா பின்னால யார் இருந்தாங்க, என்ன நடந்தது, எப்படி அந்த படத்து கதை உருவாச்சுன்னு ரீ-கலெக்ட் பண்ணி உட்கார்ந்திருக்கணும். இப்படி ஒரு ஆசை என் மனசுல உண்டு.

இந்த வேலைகளுக்கு நடுவே தினமும் நேரம் கிடைக்கறப்ப ‘ஓம்’ங்கற சப்தத்துல மனசு லயிக்க வைக்கணும். எங்க வீட்ல பார்த்திருப்பீங்க,

எப்பவும் ஓம்னு ஒரு ஓலி வர்ற மாதிரி கேஸட் ஏற்பாடு பண்ணி, டேப் ரிக்கார்டர்ல போட்டு கேட்டுக்கிட்டு இருப்பேன். தியானம் பண்ற நேரத்தை அதிகமாக்கி, அந்த ஓம்கார ஒலியிலே மனச நிக்க வைக்கணும். விழிச்சு கண்ணு திறந்த உடனே மறுபடி மாடு, குரங்குன்னு வேல செய்ய வேடிக்கை பார்க்கப் போயிடணும்.

“மாடு-பால் பண்ணை புரியுது. எதுக்கு குரங்குகளுக்குன்னு தோப்பு வளர்த்து வேடிக்கை பார்க்கற விஷயம்”.

“ரொம்ப வேகமா சலனமாகிற மனசு குரங்கு. அதிகம் சலனமில்லாத,அதே சமயம் அப்படியே கல்லா நிக்கற மனசு பசு. இது இரண்டும் எனக்குள்ள இருக்கு. குரங்கை வேடிக்கை பார்க்கணும். பசுவோட பழகணும். குரங்கை வேடிக்கை பார்க்க வேடிக்கை பார்க்க, என் மனசு அதைவிட எவ்வளவோ மோசமா- தேவையில்லாது ஆடுதுன்னு புரியுது. குரங்கு குதி போடறதை, ஆடறதை சேஷ்டைன்னு சொல்றோம். அப்போ அதை விட அதிகமா ஆடற என் மனசை என்னான்னு சொல்றது.

ரோட்ல ஒரு ஆள் குடிச்சுட்டு விழுந்து கிடக்கான்னு வெச்சுக்குங்க, அதைப் பார்க்கறப்போ, இந்த முட்டாள்தனம் செய்யவே கூடாதுன்னு தோணுதில்ல. அதே மாதிரி குரங்கு ஒரு இடத்துல உட்கார்ந்து அலைஞ்சுக்கிட்டே இருக்கறத பார்க்கற போது, அலையற மனசை கண்ட்ரோல் பண்ற எண்ணம் வரும். அதாவது குரங்கை உத்துக் கவனிக்கற மாதிரி அலையற மனசை, குதி போடற மனசை, உத்துக் கவனிக்க ஆரம்பிச்சுருவோம்.

நம்ம மனசை நாமே உத்துப் பார்க்கறப்போ அது கொஞ்சம் கொஞ்சமா ஒரு நிதானத்துக்கு வந்துரும். இதுதான் என் எதிர்காலத் திட்டம். இது யோக சாதனையா, இல்லே, வெறும் விஷயமா, தெரியாது.

ஆனா இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை வாழணும்னு மனசுல ஒரு திட்டம், ஆசை இருக்கு. இந்த மாதிரி விஷயங்களுக்கு வாத்தியாரா ஒருத்தர்கிட்ட போகாது யாரையும் போய் இது என்ன, இது எப்படின்னு விசாரிக்காது, மனசுல பட்டதை மனசுல பட்ட விதமே நடத்திவிட்டுப் போறாது நல்லதுன்னு தோணுது. பாடம்னு கேட்கப்போனா பத்துவிதமான ஆட்கள் பத்து விதமான அபிப்பிராயத்தோட வராங்க.

இவரு தப்பு, அது சரி, இப்படி தப்பு, அப்படி சரிங்கறாங்க. மனசுக்குத் தெரியும், கவனமா உத்து கேட்டா சரியான வழி மனசு காட்டும். மனசுதான் சரியான குரு.

மனசு குருன்னு ஏத்துக்கிட்ட பிறகு அடடா அவரு அப்படி செய்யறாரே.. இது நல்ல மெத்தேடா தெரியுதேன்னு ஜகா வாங்கக் கூடாது. சரியோ, தவறோ; நல்லதோ, கெட்டதோ மனசு சொல்ற வழில போகணும்.
இந்த மனசு குருன்னு வெச்சுக்கறபோது ரொம்ப பிடிவாதமும் தேவையில்லை. கடவுளைப்பார்த்துட்டு தான் மறுவேலைன்னு ராப்பகலா வெறி புடிச்சா மாதிரி மாறிடக்கூடாது.

கடவுளை பார்க்க முடிஞ்சபோது பார்க்கலாம்ன்னு நிதானமா இருக்கணும். அதே சமயம் நிதானம் சோம்பலாயிடக்கூடாது. ஒரு மென்டல் பேலன்ஸ் வேணும். இதை ரஜனீஷ் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அப்பப்ப புனால இருக்கற ஆஸ்ரமம் போவேன். நல்ல சிநேகிதர்கள் அங்கே இருக்காங்க. அங்க போய், ஆறு நாள், ஏழு நாள் எல்லாம் மறந்துட்டு இருப்பேன். ஒரு புது உணர்வோடு நிறைவோட திரும்பி வருவேன்.

பகவான் ரஜனீஷ் ஒரு முழுமையான குரு. திறந்த மனசோட அவரைப் படிச்சா பல விஷயங்களை சரியான கோணத்துல புரிஞ்சுக்க முடியும். ரஜனீஷ் புரிஞ்சுக்கறதுக்கு முன்னே நமக்கு தெரிஞ்ச விஷயங்களிலேர்ந்து விடுபடணும். நாம நினைச்சுட்டு இருக்கற கடவுள், மதம், பூசாரி, ஆச்சாரம், பூஜை இதுலேர்ந்து விடுபடணும். இப்படி விடுபடறது எல்லாருக்கும் கஷ்டம். அதனால்தான் ரஜனீஷ் பத்தி நான் அதிகம் யார்கிட்டயும் பேசறதில்லை.

எங்க குருன்னு அவரை யார் கிட்டயும் அறிமுகப்படுத்தறதில்லை.

ஆமா..நான் ஒண்ணு கேட்கறேன், தப்பா நினைக்காதீங்க, தியானம், ஹடயோகம் இப்படி ஏதேதோ பேசறீங்க. ஆனா இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்களே.. பாலகுமாரன், இது சரியா, சுத்திப் பாருங்க. ஒண்ணு ரெண்டு, மூணு ,நாலு பத்து பன்னிரெண்டு. அடேங்கப்பா... ஒன்னவர்ல பன்னிரெண்டு கிங்சைஸ் சிகரெட்டா. ஜாஸ்தி இல்லே. அதே சமயம் இருமறதில்லையே நீங்க, அது எப்படி.”

ரஜினியின் நீண்ட விளக்கத்தின் கடைசியாய் என் முதுகில் ஒரு கேள்விக் குத்து விழுந்தது. நான் சட்டென்று இருண்டேன். என் சிகரெட் பழக்கம் பலர் சுட்டிக் காட்டி இடித்துரைத்த விஷயம்தான். ஆனால் ஒன்று, பதிலுக்கு பதில் என்பது போல் தியானம் பற்றி பேசுகிற நீ என்ன யோக்கியதையில் சிகரெட் பழக்கம் தொடருகிறாய்.ஏன் மனக் கட்டுப்பாடு இல்லை. இது தீயது என்று தெரிந்தும் ஏன் விட முடியவில்லை என்று சொல்லாது சொல்லப்பட்டது.

முதன் முறையாய் என்னைச் சுற்றி நான் போட்ட சிகரெட் துண்டுகள் அசிங்கமாகத் தெரிந்து எனக்கு.ரஜினிகாந்த் என் சிகரெட் பழக்கம் கேட்டு விட்டு, சாதாரணமாய் படப்பிடிப்புக்கு எழுந்து போய் விட்டார். நான் தொடர்ந்து புகைப்பிடித்தபடி யோசித்தேன்.

இதைவிட முடியாதா, இந்த கொடிய பழக்கத்திலிருந்து என்னால் நகர முடியாதா. என் மனம் இதற்குப் பக்குவப்படவில்லையா. ஆமெனில் என் தியானத்திற்கு-அது தொடர்பான பேச்சுக்கு என்ன மதிப்பு. அன்று இரவும் சிகரெட் பிடித்தேன். யோசித்தேன். என் மனம் ஒரு அளவுக்கு பக்குவப்பட காரணமாய் இருந்த என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் நோக்கி மனசுள் பேசினேன்.

‘சிகரெட் பழக்கம் விட விரும்புகின்றேன். உதவி செய்ய வேண்டும். தயவு செய்து இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தும் வலிவு தர வேண்டும்.’ கெஞ்சினேன். ‘ஆமா நீங்க ஏன் இவ்ளோ சிகரெட் பிடிக்கறீங்க.’ ரஜினியின் கேள்வி காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

மனசு சிகரெட் எடுக்கும் போதெல்லாம் பிரார்த்தனையை குரு நோக்கி செய்தது. நவம்பர் மாதம் முப்பதாம் தேதி இரவு ஒரு பாக்கெட் சிகரெட்டோடு உட்கார்ந்து, தொடர்ந்து ஒன்பது சிகரெட்டுகள் பிடித்துவிட்டு, பாக்கெட்டை கசக்கிப் போட்டேன்.

இன்று வரை ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை. எரிச்சல் இல்லாது, பல்கடித்து வேதனைப்படுத்தும் கொடூரம் இல்லாது, சிகரெட் பிடிக்கும் பழக்கம் என்னை விட்டு அகன்று விட்டது.

இனி எந்தக் காரணம் கொண்டும் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்பது எனக்குள் உறுதியாகி விட்டது.

3 comments:

said...

Extremely Good. Each & Every words in Ayya's Novels are really truth and teach us the ethic on every reading. So I couldn't express about my thought or feeling about Iyya's novels. I immersed myself while reading his books.

Thanks a lot Krishnatulasi Avarkale. Mikka Nandri.

said...

எந்த ஒரு விஷயம் என்றாலும் குருவின் அனுக்கிரகத்தினாலும், வைராக்கியத்தினாலும் வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்தை மிக எளிமையாக ஐயா உணர்த்தியுள்ளார். இன்று பல தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைஞர்கள் செயல்படுத்த வேண்டிய விஷயம் இது.
நன்றி.

கலைவினோத்

said...

இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன் என்றாலும், மீண்டுமொரு முறை, இப்படி பகுதி பகுதியாக படிக்கும் போதும் சுவாரசியமாகவே இருக்கிறது...

மிக்க நன்றி கிருஷ்ணதுளசி சார்...