Thursday, April 29, 2010

பாலகுமாரன் பேசுகிறார் - சில கேள்விகள் - சில பதில்கள்

ஐயா, வினாயகருக்கு ஏன் யானைத்தலை, நான் அந்தக் கதையை கேட்க வில்லை. அதனுடைய கருத்தைக் கேட்கிறேன் எனக்கு விளக்குவீர்களா.




பெரிய காதுகள், சகலத்தையும் கேட்கும் திறன், சிறிய ஆனால் கூரிய கண்கள், தொலைதூரம் பார்க்கும் திறன், மிகப் பெரிய தலை. ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன். அதுமட்டுமில்லாது வேறு எந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்த தும்பிக்கை. நீண்ட மூச்சை உள்ளிழுத்து மிக நீளமாக வெளியே விடுவது என்கிற விஷயம் யானைக்கு மட்டுமே உண்டு. சிறிய அளவில் மூச்சுகள் இழுத்து வெளியிடுவதில் ஆயுசு குறைவும், நோயும் ஏற்படும். ஆனால் துதிக்கை நீளம் மூச்சை இழுத்து நுரையீரலுக்குப் போக வேண்டியிருப்பதால், யானை இயல்பாகவே நீளமாக மூச்சை இழுத்தும், நிதானமாக மூச்சை விடுவதும் செய்ய வேண்டியிருக்கிறது. இதனாலேயே மற்ற மிருகங்களை விட இது அதிக காலம் நோயின்றியும் வாழ்கிறது.

மறுபடியும் சொல்கிறேன், நீண்ட வாழ்க்கை. அதற்கான நீண்ட சுவாசம், அதனால் ஏற்படும் கூர்மையான புத்தி, தொலை தூரப்பார்வை, அந்த அமைதியால் விளையும் கேட்கும் திறன். இவையே கணபதி. இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரங்கள். இந்தத் தூண்கள் மீதே கெளரவம், புகழ், பணம் போன்றவை விதானங்களாக கட்டப் பெறுகின்றன என்பதை உணர்த்தவே வினாயகர் உருவம். உங்களுக்கு இப்பொழுது வினாயகரைப் புரிகிறதா.

இந்து மதத்தில் ஒரு முக்கியமான விஷயம், உங்களை கட்டளையிட்டு விஷயம் செய்யச் சொல்வார்கள். வினாயகரை வணங்கு. யானைத் தலையுடைய பொம்மையை வணங்கு என்று சொல்வார்கள். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏன் யானைத்தலை என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏன் உருவ வழிபாடு என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடவுளை அடைய மிகச் சிறந்த வழி எது என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்கத் தலைப்படவேண்டும். உங்களுக்குள் நீங்களாகவே கேள்வி கேட்டுக் கொள்ளும் தன்மையை வளர்ப்பதே இந்து மதம்.



ஐயா, உருவவழிபாடு தவறு என்று அடித்துச் சொல்கிறார்களே? இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?




உங்களை நீங்கள் உருவமாக கொண்டுள்ள வரையில் உருவமற்றதை உங்களால் வழிபட முடியாது. உங்களை நீங்கள் உருவமாக கொள்ளாதிருப்பது என்பது எளிதில் நடக்கும் விஷயமல்ல, நீங்கள் உங்களை உருவமாக கொண்டால், உங்களுக்கு வணங்கவும் ஒரு உருவம் வேண்டும். அது கை,கால் உள்ளதாக இருக்கும் அல்லது வேறு விதமாகவும் இருக்கும். அடையாளமின்றி வழிபாடு சிறக்காது.

தன்னை உணர்ந்தவரே , தன்னை மறந்தவரே, கடவுள் என்கிற உருவத்தையும், வழிபாட்டையும் மறந்து விட முடியும்.


ஐயா, நாத்திகவாதம் பேசுபவர்களை உங்களுக்கு அறவே பிடிக்காதா?


அடடே.. யார் சொன்னது. நாத்திகம் பேசுகிற உத்தமர்களெல்லாம் இருக்கிறார்களய்யா. கடவுள் என்பது எனக்கு சரியாக நிரூபிக்கப்படவில்லை, வெறுமே வெற்று நம்பிக்கையை வைத்துக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்ளுதல் என்பது என்னால் இயலாது. எனினும் இப்பூமியில் வாழ கடவுளின் அவசியம் எனக்குத் தேவையில்லை. அதுவொரு சுகமான கற்பனையாக இருந்தாலும், என் யதார்த்த வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறதென்று மிக அமைதியாக கடவுளை மறுத்துவிட்டு தன்னுடைய தினசரி காரியங்களில் முழு கவனம் செலுத்துகிற நல்லவர்களை நான் அறிவேன்.

நாத்திகர்களை விட கடவுளை தெரியும் என்று அலட்டுகிற ஆத்திகர்கள் தான் அபாயமானவர்கள். கேவலமானவர்கள். எதுவும் தெரியாமலேயே எந்த பயிற்சியும் இல்லாமலேயே உள்ளுக்குள் ஆழ்ந்த எந்த சிந்தனையும் இல்லாமல் வெறுமே தன்னை துளசிமாலைகளாலும், ருத்ராட்சங்களாலும் அலங்கரித்துக் கொண்டு தனக்கு எல்லாமும் தெரிந்துவிட்டதாய் சிலரை ஏமாற்றி, பலரை ஏமாற்ற, பல இளைஞர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியத்தை அறிய மிக மிக சத்தியமாக இருக்க வேண்டும். தனக்குத்தானே உண்மையாக இருப்பது என்பது ஒரு பெரிய தபஸ். அது எளிதல்ல.

பல ஆத்திகவாதிகள் இங்கு பொய்யர்கள், திருடர்கள். உண்மையை தேடிக் கொண்டிருப்பவன், சத்தியத்தோடு வாழ்பவன், தன் வேலையை அமைதியாக செய்து கொண்டிருப்பான். யாரிடமும் போய் என்னைப் புரிகிறதா என்றோ அல்லது என்னைப் புரிந்துகொள் என்றோ கேட்கமாட்டான். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டான். அருகே வா, உன்னை குணப்படுத்துகிறேன். என்னிடம் வா. உன் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன் என்று கடவுளை அறிந்தவன் சொல்வதில்லை. சம்பந்தப்பட்டவரின் பிரச்சனைகளை கேட்ட மாத்திரத்தில் பரிதவித்து எழுந்து, அவருக்காக உருகி நிற்க, சம்பந்தப்பட்டவரின் பிரச்சனை தானாக காணாமல் போகும். என்னால் காணாமல் போயிற்று என்று சொல்லவும் அந்த சத்தியசந்தனுக்கு மனம் வராது. மறுபடியும் வியப்பு தான் ஏற்படும். என்ன உன் கருணை என்று கடவுள் மீது மிகப்பெரிய கனிவும் ஈடுபாடும் அதிகரிக்கும்.

ஆத்திகம் என்பது அன்பே வடிவாய் இருப்பது.


ஐயா, பல பத்திரிகைகளில் வட மொழியில் பிரார்த்தனைகள் எழுதி இதைச் சொன்னால் சகல துன்பங்களும் விலகிப் போகும்,என்று சொல்கிறார்கள், அல்லது இந்த மாதம், இந்த மந்திரம் சொல்லுங்கள் என்று எழுதுகிறார்கள். வடமொழி எனக்கு அறவே தெரியாது. அதை மனனம் செய்து சொல்வதும் கூட நான்குவரியாக இருந்தாலும் சிரமமாக இருக்கிறது.வடமொழிக்கு இணையாக தமிழில் பாடல்கள் இல்லையா?


ஏன் இல்லை. நிறைய இருக்கின்றன. அபிராமி அந்தாதியும், வேயுறு தோளிபங்கண் என்று துவங்குகின்ற பாடலும், திருஞான சம்பந்தருடைய சில பதிகங்களும், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உருக்கமாய் எழுதப்பட்ட வேண்டுதல்களும் சொல்ல சொல்ல, உங்கள் மனகனத்தை குறைத்து தெளிவை அதிகரித்து மகிழ்ச்சியைக் கொடுக்கவல்லன. திருஞான சம்பந்தர் தேவாரமும் சொல்வதற்கு கடினமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் வெறுமே கடவுள் பெயரை சொல்லிக் கொண்டிருப்பது போதும் என்று எனக்குத் தோன்றுகிறது.

சில சமயம் தமிழ் பதிகங்களும் சொல்வதற்கு கடினமாக இருப்பதுண்டு. படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்கியம் வந்து விட்டால் எதுவும் எளிதாக இருக்கும். மேம்போக்காக இருப்பின் இறைவன் நாமத்தைச் சொல்வதுகூட கடினமாகத் தோன்றிவிடலாம்.



ஐயா, விதி என்று ஒன்று முன்பே எழுதப்பட்டு விட்டதாகக் கொண்டால் எதற்கு இறைவழிபாடு என்ற ஏமாற்று வேலை?


இதற்கு உண்டான பதிலை நிதானமாக யோசித்து புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு தெளிந்தவர்களுக்குத் தேவையே இல்லை. அது நொய்மையான மனங்களின் செயல். சற்றுப் பேராசையுள்ளவர்களின் சிந்தனை. ஆனால் தெளிந்தவர்கள் கூட அன்பு மிகுதியினால், நொய்மையான மனங்களைத் தேற்றும் பொருட்டு பிரார்த்தனை செய் என்றும், இந்தவிதமான வேண்டுதல் நடத்து என்றும், அதற்குண்டான பாடல்களை இயற்றியும் வழிநடத்தியிருக்கிறார்கள். இறைவழிபாடு அவசியமே இல்லை என்பதுதான் இந்திய சித்தர்களின் கருத்து.

விதி என்ன எழுதியிருக்கிறது என்று கவலைப்படாமல் இப்படி உதவி செய், இன்ன வரம் கொடு என்கிற ஆசைப்படல்தான் பிரார்த்தனை. ஆசைப்படாதிருக்க, அதாவது பிரார்த்தனை செய்யாதிருக்க மிகுந்த தெளிவும், திடமும் வேண்டும்.

எனக்கு அத்தனை திடமில்லை. தன் திடம், தெளிவு பற்றி ஒவ்வொருவரும் தானே தன்னைப் பார்த்து தெளிந்து கொள்ள வேண்டும்.

5 comments:

said...

நல்ல சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றி.

said...

வணக்கம்,

பிள்ளையாரைப் பற்றி ஐயா அவர்கள் ஒவ்வொரு விஷயமாக கூறியுள்ளது மிகவும் அருமை. இதற்கு முன்பு குழந்தைகள் இந்த பிள்ளையாருக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி முகம் உள்ளது என்று கேட்கும் போது, எங்களால் அந்த அளவுக்கு விவரமாக சொல்ல முடியவில்லை. இப்பொழுது எங்களால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சொல்ல மிகவும் உதவியாக உள்ளது.

கலைவினோத்.

said...

Vanakkam Krishna Thulasi,
Namaskaram to Iyya. Vinayagar Patri iyya kooriya vilakkathai nan katru konden. en pillaiku nan solla ubayogamaga irukum.
Nandri.
-Rekha Manavazhagan-

said...

மிக மிக நல்ல பதிவு திரு.கிருஷ்ண துளசி அவர்களே....

பாலகுமாரன் அவர்களின் கேள்வி பதில்களை ஒரு புத்தகமாக கொணரும் எண்ணம் அவருக்கு உள்ளதா?

அப்படி வெளிவந்தால், அது பல பேருக்கு பயனளிக்கும்...

said...

After reading the answers for the questions which asked to Balakumaranji, one will sure will start thinking in deep. That thinking will get lot more clarity and they can explain any other later on this topics. Fantastic effort and kudos to Krishna Thulasi. My namaskaram to Balakumaranji.