Wednesday, November 7, 2012

இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கேட்கிறார்களே ..... உங்களுடைய அபிப்ராயம் என்ன ?

                  சமீபத்தில் மிகக் கோரமான பட்டாசு வெடி விபத்துகளின் படங்களை பெரிதாகப் போட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அந்த வெடி விபத்துக்குக் காரணம் பட்டாசு வெடிக்கிறவர்கள் தான் என்பது போல சொல்லியிருக்கிறார்கள். இதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. பட்டாசு வெடிப்பதும், தயாரிப்பதும் கொஞ்சம் ஆபத்தான வழிதான்.  வருடா வருடம் பட்டாசு வெடி விபத்து நடந்து கொண்டுதான்  இருக்கிறது.  பட்டாசு தயாரிப்பில் அதிகம் ஆபத்து என்றால் கூட தீக்குச்சி தயாரிப்பிலும் வெடி விபத்து நிகழ்கிறது. தீக்குச்சி அவசியமா என்று கேட்பதில்லை.

                      பட்டாசு அவசியமில்லை என்று இளைஞர்களோ, சிறுவர்களோ சொல்லமாட்டார்கள்.  பட்டாசு ஆர்வம் குறைந்தவர்கள் தான் சொல்வார்கள்.
 பட்டாசை குறைந்த வயதினர் தான் சந்தோஷமாகக் கொளுத்தி அதன் சத்தத்தை, வர்ணத்தை , சீறலை ஒரு பயம் கலந்த தவிப்போடு அனுபவிக்கிறார்கள்.  ஒருவித வன்முறை இந்த பட்டாசு வெடிப்பதில் இருக்கிறது.  சீறலும், வெடிசத்தமும் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன.
நடுங்க  வைக்கின்றன.  அந்த த்ரில் தேவையாக இருக்கிறது.  ஒரு ரசனையாக இருக்கிறது. பட்டாசு காயப்படுத்தும் என்று தெரிந்தும் அதற்கிடையே
புகுந்து புறப்படுகிறவர்கள் இளைஞர்களோ அல்லது இள வயது மனம் கொண்ட மனிதர்களோ தான்.

                      இந்த குறுகுறுப்பான பயம் கலந்த குதூகலிப்பு மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த குறுகுறுப்பு கலந்த திகிலை நாம் அனுபவிக்கலாம்.  இது அடிப்படையாக மனிதர்கள் விரும்பி அனுபவிக்கிற ஒரு சுவை. அதனால் தான் பட்டாசு மிக முக்கியமானதாக, சந்தோஷமூட்டுவதாக இருக்கிறது.

                         விபத்து நிகழ்கிறதே. நீங்கள் வாங்குவதால் தானே இத்தனை உயிர்கள் சாகின்றன என்றெல்லாம் கேட்கலாம்.  விமான விபத்துகள் வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் இதுவரை கருகி அடையாளம் தெரியாமல் மரணமடைந்திருக்கிறார்கள். விமானம் வேண்டுமா என்று யாருமே கேட்பதில்லை. நீண்ட நெடிய கப்பல் பயணங்களில் லட்சகணக்கான பேர் இருக்கிறார்களா , தப்பித்தார்களா என்று அடையாளம் காண முடியாதபடி இறந்து போயிருக்கிறார்கள். கப்பல் பயணங்கள் எதுவும் நின்றுவிடவில்லை.

                       நாம் அடிக்கடி பயணப்படுகின்ற ரயிலில் இதுவரையில் நிறைய பேர்  இறந்திருக்கிறார்கள். ஒரு நாள் கூட ரயில் ஓட்டம் நின்று விடவில்லை.

                   இவை அத்தியாவசியமானவை. பட்டாசு அனாவசியமானது என்று வாதிடலாம்.  வாணவேடிக்கை என்பது தீபாவளிப் பண்டிகையோடு
மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. பொதுமக்கள் வெடிப்பதைக் காட்டிலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, தலைவர் பிறந்த நாள் விழா, நினைவு
நாள் , ஒலிம்பிக், ஓட்டப் பந்தயம், கிரிக்கெட் , கால்பந்து என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மிக வேகமாக, மிக உற்சாகமாக பலநூறு மடங்கு
பலம் கொண்ட விதவிதமான வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு பண்டிகையோடு அந்த சந்தோஷம் நின்று
விடாமல் அந்த பண்டிகையின் சந்தோஷத்தை பல்வேறு விஷயங்களுக்கு அவர்கள் எடுத்து வருகிறார்கள். வெடிச்சத்தம் இல்லாமல் போகும் பிணம்
தமிழ்நாட்டில் மிகக் குறைவு.

                  திருவிழாக்களில் முத்தாய்ப்பாக, தேர்தல் வெற்றியில் முத்தாய்ப்பாக இரவு பதினொறு மணிக்கு மேல் வாணவேடிக்கை என்று போஸ்டர் அடித்து பட்டாசு வெடிக்கிறார்கள்.

                     இப்படி எல்லா விஷயத்திலும் நீக்கமற பட்டாசு சத்தம் நிறைந்திருக்கையில் தீபாவளிப் பண்டிகையை மட்டும் குறை சொல்வது என்பது  தவறான மனப்பான்மை. இந்த விபத்துகளுக்கு பட்டாசு தயாரிப்பவர்களும், பட்டாசு தயாரிக்கும் போது கவனக்குறைவான தொழிலாளர்களும் தான் காரணம். சில நட்சத்திர ஓட்டல்களில் அறையில் லேசான புகை ஏற்பட்டாலும் அலார சத்தத்தோடு நீர் பீய்ச்சி அடிக்கின்ற கருவிகள் எல்லா அறைகளிலும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அறையில் பத்து பேர் ஒன்று கூடி சிகரெட் பிடிக்க திடீரென்று மேலே இருந்து தண்ணீர் பீய்ச்சப்பட்டது. புகையின் அடர்த்தி அதிகமானதால் அந்த அபாய எச்சரிக்கை ஒலிக்கத் துவங்கிவிட்டது. அப்படி ஏதேனும் ஒரு வசதி பட்டாசு தயாரிப்பு இடத்தில் இருக்க வேண்டுமென்று யாரேனும் சொல்லியிருக்கிறார்களா?  இப்படி ஒரு சிந்தனை அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? ஏற்பட்டால், அதைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

                          இந்துமதப் பண்டிகையோடு சம்பந்தப்பட்டது என்பதாலேயே பட்டாசால் விபத்து ஏற்படுகிறது . அதை வெடிக்க வேண்டாம் என்று சொல்வது அத்தனை குணமுள்ள விஷயமாக எனக்குத் தெரியவில்லை.  யாருடைய சந்தோஷத்தை பறித்துப் போகிறோம் என்பதை யோசிக்கவில்லை. இந்தத் தயாரிப்பில் விபத்து ஏற்படுகிறது என்பதை மட்டும் பார்த்தால் , தீக்குச்சி கூட தயாரிக்கக்கூடாது; தடை செய்யப்பட வேண்டும். 

                         ஆனால், மறுபடியும் இந்த உயிரிழப்பைப் பற்றி கவலைப்படாமல் பட்டாசு தயாரிக்கின்ற நகரங்கள், கிராமங்கள் முழு மூச்சோடு செயல்படுகின்றனவே, என்ன காரணம் ? இனி இந்தக் கிராமங்களில் பட்டாசு தயாரிக்க மாட்டோம் என்று யாரேனும் மறியல் செய்திருக்கிறார்களா ? மறுபடியும் முழுவீச்சில் பட்டாசு தயாரிக்கிறார்களே , என்ன காரணம் ? விட்டு விலகி வரமாட்டேன் என்கிறார்களே, எதற்காக அப்படி செய்கிறார்கள் ? இது ஆராய வேண்டிய விஷயம்.

                          இதையெல்லாம் யோசிக்காது, ஒரு இந்துமதப் பண்டிகையின் சந்தோஷத்தில் கை வைப்பது அத்தனை குணமுடைய விஷயமல்ல. மத்தாப்பு வெளிச்சத்தில் இளைஞனைப் பார்க்கின்ற யுவதியும், யுவதியைப் பார்க்கின்ற இளைஞனும், குழந்தைகளும், பெரியவர்களும் வெடிச்சத்தத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்ற மனிதர்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.


                         சில மத போதகர்கள் ஏதேனும் ஒரு வகையில் இந்துமதத்தை குறை சொல்ல வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன்பு இதைப் பற்றி
பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை. என்ன விலை கூடினாலும் அற்புதமான வியாபாரமாகத் தான் பட்டாசு இருந்திருக்கிறது. ஊர் மைதானத்தில் இடம்  போட்டுத் தருகிறேன் .இங்கு தனியாக வியாபாரம் செய் என்ற உத்தரவையும் வியாபாரிகள் புலம்பலாக மறுத்திருக்கிறார்கள்.

                            'அய்யோ வியாபாரம் போச்சே' என்று தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் புழங்கும் இடத்தில் வர்ண விளக்குகளின் ஒளியில் அலங்காரமாக அடுக்கப்பட்ட பட்டாசு வகைகள் தடுக்கப்பட முடியவில்லை.  அந்த பட்டாசின் மீது ஜனங்களுக்கு உள்ள ஆர்வத்தை
எதனாலும் குறைக்க முடியவில்லை. 

                            ஜனங்கள் பட்டாசு வெடிப்பதை குறை சொல்வதை விட, அவை தயாரிக்கும் முறை பற்றி தெரிந்தும் அதற்கு சீரான ஒரு தீர்வு காணாமல், தீபாவளிக்குப் பட்டாசு அவசியமா என்பது வெறும் அலட்டல் தான்.

                             இது என் அபிப்ராயம்.

1 comments:

said...

நீங்கள் சொல்வதெல்லாம் சரி... வீட்டில் குழந்தைகளே பட்டாசு வேண்டாம் சென்று சொல்கிறார்களே...