Monday, September 27, 2010

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”.

உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.

அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.

வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.

அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.

காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.

குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.

தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.

இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை. பணிவு கலந்த வணக்கம் அல்லது அமைதி எப்படி ஏற்படுகிறது என்பதை, ஏற்படவேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.

0 comments: