கடவுள் என்ற விஷயத்தை வேத விவகாரமாக எடுத்துக்கொண்டு தனக்குள் மூழ்கி, மற்ற எண்ணச்சலனங்களை நிறுத்தி, தான் எது என்பதை அறிந்து கொண்டு தெளிவது மிகுந்த சிறப்புடையது। ஆனால். அது எளிதில்லை. எல்லோராலும் கைகொள்ளும் விஷயமில்லை.
அதற்கு பதிலாய் உலக வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தேடி அது நிறைவேறுவதற்காக, எங்கும் பரந்து எல்லாமுமாய் இருக்கின்ற இறைவனை நோக்கி கைகூப்பி எனக்கு இதைக் கொடு என்று இறைஞ்சுவது மனிதர்கள் இயல்பு. எது எல்லாமுமாய் எங்குமாய் இருக்கின்ற இறைவன் என்று யோசித்து உள்ளுக்குள்ளே அதைத் தேட முற்படும்போது, தன்னுடைய மனதின் மீது மனம் பலமாகப்படுகிறது ஒரு புள்ளியில் மனம் ஆழ்ந்து நிற்கிறது. அதனால் பதட்டங்கள் நீங்கி அமைதி ஏற்படுகிறது. தனக்குள்ளே தானே, தன்னைப்பற்றி யோசித்து, தன்மீது அதிகப்படியான நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
விநாயகா.. வெங்கடாஜலபதி.. மூகாம்பிகைத்தாயே.. என்று கை கூப்புகிற போதே நான் என்னை நோக்கி கைகூப்பி, என்னைப்பற்றி எனக்கே சொல்கிறேன். எனக்கு இது வேண்டும். இதிலிருந்து என்னைக் காப்பாற்று என்று சொல்கிறபோது அந்த விஷயம் நோக்கி நான் அதிகம் மும்முரமாகிறேன். அதற்காகக் கடுமையாக உழைக்கிறேன்.
பிரார்த்தனை என்பது நெஞ்சோடு புலத்தல். தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல். தனக்குத்தானே பேசி தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுதல். தனக்குத்தானே பேசிக்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்ளுவதற்கு கடவுள் என்கிற உருவமற்ற, எங்கும் நிறைந்த ஒரு சக்தி மனித குலத்திற்கு அவசியம். இதன் பொருட்டுதான் இந்தக் கடவுளைப்பற்றி பிரசாரம் செய்திருப்பார்களோ, தனக்குத்தானே பேசிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்திருப்பார்களோ, ஆலயம் என்ற ஒரு இடம் கொடுத்திருப்பார்களோ. ஹோமம், யக்ஞ்ம் என்ற நியதியை ஏற்படுத்தியிருப்பார்களோ என்றும் தோன்றுகிறது.
பிரார்த்தனைதான் உண்மையான ஹோமம்। உடம்புதான் ஆலயம். உள்ளே “தான்” என்று கொள்கின்ற அந்த நினைப்புதான் கடவுள். தன்னை நோக்கி தான் பேசுதலே மிகப்பெரிய மந்திரஜபம்.
தன்னுள் மூழ்கி தான் யாரென்று தேடமுடியாதவரை ஞானிகளும், ஞானிகள் ஏற்படுத்திய மதங்களும் இப்படித்தான் வழிப்படுத்துகின்றன। பிரார்த்தனை செய் என்று தூண்டுகின்றன. செய்வன திருந்தச்செய் என்பது மகா வாக்கியம்.
பிறருக்கான வேலையில் கூட ஏமாற்றுதல் இருக்கலாம். தனக்குத்தானே பேசிக்கொள்வதில் ஏமாற்றுதல் இருந்தால், அதைவிட முட்டாள்தனம் உண்டா? தான் செய்கின்ற பிரார்த்தனையில் கூட அக்கறையின்மையும் ஒருமுகப்படுத்தலும், கவனமும் இல்லாமலிருப்பின் வாழ்வதில் அர்த்தமுண்டா.
என்ன வேண்டும் என்பதைகூட சரியாகக் கேட்கத் தெரியாவிட்டால், உண்மையாகக் கேட்கத்தெரியாவிட்டால் வாழ்க்கை மிகப்பெரிய அபத்தமாகப் போய்விடும்.
பிரார்த்தனை செய்ய யார் கற்றுக் கொடுகிறார்கள்? யார் தூண்டுகிறார்கள்?.
தாயோ.. தந்தையோ.. நண்பரோ இதற்கு உதவி செய்ய முன்வரினும் உங்களுடைய துக்கம்தான், உங்கள் துக்கத்திலிருந்து எழுகின்ற உங்கள் ஆசைதான் உங்களை பிரார்த்தனை செய்ய மும்முரப்படுத்தும். பிரார்த்தனைகள் மேம்போக்காக இல்லாமல் ஆழமாய் இருக்க நம்முடைய வேதனைகள் உதவி செய்யும்.
(பாலகுமாரன் – சில கோயில்கள் சில அனுபவங்கள் - குமுதம் பக்தி - ஜனவரி 1-16-2008)
என்ன வேண்டும் என்பதைகூட சரியாகக் கேட்கத் தெரியாவிட்டால், உண்மையாகக் கேட்கத்தெரியாவிட்டால் வாழ்க்கை மிகப்பெரிய அபத்தமாகப் போய்விடும்.
பிரார்த்தனை செய்ய யார் கற்றுக் கொடுகிறார்கள்? யார் தூண்டுகிறார்கள்?.
தாயோ.. தந்தையோ.. நண்பரோ இதற்கு உதவி செய்ய முன்வரினும் உங்களுடைய துக்கம்தான், உங்கள் துக்கத்திலிருந்து எழுகின்ற உங்கள் ஆசைதான் உங்களை பிரார்த்தனை செய்ய மும்முரப்படுத்தும். பிரார்த்தனைகள் மேம்போக்காக இல்லாமல் ஆழமாய் இருக்க நம்முடைய வேதனைகள் உதவி செய்யும்.
(பாலகுமாரன் – சில கோயில்கள் சில அனுபவங்கள் - குமுதம் பக்தி - ஜனவரி 1-16-2008)