Monday, September 27, 2010

பாலகுமாரனின் ஸ்ரீ ரமண மகரிஷி

'இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.


' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.


வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.


............பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மீகத் தொடர்

16 comments:

said...

:)

said...

அற்புதமான பதிவு. கோடான கொடி நன்றி பாலகுமாரன் ஐயா. நன்றி திரு க்ருஷ்ணதுளசி அவர்களுக்கும்.

said...

நன்றி ராஜா..

விவரிக்க முடியாத விஷயத்தை மிக விவரமாக விளக்கியதைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை தான்..

said...

நன்றி சக்திபிரபா...

said...

வாவ்!!

said...

நன்றி குமார்...

said...

அன்புள்ள ஸ்ரீ துளசி
வணங்கி மகிழ்கிறேன்.
மிக சிரேஷ்டமான விஷயத்தை கனிவோடு தொகுத்து பகிர்ந்த அந்த நல்ல அன்புக்கு வணங்கி என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களின் நமஸ்காரங்களை ஐயாவுக்கு தெரியப்படுத்தவும்.
மிகுந்த நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.

said...

ஆஹா! பகவான் ஸ்ரீ ரமணரின் இறந்துபோதலின் அனுபவத்தை ஐயா வெகு எளிமையாக, அதே நேரத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார். உண்மையாகவே எங்களுக்கு பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாறு அந்த அளவுக்கு தெரியாது, ஆனால் ஐயா எழுதகிற ஸ்ரீ ரமண மகரிஷி என்கிற இந்த தொடர் படிக்க படிக்க, எங்களை மிகவும் நெகிழ வைக்கிறது. எல்லா தரத்தினருக்கும் புரியும் வைகையில் எளிய நடையில், பிரித்து, பிரித்து மிக அழகாக கூறியுள்ளார்.

“தன்னைச் சுத்தம் செய்துகொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை. வெகு சிலருக்கே நிகழ்கிறது. அப்படி நடந்தவர்க்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.” என்ன அற்புதமான வார்த்தைகள், இந்த மாதிரி ஐயா அவர்களால் மட்டுமே எழுதமுடியும்.

இன்னும் இதே போல் பல மகான்களைப் பற்றியும் ஐயா எழுதவேண்டும் என்று நாங்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுதான் வரும் சந்ததினருக்கு எத்தனை மகான்கள் இருந்திருந்தார்கள், எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்றும், நம்முடைய பூமி எவ்வளவு புண்ணிய பூமி என்றும் தெரியவரும்.

இந்த ஆன்மிக தொடர் சக்தி விகடனில் வருகிறது என்று தெரியபடுத்தியதற்கு மிக்க நன்றி கிருஷ்ணதுளசி அவர்களுக்கு!


கலைவினோத்.

said...

"IRANDHU PODHAL" endra indha vishayathai veru evar pirarukku puriyum padi vilakka iyalum. idhai padhivil aetriya KRISHNA THULASI avargalukku NANDRI. IYYAVUKU en namaskaram...

Chandru..

said...

IT is really very nice.

Thanks
Baskar.S

said...

Last Thursday, the thought of writing an incident Ayya shared in his book 'Guru Vazhli' became strong in me. It's about how Yogi Ramsuratkumar broke Ayn Rand's philosophy. When I searched for it, in Google, I found your wonderful blog. My hearty wishes for the team behind it. Thank you so much for making Ayya's writing available online.

Also, am sharing the link of that incident, which I've translated into English, with a humble desire that Ayya too may read it :-)

http://manivannansmirror.blogspot.com/2010/10/how-yogi-ramsuratkumar-shattered-ayn.html

said...

மிக மிக அருமை ஐயா...

எழுத்து நடை என்னை கட்டிப்போட்டு விட்டது....

said...

ஐயா.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்

said...

Dear Krishna Thulasi,

Advance Happy Diwalli to you and your family.

Is is possible could you please inform in advance about our Guru interviews on the TV, Magazine, Newspaper so that we could see all.
This is the request only.

thanks

with love
S. arul kanthan.
coimbatore

said...

உயிர் எங்கு உள்ளது?

இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக இருக்கலாம்.. ஆனால் இந்த கேள்விக்கு விடை தேடுவது என்பது கடினமான ஒன்றாகவே உள்ளது... நமது புராணங்களும் ஆன்மீகமும் உயிர் என்பது நம் உடலில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருப்பது போலவும் அந்த உயிரானது இறந்த உடன் அடுத்த உடலில் புகுந்து கொண்டு அடுத்த ஜென்மம் எடுப்பது போலவும், ஒரு கற்பனை கதைய புகுத்தி உள்ளனர்.
ஒரு விவாதத்தின் போது என்னிடம் ஒருவர் உங்கள் உடலில் உயிர் எங்கு உள்ளது என்று கேட்டார்... என் முழு உடலிலும் பல உயிர்கள் உள்ளது என்றேன், நீங்கள் எந்த உயிரை கேட்கிறீர்கள் என்று கேட்டேன்? அதற்கு அவர் எதனால் இத்தனை உயிர்களும் இயங்குகிறது என்று திருப்பி கேட்டார்...
என் உடல் இயங்குவதற்கு அனைத்து உறுப்புகளும் அனைத்து அணுக்களின் உயிரும் அவசியமே.. தனி ஒரு அணு இதை சாதிப்பதில்லை என்று கூறினேன்...
வாதம் பன்றவரிடம் பேசலாம் விதண்டாவாதம் செய்பவரிடம் பேச முடியாது என்று கூறி நழுவினார்... நானும் அதையே சொல்கிறேன் என்று அந்த விவாதத்திற்கு தொடரும் குறி போட்டு வைத்தேன்...
நான் கேட்பது என்ன என்றால்
ஒரு காரோ பஸ்சோ இல்லை எந்த வாகனம் ஓடுவதற்கும் எது அவசியம்?
என்ஜினா
டயரா
ட்யுபா
இல்லை அதற்கு உள்ளிருக்கும் காற்றா
பெட்ரோலா
டிரைவரா
ச்டீரிங்கா
ஆக
ஒரு வாகனம் இயங்குவதற்கு எப்படி அதில் பூட்டபட்டிருக்கும் அனைத்து பொருள்களும் அவசியமோ அது போலவே நம் உடல் இயங்குவதற்கு அனைத்து உயிர்களும் அவசியம்
இதயமா
மூளையா
நுரையீரலா
ஈரலா
கனயமா என்று கேள்வி கேட்காமல் உண்மையை ஒத்துக் கொள்வோமே..

ஏங்க, நம் உடம்பு இயங்குரதுக்கு ஒரு உயிர் தான் அவசியம்னா, இந்த செடி கொடிக்கு எல்லாம் உயிர் எங்கங்க இருக்குது? கொஞ்சம் சொல்லுங்களேன் வாதிகளே.. விதண்டாவாதி கேக்கிறேன்?

said...

i salute u balakumaran sir