Tuesday, October 30, 2012


துளசி ஒரு தாவரம். அதைப் போய் ஏன் கும்பிடுகிறார்கள் ?

     துளசி வெறும் தாவரமல்ல. அது மிகச் சிறந்த மூலிகை. மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய கபத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. அறவே நீக்கவல்லது. கபம் மனிதருக்கு மிக மோசமான பிரச்சனை.வெகு சீக்கிரம் அது மரணம் வரை கொண்டு போய் விட்டுவிடும். முன்பெல்லாம் குழந்தைகள் தும்மினால் தீர்க்காயுசு என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஒரு முறை தும்மினாலே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது என்று தான் அர்த்தம்.
     நுரையீரலில் நீர் சேர்ந்துவிட்டது என்பதற்கு அறிகுறி. நுரையீரலில் நீர் சேர்ந்தால் அது கபமாக மாறும்.நுரையீரல் பைகளை கபம் அடைத்துக் கொண்டால் மூச்சு விடுவது பிரச்சனை ஆகும். மூச்சு இழுத்து விடுவதில் பிரச்சனை என்றால் இதயத்தின் செயல்பாடுகள் வேகமாக குறையும். இதயத்தின் செயல்பாடு குறைந்தால் கிட்னியில் தாக்கம் ஏற்படும். கிட்னியில் தாக்கம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் மோசமாகும். பிறகு உடம்பு முழுக்க வலி மிகுந்து பிறகு ஜீரம் வரும்.
     கபம் என்பது ஓரிரு நாளில் உச்சக் கட்டத்தை எட்டும். சட்டென்று மூச்சுத் திணறி மரணம் ஏற்படும். போன வாரம் ஆடிக் கொண்டிருந்த பையன் இந்த வாரம் இறந்து போனான் என்பது கபத்தால் ஏற்படக்கூடும்.
     எனவே கபம் சேராமல் இருக்க, சேர்ந்த கபம் செயலிழக்க அவர்கள் துளசியை மிக முக்கியமான ஒரு மருந்தாக கருதி வந்தார்கள். எப்பொழுதும் கைவசம் இருக்க வேண்டும் என்று வீட்டுக்கு வீடு துளசியை வளர்ப்பதில் அக்கறை காட்டினார்கள். தினமும் உண்ணுதல் நலம் என்றார்கள்.
     நீங்கள் நினைப்பது போல வெறும் தாவரம் என்று எல்லோரும் நினைத்துவிடக்கூடாது. அது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்வதற்காக அதற்குப் பின்னே கதைகள் ஏற்படுத்தினார்கள் . துளசியை பெண்ணாக உருவகித்தார்கள். அது கடவுளுக்கு உகந்தது என்று காரணம் சொன்னார்கள். அந்தக் கதைகளெல்லாம் துளசியை வீட்டுக்கு வீடு வளர்ப்பதற்காக . துளசியினுடைய வளர்ச்சி கபத்தை நீக்குகின்ற கைமருந்து என்பதற்காக. இது போல் பல்வேறு தாவரங்கள் இருக்கின்றன..
     வேப்பங்கொழுந்து ஒரு அற்புதமான  விஷயம். ஆனால் எல்லாவற்றையும் விட துளசியே முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.