Monday, January 24, 2011

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்

தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை.
சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது.

எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு.

தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்கள். என்ன செய்கின்றார்கள் என்ற ஆவல் இல்லாது போகும். அந்தரங்கம் தெரியும். பேராசையற்றுப் போகும். அவர்களும் நம்மைப் போல் நல்லதும், கெட்டதும் நிறைந்தவர்கள் என்கிற விருப்பு வெறுப்பற்ற நிலை வரும்.

இந்த நிறை வர அடுத்த வீடு என்ன என்பது எளிதாய் புரியும். அழகிய பெண் இருக்கிறாள் என்று ஆசைப்படாமல், அவலமான குடும்பம் என்று வெறுப்பு கொள்ளாமல் மனித சுபாவங்களை உணரமுடியும். அப்போது சிநேகம் எதிர்பார்ப்பின்றி இருக்கும். எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களுக்கு புரிய, உள்ளத்தைத் திறந்து தானே உன்னிடம் கொட்டுவார்கள். அப்போது சலனமற்று பேச அடி ஆழத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரும். அடுத்த வீடு பற்றி சகலமும் புரியும். நான் மனிதர்களை புரிந்து கொள்ளும் விதம் இதுவே.

விருப்பு வெறுப்பற்ற மனம் எப்படி வரும்? ஏகப்பட்ட விருப்பங்கள் உள்ளனவே, கண்டபடிக்கு வெறுப்பு இருக்கிறதே, மேலும் கேள்வி வரலாம். எனக்கும் இருந்தது தோழா, மெல்ல மெல்ல மாறினேன். சொடுக்கு நேரத்தில் இது கை கூடாதய்யா. சொல்லிக் கொடுத்து விட்டால் வராது தம்பி. கற்றுக்கொடுப்பதில் விசேஷம் இல்லை. கற்றுக் கொள்வதில்தான் காரியம் உண்டு. நீச்சல் தரையிலா சொல்லித் தர முடியும். தியானத்தை புத்தகத்திலா எழுதி காட்ட முடியும். ஆர்வம் தூண்டலாம். ஒன்று இரண்டு மூன்று என்று விதிகள் எழுதலாம், படித்து விட்டு நீச்சல் குளம் தேடிப்போய் நீரில் இறங்க வேண்டும். குளிரக் குளிர நனைய வேண்டும். நீச்சல் விதிகள் மறந்து சும்மா தரையைப் பிடித்துக் நீச்சலடிக்கிறவர்களை வேடிக்கை பார்க்கும் புத்தி வரும். அதை விலக்கி கம்பியை பிடித்து உடம்பு லேசாக்கி கால் மட்டும் தூக்கிப் போட்டு பயிற்சி துவங்க வேண்டும். உடம்பு அசைக்காமல் வெறுமே முடிந்த வரை மிதக்க வேண்டும். இடைவிடாது நீச்சல் வரும் வரை செய்ய வேண்டும்.

ஏதோ ஒரு கணம் நீச்சல் வந்து விடும். என்ன காரணம்? தெரியாது. இது போலவே தியானமும். ‘தியானம் பண்றேன் மச்சி, நீயும் பண்ணு’ செய்து பழகும் முன்னே செயல்முறை பற்றி தம்பட்டம் அடிக்கத் தோன்றும். இந்த அலட்டல் தியானத்திற்கு எதிர் விஷயம், உடனே நிறுத்தி விடவேண்டும். இரண்டு நாள் செய்துவிட்டு முகம் மாறியிருக்கா என்று கண்ணாடி முன்பு பார்க்க தோன்றும். இது பொய், விலக்க வேண்டும். ‘இடுப்பு நோவுது, கால் மரத்தது போல் ஆகுது, இருபது நிமிஷம் சீக்கிரம் ஆயிட்டா நல்லா இருக்கும்’ இந்த வன்முறை வேண்டாம். இயலவில்லையெனில் எழுந்து உலவிவிட்டு மறுபடி உட்காருதல் நலம்.

கண்ணை மூடிக்கொண்டு தியானம் வந்துவிட்டது போலவும், பாலகுமாரன் போல் தாடி குங்குமம் வைத்து கொண்டது போலவும், ஊர் உறவு எல்லாம் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொள்வது போலவும் கற்பனை வரும். இது சுகம். ஆனால் விஷம். தவிர். இனியனே, பொய்யற்று இரு. உலகத்தாரிடையே பொய் சொல்வதை தவிர்க்க முடியாதிருக்கலாம், உனக்கு நீயே சொல்லலாமா. இதில் உபயோகம் உண்டா, யாரை ஏமாற்றப் பொய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளப் போகிறாயா, ஆமெனில் அழிவு நிச்சயம்.

கடும் உண்மையோடு இரு. கண்டிப்பான உண்மையோடு இரு. எதற்கு எனக்கு தியானம் என்று கேள்வி கேள், விடை கண்டுபிடி. எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, சும்மா தெரிஞ்சுக்கலாமென்னு தான். தப்பா? ஏகப்பட்ட குழப்பம் சார், எவனை நம்பறதுன்னே தெரியலை, எது பண்ணாலும் தப்பு வருது. குத்தம் சொல்றாங்க, ரொம்ப அப்செட் ஆய்ட்டேன் சார், தூக்கமே வரலை; என்னைப் புரிந்துகொள்ள என் மனசின் உண்மையான நிலை பற்றி அறிய ஆவல். என்னை அறிய, எல்லாம் அறியமுடியும் என்கிற நம்பிக்கை. எல்லாம் கற்றுக் கொள்ள எண்ணம் தியானம் அதில் ஒன்று அவ்வளவே.

இதில் எதுவாயினும் உங்கள் பதிலாய் இருக்கலாம். எதற்கும், எந்த பதிலுக்கும் வெட்கப்படத் தேவையில்லை. ஏனெனில், இது உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியப் போவதில்லை. எதுவாயினும், எந்த காரணம் இருந்தாலும் உண்மையானதாய் இருக்கட்டும். உள்ளுக்குள்ளே பொய்யில்லாது இருக்கட்டும். பொதுவாய் பேசுவதை விடுத்து, தியானம் பற்றி என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இந்த கட்டுரையின் நோக்கம் தியானம் செய்ய ஆர்வம் ஊட்டுதலே, தியானத்தில் தெளிவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் உறுதியைப் பொறுத்து அமைவது. அந்த உறூதி எங்கிருந்து வரும் என்பதை என் அனுபவமாக சொல்ல நினைக்கிறேன்.

Monday, January 10, 2011

சொர்க்கம் நடுவிலே - வாசகர் குரல்

ஜெய விஜயீ பவ !

டியர் மாஸ்டர்,

சொர்க்கம் நடுவிலே படித்து முடித்த பிறகு, உங்களை இப்படித் தான் முகமன் சொல்லி வரவேற்க வேண்டும்; அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கேசவன் நாராயணனோடு பயணித்துவிட்டு, இப்போது தான் பூமியில் இறங்கியது போலிருக்கிறது.

மரணத்தைப் பற்றிய அறிவைத் தந்து, மனித மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் பயத்தை ஒரே வீச்சில் துடைத்தெறிந்து விட்டீர்கள்.

எல்லோருக்கும் நீங்கள் பார்த்தசாரதி. ஆனால், இந்த பார்த்தன் உங்களுக்கு சாரதி. இது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப் பேறை விட மிக உன்னதமான விஷயம் உங்களோடு காரில் பயணிக்கும் போது, நீங்கள் எழுதப் போகும் கதையைப் பற்றி விவரிப்பதைக் கேட்பது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன். “பாலாஜி, நான் மரணத்திற்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதாக நிச்சயித்திருக்கிறேன். எமப்பட்டினம் என்றால் என்ன என்று ஒரு அரை மணி நேரம் உனக்கு சொல்லுகிறேன். கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுவாயா” என்று கேட்டீர்கள். உடனடியாகத் தயாரானேன்.

மரணம் என்றால் என்ன?  எமப்பட்டினம் என்பது என்ன?    எமகிங்கரர்கள் யார்?   மரணம் ஏன் வலி?   வலியில்லா மரணம் உண்டா?   நரகம் உண்டா?   சொர்க்கம் உண்டா?   நரகம் எது?   சொர்க்கம் எது?   என்ற  வாழ்வின் அடிப்படையான கேள்விகளை நீங்களே எழுப்பி, அதன் பதில்களை நீங்களே தெளிவாக விவரித்துக் கொண்டு போக, என் மனம் கை கட்டி, வாய் பொத்தி, உங்கள் உபநிஷத விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. கார் தன்னிச்சையாக ஓடிக் கொண்டிருந்தது அதிசயமே.

கனத்த ஒரு அமைதி என்னை சூழ்ந்து கொண்டது. நன்றாக புரிந்தது போலவும் இருந்தது. புரியவில்லையோ என்ற சந்தேகமும் இருந்தது.

இவ்வளவு கடினமான ஒரு விஷயத்தை இவர் எப்படி நாவலாக்கப் போகிறார்? அப்படி நாவலாக்கினால் படிப்பதற்கு உவப்பாக இருக்குமா என்ற கவலையும் எழுந்தது. ஆண்-பெண் உறவு சிக்கல்களை விளக்கி வளமான வாழ்விற்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறைதேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற பெரிய கேள்விக்குறி என் முன்னே நின்றது.
என்றோ ஒரு நாள் மரணம் நிகழப் போகிறது. அதைப் பற்றி இன்று தெரிந்து கொண்டு ஏன் வாழ்வின் சுவையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? வாழும் வாழ்க்கையையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் மரணத்தைப் பற்றி ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும். உங்களின் இந்த முயற்சி அவசியம் இல்லாத ஒன்றோ என்றும் தோன்றியது.




ஆனால்,

“நான் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர்த் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆயிற்று. இன்னும் பிறக்கவில்லை. இப்போது பூமியிலுமில்லாமல், பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். மரணத்திற்குப் பின் உடலில்லாத உலகத்திற்கு வருபவர்களுக்காக உதவிகள் செய்ய உத்தேசித்து இங்கே காத்திருக்கிறேன்”    

 என்று ஆரம்பிக்கப் போகிறேன் பாலாஜி’, என்று நீங்கள் கூறியவுடன் I understood that the magician is back at his work.

மரணம் மற்றும் மறுபிறப்பு என்ற சுழற்சியைப் பற்றி நீங்கள் விவரித்த விஷயங்கள் அறிவியல் உலகின் அடிப்படை விதிகளோடு மிகச் சரியாகப் பொருந்தியது கண்டு ஆச்சரியப்பட்டேன்.

For every action there is an equal and opposite reaction-

இது நியூட்டனின் மூன்றாம் விதி.

நாம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று நீங்கள் விளக்கும் கர்மா theoryஐ மறுக்கவே முடியவில்லை. நமது செயலின் எதிர்வினைகள் மரணத்திற்குள் முடிந்து விடுவதில்லையே என்று யோசிக்கும் போது, மரணத்திற்குப் பின்னும் இந்த வாழ்வின் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வாழ்விற்குள்ளேயே வினைகளை நிறுத்தியவருக்கு ஏது மறுபிறப்பு, அப்படிப்பட்டவர்கள் தான் ஞானிகளோ!

இப்போது அறிவியலின் மற்றொரு விதியும் நினைவுக்கு வருகிறது.

‘Energy can neither be created nor be destroyed. It is transformed from one form to another’.

----இது   Law of conservation of energy.

விஞ்ஞானத்தின் அதிஉன்னத நிலை ஞானமோ. சத்தியத்திற்கு ஏது பிரிவினை.

இதுவரை பலப்பல ஞானிகளைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்போது பகவான் ரமணர் போன்ற மகரிஷிகளின் ஞான தத்துவங்களை சர்க்கரை மிட்டாயாகத் தந்து கொண்டிருக்கிறீகளோ.

உலகம் இரண்டு மாறுபட்ட நிலைகளுக்கிடையே இயங்கிக் கொண்டிருக்கிறது. விருப்பு-வெறுப்பு, இரவு-பகல், இன்ப-துன்பம், பாஸிடிவ்-நெகடிவ் என்பது உண்மையெனில் zero point என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா. இந்த zero point தான் நீங்கள் சொல்லும் நடுநிலையோ. இந்த நடுநிலையிலேயே இருந்து நாம் செயலாற்றும் போது there won’t be any reaction, Isn’t it? இப்படித் தானே பிறப்புச் சங்கிலியை அறுக்க வேண்டும். இது தானே நீங்கள் சொல்வது.

“சொர்க்கம் நடுவிலே” படித்து முடித்த பிறகு “சக்தி விகடனில்” நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் தத்துவார்த்த விளக்கங்களை மீண்டும் படித்தபோது நன்கு புரிந்தது. Thank you master.

இதைவிட எளிமையாக வேதாந்த கருத்துகளை யாரால் எழுத முடியும்? Hats off எழுத்துச் சித்தரே.




வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்து விடவில்லை. மரணத்திற்கு அப்பாலும் தொடர்கிறது. ஒவ்வொரு செயலின் எதிர்வினயையும் நாம் அனுபவித்தேயாக வேண்டும். தப்பித்துக் கொள்ளவே முடியாது என்பதை “சொர்க்கம் நடுவிலே” படித்துத் தெளியும் போது ‘நம் வாழ்க்கை நம் கையில்’ என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பதும் புரிகிறது.

வாழ்வை பயம் கலந்த மரியாதையுடன் அணுக வேண்டும் என்ற பொறுப்பை எங்களையும் அறியாமல் எங்களுக்குள் ஏற்படுத்தி விடுவதே “சொர்க்கம் நடுவிலே”யின் வெற்றி. இதைவிட பெரிய சமூக சேவை வேறு என்ன இருக்கக் கூடும். தனி மனிதன் மாறாமல் இங்கு என்ன மாற்றம் கொண்டு வந்து விட முடியும். உங்கள் எழுத்தின் மூலம் சப்தமே இல்லாமல் பெரும்புரட்சி செய்து விட்டீர்கள்.

பாரத கலாசாரத்தின் ஆணிவேரான ஞான தத்துவங்களை மேற்கத்திய மோகம் நிறைந்த இந்த சூழலில் convincing ஆக விளக்கி, மக்கள் மனதை நேர்வழிபடுத்தும் உங்கள் எழுத்து இலக்கிய உலகின் உயரிய விருதான “சாகித்ய அகாடமி” விருதால் கெளரவிக்கப்பட வேண்டும்.

ஒரு வினைக்கு எதிர்வினை உண்டெனில்... விருது நிச்சயம் உண்டு.

‘நான் வெறும் உடலல்ல, நான் யார் என்று என் மனதைப் பார்க்கும் போது, என் எண்ணங்கள் புரிகிறது. எண்ணங்கள் புரிய தியானம் இயல்பாகிறது. நடுநிலையில் நின்று இந்த உலக விஷயங்களை உற்று நோக்க ஆரம்பிக்க நானும் கேசவன் நாராயணனாகி விட்டேனோ!’

‘சொர்க்கம் நடுவிலே’ படிக்கும் ஒவ்வொருவரும் கேசவன் நாராயணன் ஆவதைத் தவிர்க்க முடியாது.
Is the act witnessing itself Kesavan Narayanan, I think so.

சொர்க்கத்தை எந்த ஜென்மத்தில் அடைவோம் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையையே சொர்க்கமாக்கி விட்டீர்கள். பயனுள்ள வாழ்வு, பயமில்லா வாழ்வு சொர்க்கம் தானே!

இறப்பதற்கு முன்னாலேயே சொர்க்கத்தை அனுபவித்தால் அதைவிட பெரிய பேறு வேறு என்ன இருக்க முடியும்.

Your ‘sorgam naduvile’ is a tribute to mankind.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் கேசவன் நாராயணன் அறிமுகப்படுத்திக் கொள்வது ஒரு புதுமை. மிக அருமை.

அந்த கமாண்டோ வீரனின் மரணம் மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை நினைவூட்டியது. அங்கு மாய்ந்த வீரர்களும் இப்படித் தான் சொர்க்கம் சென்றிருப்பார்களோ என்ற மனமயக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி.

உங்கள் எழுத்தின் மற்றுமொரு தாக்கம் என் உடனடியான ஸ்ரீரங்கப் பயணம். துலுக்க நாச்சியார் சந்நிதியில் உருகி நின்ற மணித்துளிகள்.

விதம் விதமான மரணங்களைச் சொல்லி அதன் நிலையையும் விளக்கி இருக்கிறீர்கள். ஞானியை பேச வைத்து பல சிறிய, பெரிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுகிறீர்கள். மரணத்தருவாய் எப்படி இருக்கும் என்பதை ஒரு கிழவர் மூலம் விளக்குகிறீர்கள். உயிர்ப் பிரிவதை நேரடியாகப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

கொலை செய்யப்பட்டவன் கூட மரணத்திற்குப் பின் அமைதியாகிறான். ஆனால், தற்கொலை மரணத்திற்குப் பின்னும் மிகப் பெரிய வேதனை என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு அப்பாலும் கேள்விகள் எழும். வாசகர்கள் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு தெளிய வேண்டியது தான்.


நீங்கள் வாழ்வதற்கு மட்டும் நல்ல வழிகாட்டி அல்ல. நல்ல மரணத்திற்கும் உங்களால் வழிகாட்ட முடியும். இந்த நாவலை படித்து முடித்த பிறகு இனி எந்த மரணத்தையும் முன் போல் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.

இந்த பார்த்தன் மீண்டும் தயாராக இருக்கிறேன். கண்ணனோடு அடுத்த கார் பயணம் எப்போது.

At your service,
Your’s ever

Balaji Arun

Divisional Manager ,
Brakes India Ltd.

Friday, January 7, 2011

“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”

குரு என்பவர் உதயசூரியன். வங்கக் கடலில் முங்கியெழும் சூரியனைப் பார்க்கும் பொழுது கை கூப்பாமல் இருக்க முடியுமா? செக்கச் சிவந்த நிறத்தில் தகதகத்து எழும் போது வணங்காமல் இருக்க முடியுமா? குளுமையான நேரத்தில் ஒளியோடு எழும்போது மனதில் விம்முகின்ற ஆனந்தத்தை கண்களில் காட்டாது இருக்க முடியுமா? குருவினுடைய தரிசனம் அப்படிப்பட்டது.
திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட ஆனந்தத்தை, பணிவை உள்ளிருந்து பொங்கும் வணக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். எந்த முயற்சியுமில்லாமல், எந்த எண்ணமுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கரம் கூப்பி வணங்கியிருக்கிறேன். வெறுமே தொலைவிலிருந்து வணங்காமல் அவருடைய மேன்மையை அண்மையில் இருந்து பல்வேறு நாட்களில், பல்வேறு விதங்களில் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு நல்ல குரு மிகவும் சூட்சுமமானவர். அவரைப் புரிந்து கொள்வது கடினம். அவரை சாதாரணமாக எடை போட்டு, அவரிடமிருந்து விஷயங்களை மறைத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால், அது மிகவும் முட்டாள்தனம். யோகி ராம்சுரத்குமார் சூட்சுமத்திலும் சூட்சுமமானவர் என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
அவரை தரிசிக்க வேண்டுமென்று அடிக்கடி திருவண்ணாமலை போகின்ற விருப்பம் எனக்கு உண்டு. அப்படி செய்வது என் வழக்கம். ஒரு முறை திருவண்ணாமலைக்கு நேரடியாகப் போகும் பேருந்தில் ஏறி செளகரியமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயணப்பட்ட போது அந்த விரைவுப் பேருந்தில் ஜனங்களைக் குளிர்விப்பதற்காக ஒலிநாடா வைத்துப் பாட்டு போட்டார்கள்.

‘அடடா, இது சிந்தனை ஓட்டத்தை அறுக்குமே, வேறு பேருந்தில் ஏறிவிடலாமா’ என்று நினைத்த போது, போட்ட பாடல்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் பாடல்களாக இருந்தன. என்னுடைய இளம் வயதில் நான் ரசித்த பாடல்களை மறுபடியும் கேட்கும் போது மனம் சந்தோஷத்தில் குதித்தது. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று நான் பாடல்களைக் கேட்டுக் கொண்டு வந்தேன். உள்ளுக்குள் என் குருவின் நாமமும், அவரைப் பற்றிய சிந்தனையும் தனியாக ஓடிக் கொண்டிருந்ததன. மிக விரைவாக திருவண்ணாமலையை பேருந்து அடைய, இறங்கி அவர் வீடு நோக்கி நடக்கும் போதும் உள்ளுக்குள் பேருந்தில் கேட்ட எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. குறிப்பாய் ஒரு பாடல் அதிகமாக ஓடியது. ஆனாலும் அதைப் புறக்கணித்து விட்டு நான் அவர் வீட்டு வாசலுக்குப் போனேன்.

எப்போது போனாலும் வாசற்கதவை உடனே திறந்து என்னை உள்ளே வரவழைப்பதும், தனக்கு அருகேயுள்ள பாயை விரித்து, அதில் உட்காரச் சொல்வதும் அவருடைய வழக்கம். அன்றும் அதே விதமான வரவேற்பு கிடைத்தது. எதிரே சில பெண்மணிகளும் எனக்கு வலது பக்கம் சில ஆண்களும் அமர்ந்திருந்தார்கள். எதிரே இருந்தவர்கள் குருவின் நாமத்தை இடையறாது சொல்லிக் கொண்டிருக்க, என் தோளில் கையை வைத்தபடி என்னையே என் குருநாதர் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று இன்னும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு “என்ன பாடிக்கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார்.

“நான் மெளனமாகவல்லவா இருக்கிறேன், ஒன்றும் பாடவில்லை பகவான்” என்று சொன்னேன். “இல்லை. உள்ளே ஏதோ பாடிக்கொண்டிருக்கிறாய், என்ன பாட்டு அது”. நான் அப்போது தான் என்னை உள்ளே கவனித்தேன்,
உள்ளே
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா”
என்கிற எம்.ஜி.ஆர். படத்தின் காதற்பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பேருந்தில் போட்ட பாட்டு இன்னும் தொடர்ச்சியாக உள்ளே எந்தவித அர்த்தமுமின்றி, எந்தவித முயற்சியுமின்றி, எந்தவித திட்டமிடலுமின்றி, தானாக, சரியாக மூடப்படாத குழாயிலிருந்து நீர் வடிவதை போல ஓடிக் கொண்டிருந்தது.
“என்ன பாட்டு” .
நான் தயக்கத்தோடு “பேருந்தில் வரும் போது சினிமா பாடல்கள் போட்டார்கள். அதில் ஒரு பாட்டு உள்ளுக்குள்ளே தங்கிவிட்டது” என்றேன். “என்ன பாட்டு அது” என்றார்.
நான் சொல்வதற்கு தயங்கினேன். ஒரு மகத்தான குருவிடம் ஒரு சாதாரண சினிமா பாட்டை சொல்ல வேண்டிய அவசியம் உண்டா என்ற எண்ணம் ஏற்பட்டது.
“என்ன பாட்டு” மறுபடியும் கேட்டார்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்று சற்று உரத்த குரலில் சொன்னேன்.

எதிரே உட்கார்ந்திருந்த பெண்மணிகள், வலதுபக்கம் உட்கார்ந்திருந்த ஆண்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். என் குருநாதர் சிரிக்கவில்லை. மிகக் கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
எதிரே இருந்த அம்மையார் ஒருவர் மெல்லிய குரலில் என்னை நோக்கி பேசினார், “பாலகுமாரன் இது அநியாயமாபடலே” என்று கேட்டார். மற்றவர்கள் அதற்கும் சிரித்தார்கள்.
“இரண்டு கல்யாணம் பண்ணிண்டு திருப்பியும் ‘கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா’ என்று சொல்றேளே, நன்னாயிருக்கா” என்று கேட்க, மறுபடியும் கூட்டம் குபீரென்று சிரித்தது. ஆனால், குருநாதர் சிரிக்கவில்லை. ஒரு கேலிக்கான பொருளாய் அங்கு இருப்பதைப் பார்த்து முகம் வெளிறி சிரித்தேன்.
“பேருந்தில் திரும்ப திரும்ப இந்தப் பாட்டை போட்டுக் கொண்டிருந்ததால், உள்ளுக்குள்ளே தங்கி விட்டது. என்னையும் அறியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மற்றபடி இந்தப் பாட்டினுடைய அர்த்தம் பற்றி எனக்கு கவலையில்லை” என்று அவரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவேயில்லை. காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவர் என் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.
“தயவு செய்து அந்தப் பாட்டைப் பாடு” என்றார். இந்த முறை கூட்டத்தினர் ஆரவாரித்தனர். பகவான் யோகி ராம்சுரத்குமார் ஏதோ மிகப் பெரிய விளையாட்டு ஒன்று விளையாட, என்னை வைத்துக் கொண்டு நாடகம் போட தீர்மானித்துவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. நான் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன்.
அவர் தோள் உலுக்கி “பரவாயில்லை. பாடு” என்றார். “அது சினிமா பாட்டு” என்றேன்.
“அதனாலென்ன, நல்ல பாட்டு தானே, பாடு” என்றார். நான் தொண்டையை செருமிக் கொண்டேன். எதிரே உள்ள எல்லா முகங்களிலும் கேலி, கிண்டல் ததும்பியிருந்தது.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”
நான் பாடினேன். மறுபடியும் யாரோ ஏதோ சொல்ல, அவர்கள் கைக் கொட்டி சிரித்தார்கள்.
‘என்ன’ என்பது போல் யோகி ராம்சுரத்குமார் சொன்னவரை உற்றுப் பார்க்க, “பாலகுமரான் ஏதோ திட்டமிட்டு தான் இங்க வந்திருக்காரு” என்று அவர் மறுபடியும் தன் கருத்தை சொன்னார். மீண்டும் கூட்டம் சிரித்தது. பரிதாபமாக குருவைப் பார்த்தேன்.
“பரவாயில்லை பாலகுமாரன், பாடு” என்று சொன்னார்.


ஒரு அளவுக்கு மேல் போய்விட்டது. இனி என்ன வந்தாலென்ன. சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினால் என்ன என்று நான் தொண்டையை செருமிக் கொண்டு இனிமையான குரலில், பாட்டு எந்த பாவத்தோடு இருக்க வேண்டுமோ, அந்த பாவத்தோடு பாட்டு பாடினேன்.
மூன்றாம் முறையும் “பாடு” என்று யோகி ராம்சுரத்குமார் கட்டளையிட்டார்.
அப்போது சாண், முழம் எல்லாம் தாண்டி தலைக்கு மேலே வெளிவர முடியாத உயரத்தில் வெள்ளம் போய் கொண்டிருக்கிறது. இனி என்ன வேண்டுமானாலும் ஆகட்டுமென்று இந்த முறையும் மிக அழகான குரலில் பாடினேன்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” அவர் நெருங்கி என்னை அணைத்துக் கொண்டார்.
“கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” தோளை விடுவித்து, தன் கையை என் கையோடு பற்றிக் கொண்டார்.
“செல்லாத இடம் நோக்கி செல்லலாமா” தன் உடம்பு முழுவதையும் என் மீது சாய்த்தார்.
“சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்று பாடியவுடன், உடனே திடீரென்று இடுப்புக்குக் கீழே ஏதோ வெடித்துக் சிதறியது. சரக்கென்று மேலே ஏறியது. இடுப்பைத் தாக்கியது. நடுமுதுகைக் குத்தியது. மேலெழும்பி நெஞ்சைக் குறிபார்த்து எகிறி சிதறடித்தது. தொண்டைக்கு வந்து, நெற்றிக்குப் போயிற்று, உச்சியில் வந்து படீரென்று எரிமலையாய் வெடித்தது.
என்னால் அந்த வேகத்தைத் தாங்க முடியவில்லை. என் உடம்பு பரிதவித்தது. நான் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வாய் விட்டு கதறினேன். யாரோ நெஞ்சில் ஈட்டியால் சொருகியதைப் போல கத்தினேன்.

என் உலகம் மாறிப் போயிற்று. அது ஜடப்பொருளாலான உலகமல்ல. மண், மரம், இரும்பு, தாமிரம், வெள்ளி, மனித உடல்கள் என்று பருப்பொருளாலான உலகமல்ல. அது வெளிச்சமான உலகம். முற்றிலும் வெளியான உலகம். எந்தத் தடையுமில்லாத உலகம். எந்த இலக்குமில்லாத உலகம். எந்தப் புள்ளியுமில்லாத உலகம். எல்லா இடமும் வெளிச்சம், நானும் வெளிச்சம். வெளிச்சம் வெளிச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இலக்கின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. புள்ளியை கடந்தால் தானே வேகம் தெரியும். கடப்பதற்கு எந்த புள்ளியுமில்லை. தொடுவதற்கு எந்த எலையுமில்லை. அதனால் வேகம் மிகப் பெரிய வேகமாக இருந்தது. அந்த வேகம் என்னால் உணரப்படாமலிருந்தது.

வேகம் இருக்கிறது. ஆனால், எவ்வளவு வேகம் என்று தெரியவில்லை. நான் இருக்கிறேன். ஆனால் எதனுள் இருக்கிறேன் என்று தெரியவில்லை. நானும் வெளியும் வெவ்வேறல்ல. வெளி தான் நான். நான் தான் வெளி. எனவே நான், நீ என்ற பேதமில்லை. எல்லோரும் நான் தான். எல்லாமும் நீ தான். இரண்டு பேர் இல்லை. இரட்டைகள் இல்லை. அதனால் துவந்தமுமில்லை. போட்டியோ, பொறாமையோ, விருப்போ, வெறுப்போ எதுவுமில்லை. இது பேரமைதி. முடிவில்லாத சந்தோஷம் நெல்முனையளவும் குதியல் இல்லாத அமைதி.
இது தான் நான், இங்கிருந்து தான் நான். இதுவே என் இயல்பு. உடலற்று உணர்வாகத் திகழ்கிற போது இப்படித்தான் இருக்கிறேன்.

மெல்ல அந்த வெளிச்சம் வெளிறியது. உடம்பின் ஞாபகம் வந்தது. மனம் தானாக விழித்தது. நகர்ந்து போய் உடம்பிலிருந்து விழித்தது. உடம்பின் வழியாக உலகத்தைப் பார்த்தது.
இப்போது உலகம் துவந்தமயமானது. நான், நீ என்ற பேதமுடையதானது.

உணர்வான நானுக்கும், உடம்புள்ள நானுக்கும் உள்ள வித்தியாசத்தை சொடுக்கு நேரத்தில் என் குருநாதர் எனக்குக் காண்பித்தார். மிக சுகமான இடத்தில் என்னை உட்கார வைத்தார். வெளிச்சத்தை என்னுள் இறக்கி அந்த வெளிச்சத்தால் அபிஷேகம் செய்வித்தார். இது கல்யாணம். என் குருநாதரோடு எனக்குக் கல்யாணம். ஒரு குருவுக்கும், சீடனுக்கும் ஏற்பட்ட வாழ்வு பந்தம். பிரிக்க முடியாத உறவு. மறக்க முடியாத உறவு, பின்னிப் பிணைந்து தொடரும் உறவு.

எல்லோரும் போக முடியாத இடத்திற்கு எளிதில் அணுக முடியாத இடத்திற்கு குருநாதர் எந்தத் தவமுமில்லாத என்னைத் தூக்கிக் கொண்டு போய் இறக்கினார். அருளை அள்ளி எனக்குள் திணித்தார்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்க்க சொல்லலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”
இப்போது சாதாரண சினிமா பாட்டு வேறு அர்த்தம் கொண்டது. ஒரு சீடனுக்கு பட்டாபிஷேகத்தை இந்தப் பாட்டின் மூலம் என் குருநாதர் நடத்தினார்.
அதுவரை எதிரே சிரித்துக் கொண்டிருந்தவர்கள் மெளனமாய், திகைப்பாய் முகம் இறுகிக் கிடந்தார்கள். அப்போது என்னுள் ஏற்பட்ட ஆனந்தத்தை நிறுத்தி நான் சிரிக்கத் துவங்கினேன். எனக்கு எவரோடும் சண்டையில்லை. எந்தப் பிணக்குமில்லை. நான், நீ எல்லாம் ஒன்று. நீயே நான், நானே நீ என்று சிரிக்கத் துவங்கினேன். உயர்ந்த யோகியும் ஞானவானுமான ஒரு குருநாதர் மிகச் சாதாரணமான ஒரு சீடனை உன்னத நிலைக்குக் கொண்டு வந்ததற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

குருவிடம் பணிவோடு இருந்தால் போதும், வெட்கமின்றி இருந்தால் போதும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருந்தால் போதும். எனக்குள் எந்தப் பாட்டுமில்லையே என்று நான் பொய் பேசவில்லை. உள்ளே என்ன இருந்ததோ, அதை கொட்டினேன். அந்த உண்மைக்குப் பணிவு முக்கியம். குருநாதர் மீது நம்பிக்கை முக்கியம். தெளிவில்லாத போது வார்த்தைகள் தடிமனாக வரும். அலட்டலாக வரும். அது எந்த உறவையும் பங்கப்படுத்தும்.

ஒரு குருநாதரை பணிவற்ற எவரும் அணுகவே முடியாது. அப்படியும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

ஒரு மத்திம வயது பெண்மணி குருநாதர் தாடியை நீவிவிட்டு கொள்வதைப் பார்த்து “வெள்ளை வெளேரென்றிருக்கின்ற தாடி” என்று சொல்ல, குருநாதர், “ஆம்” என்று தலையாட்டினார். “நீங்க டை அடிச்சுக்குங்க பகவான், கருப்பு டை, தலைக்கு, தாடிக்கெல்லாம் அடிச்சுக்குங்க” என்று சொல்ல, சட்டென்று குருநாதர் அந்தப் பெண்மணியையே உற்றுப் பார்த்தார். அந்தப் பெண்மணிக்குத் தான் சொன்ன விஷயத்தின் அபத்தம் தெரியவில்லை. இளித்துக் கொண்டிருந்தார்.

“அம்மா எழுந்திரு, இந்தா என்னுடைய பிரசாதம்” என்று சில பழங்களைக் கொடுத்தார்.
“இந்தப் பிச்சைக்காரன் உன்னை வழியனுப்பிகிறேன், போய் வா” என்று சொன்னார். ‘என்ன’ என்று அந்த அம்மாள் வியப்போடு பார்த்தாள். “போய் வா” என்று மறுபடியும் சொல்ல, அந்த அம்மாள் மெல்ல நகர்ந்தார். திரும்பி வாசற்படியிலிருந்து குருநாதரைப் பார்த்தார்.
“இனிமேல் இங்கு வரவேண்டாம். இந்தப் பிச்சைக்காரனோடு உனக்கு எந்த தொடர்புமில்லை. ஏனெனில் நீ சொல்லும்படி என்னுடைய தலைமுடிக்கு சாயம் ஏற்றிக் கொள்ளப் போவதில்லை, அது அப்படித் தான் இருக்கும். எனவே நீ வரவேண்டிய அவசியமில்லை” என்று அவளைப் புறக்கணித்தார்.
ஒரு வாக்கியம் தப்பாகப் போனது. அந்த அம்மாவின் வாழ்க்கைத் திசை மாறிப் போனது. மகத்தான குருவின் நட்பை தேவையற்ற வாக்கியத்தின் மூலம் அந்த அம்மாள் இழந்தார். கண்ணாடிப் பாத்திரம் கை நழுவி சிதறியது போல ஒரு நல்ல நட்பு சிதறிப் போனது. குருவிடம் பொய் சொல்ல முடியாது. பணிவு உள்ளது போல் நடிக்க முடியாது. உள்ளுக்குள்ளே இருப்பதை நோண்டி வெளியே வீசியெறிய குருவிற்குத் தெரியும். அகந்தைக் கிழங்கை கிண்டி தூக்கி வெளியே “இது நான் நீ” என்று அவரால் காண்பிக்க முடியும்.


என் மகள் ஸ்ரீகெளரி நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பிளஸ் டூ தேறினார். அவருக்கு டாக்டர் சீட் கேட்டு சில முக்கியஸ்தரிடம் சொல்லி வைத்திருந்தேன், தமிழ்நாட்டில் உயர்பதவியிலிருப்பவர்கள், “உங்கள் மகளுக்கில்லாததா, நிச்சயம் தருகிறேன்” என்று சொன்னார். மதிப்பெண்களைக் காண்பித்து இந்த விஷயத்தை குருநாதரிடம் தெரிவித்தேன். குருநாதர் மதிப்பெண்களைப் பலமுறை தடவிக் கொடுத்தார். என் மகளிடம் திருப்பிக் கொடுத்தார்.
“ஸ்ரீகெளரி நீ டாக்டராக விரும்புகிறாயா” என்று கேட்டார்.
உடனே என் மகள் “உங்கள் விருப்பம் அதுவானால் என் விருப்பமும் அதுவே” என்று சொன்னாள்.
“உன்னுடைய விருப்பமென்ன கெளரி” என்று கேட்டார்.
“உங்களுடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம் பகவான்.”
“இல்லை, உன் விருப்பத்தைச் சொல்” என்று பகவான் மறுபடியும் வற்புறுத்தினார்.
“எனக்கென்று விருப்பம் ஏதுமில்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை” என்று தீர்மானமாக சொன்னார். அருகிலுள்ளவர்கள், “அப்படி கேட்காதே, டாக்டராக வேண்டுமென்று அவரை கேள், நிச்சயம் ஆகிவிடுவாய்” என்று தூண்டிவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகெளரி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, நீங்கள் எனக்கு என்ன தருகிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை. உங்கள் சொல் மீறி, உங்கள் விருப்பம் மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். நான் முற்றிலும் என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்” என்று சொல்ல, குருநாதர் கண்களில் கனிவு தோன்ற என் குழந்தையைப் பார்த்தார். கை வீசி ஆசிர்வதித்தார்.

“கெளரி டாக்டராவதென்றால் மிகக் கடினம். வாழ்க்கையை ரசிக்க முடியாது. பாட்டுப் பாட முடியாது, வேளைக்கு சாப்பிட முடியாது, ஓய்வாக இருக்க முடியாது. இவைகளில்லாது போனால் கெளரி உன்னால் தாங்க முடியாது. எனவே நீ வேறு ஏதேனும் படி” என்று திசை திருப்பி விட்டார்.

என் மகள் எம்.எஸ்ஸி பயோகெமிஸ்டரி முடித்து, முடித்த கல்லூரியிலேயே தலைமைப் பேராசிரியராகத் திகழ்ந்து, இப்போது திருமணமாகி ஷர்ஜாவில் தன் மகனோடும், கணவரோடும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது வேளைக்கு சாப்பிடுவதும், கணவனுக்கும், குழந்தைக்கும் உதவியாக இருப்பதும், சந்தோஷமாக நடைபெறுகின்றன. தெளிந்த நீரோட்டம் போல அவள் வாழ்க்கை இருக்கிறது. ஒரு டாக்டருக்குண்டான பரபரப்பு அவளிடமில்லை. அது பெரிய நிம்மதி என்பதை இப்போது என் மகள் உணருகிறாள். பணிவு என் குழந்தையிடம் இயல்பாக இருப்பதை பார்த்து நான் சந்தோஷமடைந்தேன்.

நல்ல குரு ஒரு சந்தோஷம்; ஒரு வழிகாட்டி; ஒரு பாதுகாவலர்; நல்ல குரு கடவுளிடம் நம்மை கொண்டு போய் அலுங்காமல் சேர்ப்பவர்.

ஒரு குருவை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற வைராக்கியம் தான் வேண்டும்.

Monday, September 27, 2010

பாலகுமாரனின் ஸ்ரீ ரமண மகரிஷி

'இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.


' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.


வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.


............பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மீகத் தொடர்

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”.

உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.

அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.

வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.

அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.

காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.

குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.

தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.

இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை. பணிவு கலந்த வணக்கம் அல்லது அமைதி எப்படி ஏற்படுகிறது என்பதை, ஏற்படவேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.

Thursday, September 23, 2010

பாலகுமாரன் பேசுகிறார் - பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்




அந்த கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.



எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.

அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ.

இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.

பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.



யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.

முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.

அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.

பிறகு...?

மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.

அப்படியானால் சாரப்பள்ளம்.

சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?

பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்,(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).

எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.

கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.

உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரியகல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.

நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.

கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்த்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.



முதல் தானம் ராஜராஜனுடையது.
நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.

மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.



கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்ன வித கோவில்.

விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.

இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார். இது போதுமா கடவுளைச் சொல்ல,



ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப் பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.

விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.

அதுவும் விஸ்வரூபம். இன்றளவும்.

Tuesday, September 7, 2010

சூரியனோடு சில நாட்கள் -7

சூரியனோடு சில நாட்கள் என்று இந்த கட்டுரை எழுதும்போது டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு நடிகருடைய செல்வாக்கு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், இயக்குனர் பலமாக இல்லையேல், திறமையான டெக்னீஷியனாகப் பரிமக்கவில்லையெனில் ஒரு திரைப்படம் சிறப்பான முறையில் திரைப்படம் வெளிவராவிட்டால் மிக உன்னதமான நடிகரின் நிலை கூட ஆட்டம் காணும். நல்ல டைரக்டர்களுக்காக நடிகர்கள் ஏங்குவது திரைப்பட நடிகர்களின் இயல்பு.

நாலு பேரிடம் வேலை வாங்கி கோர்ப்பதுதான் டைரக்டரின் வேலை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு வேண்டியதை மற்ற கலைஞர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். ஐந்து டியூனில் எந்த டியூன் பிடிக்கிறது என்றால் இந்த ரெண்டு டியூன் என்று குழந்தை கூட சொல்லி விடும். அந்த ரெண்டு டியூனில் எது நல்ல டியூன் என்று சொல்ல சிறிதளவு புத்தி போதும்.

சங்கீதமாவது சினிமாப் பாடல்கள் மூலம் காதுக்குள் புகுந்த விஷயம். ஆனால், நடனம் இன்னும் கடினம். ஒரு படத்தின் வெற்றியை இன்றைய காலகட்டத்தில் நடனமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. சமீபத்தில் பல படங்களின் வெற்றிக்கு நடனம் தெரிந்த நடிகர்களின் திறமையே காரணமாக இருந்திருக்கிறது.

இன்றைய டைரக்டர்களிடையே சுரேஷ்கிருஷ்ணா வித்தியாசமானவர். அமைதியான திறமைசாலி. திரைக்கதையை பாட்ஷ படத்திற்காக உருவாக்கி ரஜினிகாந்த்தோடு விவாதித்து பிறகு என்னிடம் சொல்வார். நான் அந்தக் காட்சியை மனதில் வாங்கிக் கொண்டு வசனங்களாக்கி அவருக்கு தருவேன். அது மறுபடி ரஜினிகாந்திற்கு போகும். எங்களையெல்லாம் விட மிக உயரத்தில் ரஜினிகாந்த் இருந்தாலும் திரையுலக சம்பிரதாயங்களை அவர் மீறுவதில்லை. டைரக்டரே படப்பிடிப்புத் தளத்தின் முதன்மையானவர் என்பதை அவர் மறுத்ததேயில்லை.

சுரேஷ்..சுரேஷ் என்று ஐந்து நிமிடத்துக்கொரு முறை அவர் பரபரப்பதே இதற்கு சாட்சி. டைரக்டர் என்ற மரியாதை மட்டுமல்லாது மிக சுகமான ஒரு வாஞ்சையும் அதில் இருக்கும். பாட்ஷ திரைப்படத்தில் மாணிக்பாட்ஷவிற்கும் அவருடைய தகப்பனான விஜயகுமாருக்கும் எந்தவிதமான உறவு சரி என்பதில் விவாதம் வந்தது. சுமூகமான உறவா, ச்சீபோ..என்று சீறும் உறவா என்று தீர்மானிப்பதில் பிரச்சனை வந்தது.

‘வளர்க்க வேண்டிய விதத்துல நீ வளர்த்திருந்தா இந்த மாணிக்கம் மாணிக்பாட்ஷவாயிருக்க மாட்டான். திருடன் கிட்ட வேலைக்கு சேர்ந்தவனுக்கு, பெத்த புள்ளையபத்தி என்னா அக்கறை இருக்கும்.. வீட்ல இருக்கற குழந்தைங்களுக்கு வயத்துக்கு சோறு போட்டா மட்டும் அவன் அப்பனாயிட முடியாது. அவங்க வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு யோசிக்கிற வந்தான் அப்பனாக முடியும். அன்பு காட்டறவந்தான் அதிகாரம் பண்ணலாம். நீ அப்பாங்கறா ஒரே காரணத்துக்காக என்மேல் அதிகாரம் காட்டற, இதை நான் ஒத்துக்க முடியாது..’ என்கிற விதமாய் காட்சி இருந்தது.

இந்தக் காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கொண்ட சுரேஷ் படப்பிடிப்பு நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போது சொன்னீர்களே.. இப்படி இருக்கக்கூடாது...’ என்று ரஜினிகாந்திடம் சொன்னார்.

எனக்கு இந்த வாதம் புரியவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் அதற்கேற்ற விதமாய் எழுதித் தரலாம். அல்லது பல்வேறு விதமாக யோசித்துப் பாருங்கள் என்றும் சொல்லலாம். சுரேஷ் சொல்வது சிக்கலான விஷயமாகத் தோன்றியது. ரஜினிகாந்த் அவர்களுக்கு தந்தையைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுவதே சரி என்று பட்டது. சுரேஷ் அதைத் தீவிரமாக மறுத்தார்.

"உண்மையிலேயே மாணிக்கம் அப்பா கெட்டவரா இருந்தாகூட மாணிக்கம் அவரைக் கடுமையாகப் பேசமாட்டான். முதல் காரணம் விஜயகுமார் நிர்பந்தத்தால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்.. அதுவும் குடும்பத்திற்காக. இரண்டாவது ரஜினிகாந்த் என்ற நடிகர் தகப்பனை எதிர்த்துப் பேசக்கூடாது. அது மோசமான முன்னுதாரணமாய் அமையும்.

மூன்றாவது மாணிக்பாட்ஷவிற்கு வில்லன் மீது கோபமேயொழிய வில்லனிடம் வேலை செய்யும் தகப்பனிடம் எந்தக் கோபமும் இல்லை. நான்காவது இரண்டு துருவங்களாக தந்தையும் மகனும் சந்திக்கும் போது இப்படி பிரிந்து விட்டோமே என்கிற வேதனைத் தான் இருக்குமே தவிர குற்றம் சாட்டல் இருக்காது. என்ன விதமான நெகிழ்வு என்பதே என் கேள்வி" என்று சுரேஷ்கிருஷ்ணா சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் அது வேகமான விவாதமாக வளர்ந்து விட்டது.



ரஜினிகாந்த் முரட்டுத்தனமாய் இதுதான் காட்சி என்று சொல்லியிருக்கலாம். சொல்லுகின்ற செல்வாக்கு அவரிடம் நிச்சயம் உண்டு. ரஜினிகாந்த் சட்டென்று விட்டுக் கொடுத்தார். “இந்தக் காட்சி எப்படியும் இருக்கலாம். சுரேஷ் உன் லாஜிக்கும் சரி. என்னுடைய லாஜிக்கும் சரி. ஆனால உன் லாஜிக்கின்படியே இருக்கட்டும்.” உதவி டைரக்டர்களுக்கு முன்னால், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு முன்னால், நடிகர் விஜயகுமாருக்கும், எனக்கும் முன்னால் மிகக் சுலபமாக அவர் விட்டுக் கொடுத்தார். சுரேஷ் கிருஷ்ணாவின் மதிப்பு அங்கே சட்டென்று உயர்ந்தது.

இப்படி சட்டென்று விட்டுக் கொடுத்து விட்டீர்களே என்று வேறு ஒருவர் எடுத்துக்காட்டி கேட்டபோது, “டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பதுதான் நடிகருக்கு நல்லது. சுரேஷ்கிருஷ்ணா என் மீது மிகுந்த மரியாதை உடையவர். அனுசரித்து போகக் கூடியவர். அதே சமயம் அவருக்கு சரி என்று தோன்றக்கூடியதைத் தயங்காமல் சொல்லக் கூடியவர். காரணமில்லாமல் சுரேஷ்கிருஷ்ணா வாதாட மாட்டார். அவர் மனதில் இந்தக் காட்சி பற்றி ஒரு தெளிவு இருக்கிறது. அதை நான் ஏன் கெடுக்க வேண்டும்”.

இந்த இடத்தில் ரஜினிகாந்த் சொன்னது ஒன்று ஞாபகம் வந்தது. “என்னை மதித்து, என் சொல்,பேச்சை பலர் கேட்கிறார்கள் , கேட்கிறார்கள் என்பதற்காகவே நான் அதிகம் ஆடி விடக் கூடாது. பாட்ஷ நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறை சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் உண்டு. அந்த அக்கறையை நான் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. சினிமா கூட்டு முயற்சி, இது டீம் ஓர்க் என்பதை எப்போதும் எல்லோரும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும். இன்று பிரபலமாகி விட்டேன் என்பதாலேயே எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடக்கூடாது”.