Showing posts with label கேள்வி- பதில். Show all posts
Showing posts with label கேள்வி- பதில். Show all posts

Thursday, June 5, 2008

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா - பதிலளிக்கிறார் பாலகுமாரன்

ஐயா , பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?




ஆமாம்।



ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும்। எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம்। கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும்। அந்தப் பெண் இரை என்று தோன்றும்। மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।


அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.



தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை வேகமாக மூடிவிடுகிறார்களே. ஏன் இது?

பொதுவாக சவ ஊர்வலம் வரும்பொழுது கோவில் கதவை மூடுவது தீட்டுபடக் கூடாது என்று சொல்வார்கள். யாருக்கு தீட்டு கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா? இல்லை.

மனதில் ஒரு குறைபாடு வரக்கூடாது என்று இந்த விஷயம் நடைபெறுகிறது। அந்த பிணத்தோடு போகிறவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார்। தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண்டிருக்கிறேனே, என்னுடைய சகோதரனை அல்லது தகப்பனை, அல்லது மகனை, அல்லது நெருங்கிய உறவினனை, நண்பனை பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டாயே। நீ தெய்வமாக இருந்தும் எனக்கு இப்பேர்ப்பட்ட துன்பம் வந்ததே என்று அந்த இடத்தை கடக்கும் போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவநம்பிக்கை வரும்। கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்।

வேதனைப்படுகின்ற நேரத்தில் கடவுளைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது. அது வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சட்டென்று மறைக்கிறார்கள். அந்த இடத்தைக் கடக்கும் போது வெறும் கதவைப் பார்த்துக் கொண்டு அவர் போவார். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை அவரிடம் அசையாது இருக்கும். அவநம்பிக்கை வராது இருக்கும் என்பதுதான் உண்மையான் ஐதீகம்.


வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?

சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.


காமத்தை அடக்குவது எப்படி?

காமத்தை அடக்குவது என்பது முடியாத காரியம். எது அடக்கினாலும் அது மறுபடியும் சீறி எழும். காமத்தை அறிந்துக்கொள்வது தான் காமத்தை அடக்குகின்ற ஒரே வழி. காமத்தை அறிவது எப்படி? இதற்கு தனி கேள்வி கேளுங்கள். தனியாக பதில் தருகிறேன்.