Saturday, June 28, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாகம் 2

பாகம் ஒன்றைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.


கிருஷ்ணதுளசி : புராணக்கதைகளையும் எல்லோரும் அறிந்த தொண்டர்கள் வரலாறுகளையும் மறுபடியும் எழுதுகிறீர்களே? இதில் என்ன லாபம்?
பாலகுமாரன் : தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு புராணக் கதைகள் தெரிவதே இல்லை. அந்தப் புராணக் கதைகள் சொல்லப்படுகிற போதும் அதன் அடிப்படைத் தத்துவம் இங்கு விவாதிக்கப்படுவதில்லை.எதனால் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கப்படுவதே இல்லை. இங்கு உபன்யாசம் செய்கிறவர்கள் தருமர் அழுதார் என்றும், பீமன் கோபமடைந்தான் என்றும், அர்ச்சுனன் காதலித்தான் என்றும், கிருஷ்ணன் நடு நடுவே வந்து விட்டு உதவிகள் செய்து போகிறவன் என்று சொல்கிறார்களே தவிர நமக்குள் இருக்கின்ற இந்த தாபத்தை, கடவுள் தேடலை, உயிர் ஏக்கத்தை இந்த புராணக் கதைகள் எப்படி சொல்கின்றன எப்படி நிவர்த்திச் செய்கின்றன என்றும் நாம் சொல்லியாக வேண்டும். பஞ்சபாண்டவர்கள் என்பது பஞ்ச பூதங்கள். திரௌபதி என்பது உயிர். கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி புலன்களின் துணையோடு சரணடைவதே மகாபாரதம். இதை மகாபாரதம் நேரடியாக சொல்லாது. மறைமுகமாகத் தான் உணர்த்தும். இந்த உணர்த்தலை நான் கதையாக வேறு விதமாக இதன் அடிப்படை விளக்கங்களோடு பேச முற்படுகிறேன். இதுதான் முக்கியம்.

பெரிய புராணக் கதைகளை வெறுமே படித்தால் அதில் எந்த லயமும் இல்லை. ஆனால் போரில் ஈடுபட்டு பல பேரை வென்று வெட்டிக் கொன்று குவித்தவர், பிள்ளையை வெட்டு என்று சொன்னால் என்ன செய்வார் என்ற கேள்வி வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்தப் பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து உண்கின்ற அந்தக் கொடூரத்தை அவரை செய்ய வைக்கின்ற போது அவருக்குத் தன் கையால் வெட்டுப்பட்டவருடைய முகமெல்லாம் இங்கே நினைவுக்கு வரும். அ வருடைய நேர்மையை சோதிக்க இறைவன் செய்த நாடகம் அது.

மனைவிக்கு சத்திய வாக்கு செய்தாகிவிட்டது. தொடமாட்டேன் என்று சொல்லியாகிவிட்டது. அதை நெல்முனையும் மீறாமல் அதே சமயம் அப்படிப்பட்ட சத்தியத்தை வெளியேயும் சொல்லாது இருவரும் ஒன்றாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பண்பை எடுத்துச் சொல்ல வேண்டும். இது பெரிய சத்திய சோதனை. அதை நெல்முனையளவும் மீறாதவர்க்கு இறை தரிசனம் கிடைத்தது. இதை சொல்லியாக வேண்டும். வெறும் ‘தீண்டுவீராயின் திருநீலக்கண்டம்’ என்று சொல்வது யாருக்கும் எதுவும் புரியாது.

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு புராணத்தை, பழந்தமிழ் இலக்கியத்தை சங்கத்தமிழை அறிமுகப்படுத்தி நேர்வழியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு, அவர்களுக்கு பலம் தருவது என் வேலை. இதைச் செய்திருக்கிறேன்.


கிருஷ்ணதுளசி: எழுத்து மட்டுமல்லாது, மற்ற எல்லாக் துறைகளிலும் உள்ள கலைஞர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்ன?


பாலகுமாரன் : ஏன் கலைஞர்களை மட்டும் கேட்கிறீர்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை பொறாமை. பரஸ்பரம் மனிதருக்கு மனிதர் இருக்கின்ற அடிப்படையான விஷயமே பொறாமையாகத் தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் தருமருக்கும், யட்சருக்கும் ஒரு கேள்வி பதில் பகுதி நடக்கும். கலியுகத்தில் மக்களுடைய குணம் என்னவாக இருக்கும் என்ற யட்சன் கேள்விக்கு, கலியுகம் முழுவதும் மக்கள் பொறாமையால் அவஸ்தைப்படுவார்கள் என்று தருமர் பதில் சொன்னார். அந்த பதில் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. இன்னமும் இருக்கும் என்றும் தோன்றுகிறது.
பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலஹீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்ற கேள்வி வரலாம்.தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். பலர் சொந்த வாழ்க்கை அழுகிப் போவதற்கு பொறாமைதான் காரணம்.

இந்தப் பொறாமை மற்றவரை காயப்படுத்துவது மட்டுமல்ல, யார் பொறாமைப்படுகிறாரோ அவருடைய வளர்ச்சியை மிக பெரிதும் பாதிக்கிறது. சரியாக சிந்திக்க முடியாமல் தடுக்கிறது. கற்பனைத் திறனை அறவே அழித்து விடுகிறது. நல்ல விஷயங்களைப் படைக்கும் திறனை அழித்து ஒழித்து விடுகிறது. எனவே வெட்டி அரட்டையில், வீண் விவாதிப்பதே, பிறரை குறை சொல்லி எழுதுவதே தன் நோக்கமாகவும், அதுவே ஞானமாகவும் போய்விடுகிறது. தெளிவான ஒரு ஞானி எது குறித்தும் எப்பொழுதும் எவர் மீதும் பொறாமைப்பட மாட்டார். ஆனால் பொறாமை தான் ஞானம் என்றே இங்கு பல அறிவுஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருடைய படைப்புத்திறன் குறைந்து போனால் அவருடைய நடுநிலைமை உடைந்து போகிறது. நடுநிலைமை உடைந்து போனால் படைப்புத்திறன் குறைந்து போகிறது. அப்பொழுது மற்றவரை குறை சொல்வது என்பதும், ஏகடியம் பேசுவதும் இயல்பாய் போகிறது.

நடுநிலைமை என்கிற விஷயம் மிக ஆரோக்கியமானது. அது சொந்த வாழ்க்கையை சீராக ஆக்குவது மட்டுமில்லாமல் படைப்புத்திறனை மிகப் பக்குவமாகவும், சிறப்பாகவும் கொண்டு வந்து கொடுக்கிறது. சிறப்பான படைப்புகள் எந்த முயற்சியும் இன்றி பாராட்டுகளைக் குவிக்கும். காலம் கடந்து நிற்கும். படைப்பாளிக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்.

கிருஷ்ணதுளசி: இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே। இது புது டிரண்டாக இருக்கிறதே। இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா. ........................தொடரும்

Thursday, June 5, 2008

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா - பதிலளிக்கிறார் பாலகுமாரன்

ஐயா , பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?




ஆமாம்।



ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும்। எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம்। கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும்। அந்தப் பெண் இரை என்று தோன்றும்। மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।


அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.



தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை வேகமாக மூடிவிடுகிறார்களே. ஏன் இது?

பொதுவாக சவ ஊர்வலம் வரும்பொழுது கோவில் கதவை மூடுவது தீட்டுபடக் கூடாது என்று சொல்வார்கள். யாருக்கு தீட்டு கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா? இல்லை.

மனதில் ஒரு குறைபாடு வரக்கூடாது என்று இந்த விஷயம் நடைபெறுகிறது। அந்த பிணத்தோடு போகிறவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார்। தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண்டிருக்கிறேனே, என்னுடைய சகோதரனை அல்லது தகப்பனை, அல்லது மகனை, அல்லது நெருங்கிய உறவினனை, நண்பனை பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டாயே। நீ தெய்வமாக இருந்தும் எனக்கு இப்பேர்ப்பட்ட துன்பம் வந்ததே என்று அந்த இடத்தை கடக்கும் போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவநம்பிக்கை வரும்। கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்।

வேதனைப்படுகின்ற நேரத்தில் கடவுளைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது. அது வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சட்டென்று மறைக்கிறார்கள். அந்த இடத்தைக் கடக்கும் போது வெறும் கதவைப் பார்த்துக் கொண்டு அவர் போவார். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை அவரிடம் அசையாது இருக்கும். அவநம்பிக்கை வராது இருக்கும் என்பதுதான் உண்மையான் ஐதீகம்.


வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?

சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.


காமத்தை அடக்குவது எப்படி?

காமத்தை அடக்குவது என்பது முடியாத காரியம். எது அடக்கினாலும் அது மறுபடியும் சீறி எழும். காமத்தை அறிந்துக்கொள்வது தான் காமத்தை அடக்குகின்ற ஒரே வழி. காமத்தை அறிவது எப்படி? இதற்கு தனி கேள்வி கேளுங்கள். தனியாக பதில் தருகிறேன்.

Monday, June 2, 2008

புத்தக மதிப்புரை – “காதலாகிக் கனிந்து”



மே25, ஞாயிறு – 2008 தினமலர் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகி இருக்கும் எழுத்துச்சித்தரின் "காதலாகிக் கனிந்து" புத்தகம் பற்றிய பார்வை.............
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காதலாகிக் கனிந்து… ஆசிரியர்: பாலகுமாரன், வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ், 16, வெங்கட் நாராயணா சாலை, தி।நகர். சென்னை-17 (பக்கம்:472, விலை ரூ.150)

திருவண்ணாமலையில் ஆன்மிக சான்றோர் பலர் அற்புதம் நிகழ்த்தியுள்ளனர்। சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி என வாழ்ந்த அந்த திருத்தலத்தில் யோகிராம் சுரத்குமார் அவர்களும் தங்கியிருந்து அன்பர்கள் பலருக்கு வழிகாட்டி அருள் பாலித்த அற்புதமான ஞான புருஷர்। அன்பர்கள் பலரால் விசிறி சாமியார் என நேசத்துடன் அழைக்கப்பட்ட மகானின் அன்புப் பார்வைக்கு ஆட்பட்ட பக்தர்கள் பலர், கற்றறிந்த மேதைகள், உயர் பதவியில் இருந்த நாணயமும், நேர்மையும் அணிகலனாகக் கொண்ட ஆன்றோர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதி அரசர்கள், பிரபல எழுத்தாளர்கள் என சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் அடக்கம்। படைப்பிலக்கிய வாதியாக தமிழ் கூறும் நல்லுலகில் அதிகம் அறியப்பட்டுள்ள பாலகுமாரன் அண்மைக்காலங்களில் ஆன்மிகச் சான்றோர்களின் வாழ்க்கை சரிதங்களை கதைபோல தனக்கே உரித்தான தமிழ் நடையில் எழுதி வருகிறார்। யோகிராம் சுரத்குமாரின் அன்புக்குரியவரான பாலகுமாரனின் பேனா ஒரு ஆன்மிக உரைநடை காப்பியத்தை தமிழுக்கு வழங்கியிருக்கிறது. பாலகுமாரனின் சொந்த வாழ்க்கைப்பயணம், அவர் அதில் எதிர் கொண்ட வித்தியாசமான அனுபவங்கள், அவருடைய வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவங்கள் என பக்கங்கள் வளர வளர யோகிராம் சுரத்குமாருடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு, யோகியை குருவாக ஏற்றுக்கொண்ட அவர் மனப்பக்குவம் என, பாலகுமாரனின் இதய நெகிழ்ச்சியுடன் கூடிய எழுத்துடன் நாம் நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு விடுகிறோம். ஒரு குருவுடன் ஒரு சிஷ்யனுக்கு ஏற்படும் அருளாசி அனுபவம் இந்தப் புத்தகத்தில் சிறப்பாக பதிவு செய்யப்படுள்ளது. பாலகுமாரனே குறிப்பிட்டுள்ளது போல, அவருள் புகுந்து யோகிராம் சுரத்குமார் எனும் சத்குருநாதன் தான் இந்தப் புத்தகத்தை எழுத அருள் புரிந்திருக்கிறார் என்று நமக்கும் சொல்லத் தோன்றுகிறது- - ஜனகன். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி தினமலர். மே 25 2008.



புத்தகத்தின் நேர்த்தியான நெசவில் மதிமயங்கி விட்டதாலோ என்னவோ “காதலாகிக் கனிந்து” என்ற பெயரை “காதலாகிக் கசிந்து” என்று மாற்றி பிரசுரித்துவிட்டிருக்கிறார்கள். பிழை பொறுப்போமாக ..

Wednesday, May 21, 2008

சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்..

சீனாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் முப்பத்தியிரண்டாயிரம் பேர் இறந்தனர். பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18/5/2008 அன்று மீண்டும் 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து விட்டதாகவும், அணுஆயுதம் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீன நகரான கிங்சுவான் நகரில் தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக அங்குள்ள நாய்களை கொல்ல அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிசூவான் பகுதியில் உள்ள ஏரி உடையும் கட்டத்தில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் நில அமைப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தினமலர் 19 & 20/05/2008

ஐயா,


“இந்தியாவின் ஈசானியத்தில் இருக்கும் திபெத்தில் சீனா தவறாக கால் வைத்து விட்டது. திபெத்தை அடக்க முடியாது. திபெத்தில் அத்து மீற முடியாது. திபெத்தில் ஆ ளுமை எந்த விதமாகவும் செய்துவிட முடியாது. அங்கே தவறாக நுழைந்தவர்கள், தப்பாக இருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். சீனா தாக்கப்படும் என்பதற்கு திபெத்தில் நடந்த சில விஷயங்கள் சொல்கின்றன. இஸ்லாமியர்களோ, பிரிட்டிஷ்காரர்களோ திபெத்தை சீர் குலைக்கவேயில்லை. சீனர்கள்தான் முதன் முதலில் செய்து இருக்கிறார்கள். அனுபவிப்பார்கள்.”


- திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில் – ஏப்ரல் 21 , 2008

" சீனா தாக்கப்படும் என்பதற்கு அர்த்தம் போர் மூளும் என்பதல்ல. ஒலிம்பிக் நடக்கும் போது அங்கங்கே நடக்கும் கலவரங்களாகவும் இருக்கும். இதற்குக் காரணம் ரகசியமாகக் கனன்று கொண்டிருக்கும் கம்யூனிஸ எதிர்ப்புப் பட்டாளமாகவும் இருக்கலாம். அல்லது எங்கு விழா நடந்தாலும் சீர் குலைக்கும் மதவாத வன்முறைக் கும்பலாகவும் இருக்கலாம். திபெத் ஒரு சூட்சும பூமி. அங்கு வன்முறை செய்தது தவறு. இதற்கு விளைவுகள் உண்டு. என்ன ஆதாரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் அனைவரும் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டியது தான். இதை நான் தொடை தட்டி ஆர்ப்பரிக்கவில்லை. என் உள்ளுணர்வில் ததும்பி வழிந்ததைச் சொல்கிறேன்”

- திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில் - மே 7, 2008

திபெத் பற்றி நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. திபெத்தை சீனா தொட்டது தவறு .அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தெளிவாக சொல்லியிருந்தீர்கள். சீனாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு முப்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இருபத்தியேழாயிரம் பேருக்கு மேல் காணவில்லை. உண்மையான தொகை கடைசி வரை சொல்லப்படமாட்டாது என்றும் சொல்கிறார்கள். ஒரு தேசத்தில் ஒலிம்பிக் நடக்க இருக்கின்ற நேரத்தில் இது மிகப் பெரிய வேதனை. அவமானம். இதே கருத்தை மேலும் சில வாசகர்களும் எதிரொலித்திருக்கிறார்கள். இந்த துக்ககரமான சூழ்நிலையில் இன்னும் விளக்கமாக திபெத்தைத் தொல்லைப்படுத்தியதால் சீனாவிற்கு ஏற்படும் பாதிப்புப் பற்றி சொல்ல முடியுமா ?

சீனா ஒரு சர்வாதிகார நாடு. கம்யூனிஸ்டுகள் அந்த சர்வாதிகாரத்தை தொழிலாளர் சர்வாதிகாரம் என்று சொல்வார்கள். சர்வாதிகாரம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது வெகு நிச்சயம் நசுக்கப்படும். கிழித்தெறியப்படும். இதுதான் ரஷ்யாவில் நடந்தது. விரைவில் சீனாவிலும் இந்த தொழிலாளர் சர்வாதிகாரம் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கம், மாவோயிஸம் சிதறடிக்கப்படும். இந்த சர்வாதிகாரப் போக்கு உள்ளவர்கள் அமைதியாக இருப்பவர்களை , ஆயுதங்கள் இல்லாதவரை, போர் முனைப்பு அற்றவரை பெரிதாகக் கேலி செய்வார்கள். ஆயுதங்களே சர்வாதிகாரத்தின் ஆணிவேர் என்பதால், போர் என்பதே அடக்குமுறை என்பதே சர்வாதிகாரத்தின் செயல்திறன் என்பதால் இந்த அடக்குமுறையும் ஆயுதங்களும் இல்லாதவரை அவர்கள் இ ழிவாகப் பார்ப்பார்கள்.

இ து தவிர சீன மக்களுக்கு ஒரு கலாசாரக் குறைபாடு உண்டு. தங்கள் உருவம் குறித்தும்,கண்கள் குறித்தும், நிறம் குறித்தும் அவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். அதை மீறுவதற்காக மிகுந்த உக்கிரத்தோடும், வன்முறையோடும் தங்களை நிரூபிக்கின்ற செயலுக்குத் துடிப்பவர்கள். ‘உன்னை விட நான் உயர்வு’ என்று சொல்வதற்கு மற்ற எல்லா தேசத்தினரையும் விட சீன மக்களுக்கு ஆர்வம் அதிகம். இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி சீனத்து அரசாங்கம்,அதிகாரிகள் மிகப் பலமாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தால் தான் அவர்கள் ஆக்ரமிப்பு அட்டகாசத்தை தொடர்ந்து பல இடங்களில் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த சீனர்களுக்கு ஜப்பானியர்கள் என்றால் பயம். ஜப்பானியர்களுக்கு சீனர்களை விட தாங்கள் உயர்ந்த ஜாதியினர்; உயர்ந்த வகுப்பினர் என்ற இறுமாப்பு உண்டு. ஜப்பானால் சீனா பல முறை மிகப் பலமாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. அப்படி கண்டிக்கக்கூடிய இடங்களில் சீனா வாலாட்டாது. எதிர்த்துப் பேசாது. எந்த தொந்தரவும் செய்யாது. சில சமயம் அதீத விசுவாசியாகக் கூட நடந்து கொள்ளும். ஆனால் அமைதியாக இருக்கின்ற ஆயுதம் இல்லாத திபெத்திற்குள் புகுந்து தேவையில்லாத முறையில் அவர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தார்கள். சீனா திபெத்தைக் கபளீகரம் செய்தது. உலக நாடுகள் சீனாவின் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் உதவி தேவை என்பதால் இதைக் கண்டுகொள்ளவில்லை. திபெத்தும் தன் குரலைப் பெரிதாக உயர்த்தவில்லை. தலாய் லாமாவே சீனாவுடன் சமாதானமாகப் போவதற்கே தயாராக இருந்தார்.


ஆனால் திபெத் ஆயுதம் இல்லாத நாடு அல்ல. இரும்பு ஆயுதங்களை விட , துப்பாக்கிகளை விட , குண்டுகளை விட அங்குள்ள துறவிகள் மிக வேகமானவர்கள். அடிபட்டு மிதிபட்டு ரத்தம் வழிய கிடக்கின்ற தன் தேசத்தைப் பார்த்து ஏதேனும் ஒரு இடத்தில் அவர்கள் அமைதியாக உட்கார்ந்து மன துக்கப்பட்டு மன ஒருமையோடு பிரார்த்தனைகள் செய்தால், மந்திர ஜபங்கள் செய்தால் அதன் விளைவுகள் மிக மிக மோசமானதாக இருக்கும். அது பல நூறு டாங்கிகளை விட, பல ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளை விட,போர் விமானங்களை விட மிக வலிமைப் பொருந்தியது. சீனாவிற்கு வன்மையான ஆயுதங்களோடு தான் பரிச்சயம் உண்டே தவிர இந்த வித பிரார்த்தனைகளில் ,மனம் ஒருமுகப்பட்ட மந்திரஜபங்களில், அ தன் பிரயோகங்கள் பற்றி எந்த ஞானமுமில்லை. அவைகளை வெகுகாலம் முன்பே சீனா இழந்து விட்டது. இந்த திபெத்தை மிதித்து அடக்கிய , வன்முறை காட்டிய கொடுமை இன்னும் பல மோசமான விளைவுகளை சீனாவில் ஏற்படுத்தும். சீனாவில் ஒலிம்பிக் நடத்துவது கூட ஒரு வகையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த மக்கள் தங்கள் கலாச்சாரமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தாண்டி வேறு மக்களை, வேறு கலாச்சாரங்களைத் தரிசிக்கப் போகிறார்கள். அது அடுத்தத் தலைமுறையினரிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து வெறும் வன்முறைக் கும்பலாய், வெறும் சர்வாதிகார ஆட்டமாய் சீனா இருக்க முடியாது. ஒலிம்பிக்கை நடத்த சீனா விழைவது ஒரு அகம்பாவத்தினால் தான். அது என்னென்ன விதமான உளமாறுதல்களை, உடை மாறுதல்களை சீனாவில் ஏற்படுத்தும் என்பது பற்றி ஆ ழ்ந்து சிந்திக்கவில்லை.

எளியவரை வலியவர் அடித்தால் வலியவரைத் தெய்வம் அடிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. மாஸ்கோவின் இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டதும் ரஷ்யா சிதறுண்டு போயிற்று. சீனா இதை விட மோசமான நிலையை அனுபவிக்கும்.

Thursday, May 15, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி

ஊஞ்சலின் ஒரு உந்துதல் இன்னொரு உந்துதலை உருவாக்குவதைப் போல இந்தப் பேட்டிப் பகுதி ஒரு கேள்விக்குண்டான பதில் இன்னொரு கேள்வியைத் தோற்றுவித்து, அதற்குண்டான பதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பும் விதமாய் அமைந்திருக்கிறது. மனதை உற்சாகப்படுத்தி, புத்தியை குளுமையாக்கும் ஒரு ஊஞ்சலின் அசைவு போல ஆரோக்கியமான கேள்வியும், அர்த்தமுள்ள பதிலுமாய் இந்தப் பகுதி இருப்பதால் இது பொன்னூஞ்சல்.







கிருஷ்ணதுளசி: எழுத்துப்பணி உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? ஆமெனில் எதனால் இந்த திருப்தி ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?




பாலகுமாரன் : என் எழுத்துப்பணி எனக்கு மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கிறது. நான் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்து திட்டமிட்டிருந்தேனோ, அதை மிகச் செவ்வனே செய்திருக்கிறேன். சில சமயம் என் எழுத்துகள் நான் நினைத்ததையும் விட மிக அழகாக என்னிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது என் எழுத்தை நான் படிப்பதால் ஏற்படும் திருப்தி மட்டுமல்ல. என் எழுத்தைப் படித்த வாசகர்கள், என்னிடம் எதிரொலிப்பதால் ஏற்பட்ட சந்துஷ்டியும் கூட.

என்னுடைய எழுத்தை ஆரம்ப காலத்திலிருந்து படித்து, என்னுடனே வளர்ந்து, என் பரிணாம வளர்ச்சிப் போல அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, என்னுடைய எழுத்துகளை தனக்கு, தன் வாழ்க்கையில் சாதகமாய் உபயோகப்படுத்திக் கொண்டு வளர்ந்து பலம் பெற்ற வாசகர்கள் பலர். இதை நேரடியாகவும், கடிதம் மூலமும் பல நூறு முறைகள் கேட்டும், படித்தும் நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

உங்களால் என் வாழ்க்கை செம்மை ஆயிற்று. தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை உதறிவிட்டு நான் வாழ்ந்தேன். என்னுடைய குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு, எனக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதற்கு உங்கள் எழுத்துதான் காரணம் என்றெல்லாம் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். ஒரு படி மேலே போய் தன் குழந்தைக்கு பாலா என்று பெயரிட்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது என்னை சந்தித்தாலும் கை கூப்பி மிகப் பரவசமாய் நமஸ்கரிக்கிறார்கள். எத்தனை எழுத்தாளர்களுக்கு இது கிடைத்தது என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கு, என் வாழ்க்கைக்கு உதவி செய்தது என்ற வாசகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் என்னிடம் இருப்பதை நான் உணருகிறேன்.

ஆனால் வலது என்று ஒன்று இருந்தால் இடது என்று ஒன்றிருக்கும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். இந்த உலகம் த்வந்தமயமானது; இரண்டானது. என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாக படித்தவிட்டு அல்லது வேறு எவ ரேனும் படிக்கக் கேள்விப்பட்டு அதைத் தான் படித்ததாய் நினைத்துக் கொண்டு பாலகுமாரன் இப்படி எழுதுகிறார், அப்படி எழுதுகிறார் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.

நம்முடைய தமிழ் இலக்கியத்தில் சரியானபடி படித்துவிட்டு விமர்சனம் செய்கிற ஒரு பாங்கு வளரவே இல்லை. அபிப்ராயங்கள் தான் அல்லது புத்தகத்தைப் பற்றிய மேலோட்டமான செய்திதான் வலம் வருகின்றன. விமர்சனக் கலை என்பது தமிழில் இல்லவே இல்லை. அப்படி சிலர் ஆரம்பித்தும் அது அடாவடித்தனத்தில்தான் முடிந்தது. உண்மையாக இல்லை. விமர்சனம் இல்லாது போயினும், நல்ல வாசகர்கள் தமிழில் இருக்கிறார்கள். புத்தக திருவிழாவில் புத்தகம் விற்பதும், அடிக்கடி புத்தகத் திருவிழா நடப்பதும் நல்ல படிப்பாளர்கள் பலமாக வளர்வதும் இதற்கு நல்ல உதாரணங்களாக கொள்ளலாம்.


கிருஷ்ணதுளசி: நீங்கள் ஆரம்பத்தில் பாலியல் பற்றி எழுதுவதாகவும் இப்பொழுது ஆன்மீகம் பற்றி எழுதுவதாகவும் முற்றிலும் மாறுபட்டதாகவும் குறை சொல்கிறார்களே சில வாசகர்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




பாலகுமாரன் : நான் நுனிப்புல் மேயும் வாசகர்கள் என்று சொன்னது இவர்களைப் பற்றித்தான். பாலியல் பற்றி நான் மிகக் குறைந்த அளவில் தான் எழுதியிருக்கிறேன். பாலியல் வாழ்க்கையில் மிக ஆதாரமான விஷயம். நிறைய பேர் திருமண வாழ்க்கை இங்கு குப்பைத் தொட்டியாய் போனதற்கு காரணம் பாலியல் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாததும், பெண்களை அன்பாக அணுகாததும் தான் காரணம். ஆண் என்ற மமதை, அலட்சியம் அல்லது ஆணாதிக்கம் என்று எகிறுகின்ற பெண்கள் எண்ணிக்கை அதிகமானதும் காரணம். இந்தப் பாலியல் குளறுபடிகள் வாழ்க்கையில் இருப்பதை நான் கண்ட பிறகு எப்படி இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை செய்து இது தொடர்பாக வெகு சில கதைகளே எழுதியிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை, வேலை, வருமானம், குழந்தைகள், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பர்கள் என்றெல்லாம் நகர்ந்து அதிலே பெண்களுடைய பங்கும், ஆண்களுடைய பங்கும், காமத்தினுடைய பங்கும் என்னவென்று யோசித்து எழுதியிருக்கிறேன். வெறும் பாலியலோ, வக்கிரமான பாலிய லோ நான் எழுதியதில்லை. பாலியல் விஷயத்தில் தவறான அணுகுமுறை முகத்தில் அடித்து வீழ்த்தும் என்பதை சொல்லுவதற்காகவும் சில கதைகள் எழுதியிருக்கிறேன்.

பாலியல் மட்டுமே எழுதியிருக்கிறேன் என்ற பார்வை வக்கிரமான பார்வை. அப்பா அம்மா கதை தானே எழுதியிருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வது படிப்பின்மை. படித்தது பற்றிய தெளிவின்மை. இவர்கள் தான் நுனிப்புல் மேய்ந்து விட்டு, மேலாக படித்து விட்டு, என் எழுத்தை சரியாக அணுகாமல் புறம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் எவரையாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது சிலருடைய வாழ்க்கை. இவர்கள் தானும் உருப்படியாக செய்ததில்லை. மற்றவர் உருப்படியாக செய்ததையும் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய பரிணாம வளர்ச்சி என்னவோ அதைத் தான் என் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

இருபது வயதில், இருபத்தி ஐந்து வயதில், பெண் ஒரு பிரமிப்பாகவும் மிக அவசியமானதாகவும் இருந்தது. இது மெல்ல மெல்ல மாறி பல்வேறு விதமான உருவகம் எடுத்து குழந்தைகளோடு கூடிய ஒரு தாய். அவள்தான் மனைவி என்ற அழகும் சேர்ந்தது. திருமணத்திற்கு நிற்கின்ற பெண்களைப் பற்றி கவலைப்படுகின்ற கணவன் மனைவியாக இருப்பவர்கள் பற்றிய கதைகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பாலியல் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட விஷயம். பெண்கள் போகப் பொருளாகக் கருதப்பட்ட விஷயம். இதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மிகச் சில கதைகள் எழுதியிருக்கின்றேனே தவிர என் எழுத்துகளில் பலவும் பல்வேறு விதமான கோணங்களைக் கொண்டவை. தன்னைத் தேடுபவை. ஆத்ம விசாரம் கொண்டவை. தனிமையை ரசிப்பவை. மற்றவர்களுக்கு எளிதில் உண்மையாக விட்டுக் கொடுப்பவை. போலித்தனத்தைச் சாடுபவை. சத்தியமாக வாழ்க்கையில் இருக்கின்ற சந்தோஷத்தை இனம் காட்டுபவை. இதைப் புரிந்து கொண்டு இதை நன்றாக என் கதைகள் மூலம் அறிந்துக் கொண்டு தனக்குள் விவாதித்து தெளிவு பெற்று தேர்ந்த வாசகர்கள் எனக்கு
மிக அதிகம். அதனாலேயே நான் கொண்டாடப்படுகிறேன். அதனாலேயே பலர் பொறாமைக்கும் ஆளாயிருக்கிறேன்.

என் ஆன்மீகம் என்பது மிக ஒழுங்கான, சீரான வளர்ச்சியைக் கொண்டது. ஆன்மீகம் திடுமென்று நான் எழுதவில்லை. என்னுடைய முதல் கதையிலேயே கூட ஆன்மீகம் கலந்திருக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளிலே கூட கடவுள் தேடல் என்ற விஷயத்தினுடைய சாயல் உண்டு.பாசுரங்களூம், தேவாரங்களும் மேற்கோள் காட்டுவது மட்டுமல்லாது,எல்லோராலும் கொண்டாடப்படும் நான் எழுதிய குதிரை கவிதைகளில் கூட இந்த ஆன்மீகத் தேடல் மிகப் பலமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவலான இரும்பு குதிரைகளிலேயே இந்தக் குதிரைக் கவிதைகள் இடம் பெற்று விட்டன. இந்த ஆன்மீகம் எனக்கு என்னுடைய தாயாரால் அ றிமுகபடுத்தப்பட்டு, பல புத்தகங்களால் பலமாக்கப்பட்டு, என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் பூரணமாக்கப்பட்டது. குருவருளால் எனக்குள் மிகப்பெரிய மலர்ச்சியை, என் இருப்பை, என் உயிர் அசைவை, எனக்குள் இருக்கின்ற அந்த ஆன்மாவின் தரிசனத்தை, கடவுள் சிறப்பை நான் மனமார உணர்ந்தேன். பல்வேறு ஆன்மீக அனுபவங்களுக்கு ஆட்பட்டேன். அவைகள் தான் என் எழுத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது குடும்ப வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டது, தள்ளி நிற்பது, துறவறம் போன்றது என்ற விஷயத்தை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை; சொன்னதுமில்லை. உலக வாழ்க்கையில் புரண்டு விழுந்து தன்னை இடையறாது அவதானிப்பதே என்னுடைய கொள்கை. அந்த அவதானிப்பைக் கூர்மையாக்கிக் கொள்ள என்னவெல்லாம் தேவை என்பதை நான் சொல்லியிருக்கிறேன்.

என்னுடைய ஆன்மீகம் கற்பனையானது அல்ல. நான் அனுபவித்தது. எனக்கு தெளிவாக ஊட்டப்பட்டது. என்னிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய சத்தியம் அது. அ து வாழ்க்கையோடு இரண்டற கலந்திருக்கும் விஷயம் என்று நான் சொல்வது இன்று புரிந்துக் கொள்ளப்படாவிட்டாலும் பிறகு ஒரு நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதில் எனக்கு நெல்முனையளவும் ஐயம் இல்லை.

Thursday, May 8, 2008

ஐயா , உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா? - பதிலளிக்கிறார் பாலகுமாரன்

ஐயா , உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?



உலகத்தில் இதைவிட முட்டாள்தனமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. ஒரு வீடு மதுரையாக இருந்தால் என்ன. சிதம்பரமாக இருந்தால் என்ன. அந்த வீட்டிற்குள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள். என் வீடு ஒரு பொழுது சிதம்பரம், ஒரு பொழுது மதுரை. எந்த நேரம் சிதம்பரம், எந்த நேரம் மதுரை என்பது உமக்கு சொல்வதற்கில்லை. இப்படித்தான் எல்லா வீடும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.




பசுவை ஏன் தெய்வமாக கொண்டாடுகிறார்கள்?

பசுவின் பால் உணவோடு சம்ப ந்தப்பட்டது. உணவு உயிர் வாழ்தலோடு சம்ந்தப்பட்டது. உயிர் வாழ்தலோடு சம்ந்தப்பட்ட எல்லா விஷயங்களும் தெய்வம்தான். பசு மட்டும் அல்ல, பூமியும் தெய்வம்தான். உயிர் வாழ அதுதான் உணவு தருகிறது. அப்பொழுது ஏன் பாம்பை வணங்குகிறார்கள். அதுவும் உயிர் வாழ்தலோடு சம்மந்தப்பட்டதுதான். பாம்பு கொத்தினால் உயிர் வாழ முடியாது.




ஐயா ,நமீதாவின் தமிழ்....?



கொஞ்சும் சலங்கை. குழறும் தமிழ்.
சொல்லும் அதன் பொருளும் ஒன்றாக வெளிப்பட்டு மற்றவருக்கு புரிய வைக்கவேண்டும். நமீதா பேசுவது நமக்கு புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் சொல்லும், பொருளும் குழறலாக இருந்தால் தவறில்லை. கொஞ்சலாக இருக்கும்போது காதுக்கு இதமாக இருக்கிறது.

Tuesday, May 6, 2008

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்


பாலகுமாரன் அவர்களே , நீங்கள் நேரடியாக, வெளிப்படையாக இந்தப் பதிவை எழுதலாமே , ஏனிப்படி ஒரு முகமூடிக்குள்ளிருந்து எழுத விரும்புகிறீர்கள் என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு எங்கள் பதில் இதோ…………..


அறிவன் அவர்களுக்கு வணக்கம்.



ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தபடி இ ந்த வலைப்பக்கங்கள் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களாகிய எங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.



நாங்கள் பாலகுமாரன் எழுத்துக்களை நன்கு படித்தவர்கள். விரும்பி அனுபவித்தவர்கள். அவருடைய எழுத்துக்களை நேசித்து ஜீரணித்து உரம் பெற்றவர்கள். தெளிவு பெற்று அவரவர் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள். செம்மை அடைந்ததாலேயே நன்றி பகர அவரைத் தொடர்பு கொண்ட போது நேரடியாக பல விஷயங்களுக்கு விளக்கங்கள் பெற்று மேலும் தெளிவு பெற்றவர்கள்.

எங்களைப் போல திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்கள் மூலம் ஒரு நல்ல பக்குவத்தை மற்ற வாசகர்களும் அவர் எழுத்தை புரிந்து கொண்டு அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் எழுத்துக்களைக் கொண்டாடும் பல வாசகர்களை மேலும் உற்சாகமூட்டுவதற்காகவும் இந்த வலைப்பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திரு. பாலகுமாரன் எல்லோரோடும் சகஜமாகப் பேசிப் பழ க மாட்டார் என்பது பலரும் அறிந்ததே. அளவாகவே பேசுவார். ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் கேள்விகள் கேட்டால் பதில் கங்கை எனப் பொங்கிப் பாயும். கேட்ட அடுத்த வினாடியே பதில் ஆ ரம்பித்து விடும். கேள்விக்கு அப்பாலும் போய் அவர் சொல்லும் விளக்கங்கள் அற்புதமானவை.

மழை பொழிவது போல் விளக்கி முடித்த பின் அதை பதிவு செய்து கொடி பறக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு நாளும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட முயற்சிகளையும் அவர் இத ற்கு முன்னர் ஆதரித்ததுமில்லை. ஆ னால் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எங்களுடைய நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்டு எங்கள் செயலுக்கு ஆதரவு தந்து வருகிறார். அவ்வளவே.

எல்லா விஷயங்களிலும் ஒளிவு மறைவில்லாமல் நேர்மையாகச் செயல்படும் எங்கள் குருநாதர் எழுத்துச் சித்தருக்கு எந்த முகமூடியும் எந்த நாளும் தேவைப்பட்டதில்லை. “ எழுதுவது மட்டுமே என் வேலை . அதை பிராபல்யப்படுத்துவதோ , என் எழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதோ என் வேலை இல்லை” என்று தெளிவாக தன் எழுத்து வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் எழுத்துச்சித்தருக்கு இந்த வலைப்பக்கத்தைப் பராமரிக்க நேரமுமில்லை என்பதே நிஜம். அதுவும் தவிர வலைப்பக்கங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும் அவர் முயற்சித்ததில்லை. எனவே நாங்கள் இந்த நல்ல முயற்சியில் இறங்கினோம்.


ஆறு பாகத்தில் . கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பக்கங்களில் . சோழர்களின் சிறப்பை, தமிழ் நாகரிகத்தை மிகச் சிறந்த முறையில் பிரம்மாண்டமாக நெய்த எழுத்துச்சித்தர் பாலகுமாரன் எந்த புத்தக வெளியீட்டு விழாவோ , பாராட்டு விழாவோ எவரையும் நடத்த விடவில்லை என்பதிலிருந்து அவர் தன்மை எத்தகையது என்பதை தெளிவுள்ளவர்கள் புரிந்துக் கொண்டிருப்பர். அ ப்படிப்பட்ட உன்னதமான படைப்பை முடித்த கையோடு அடுத்த வேலையாக இராஜேந்திர சோழனைப் பற்றிய நாவலுக்காக படிப்பதும், ஆ வ ண க் குறுந்தகடுகளைப் பார்த்துத் தகவ ல் சேகரித்துக் கொண்டும் , இ ன்னொரு மிகக் கடினமான நாவ லான “ ம ரண த்திற்குப் அப்பால் வாழ்க்கை” எ ன்பதற்காகத் தன் மூப்பின் அய ர்ச்சியையும் தாண்டி தன் வேலையைக் காதலோடு செய்து கொண்டிருக்கும் எங்கள் ஐயா ஓய்வு நேரத்தில் எங்களோடு பகிர்ந்து கொள்வதை இந்த வலைப்பக்கத்தில் நாங்கள் ஜனரஞ்சகமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்.


முத்துச் சிப்பி முத்தை உருவாக்குவதோடு அது தன் வேலையை நிறுத்திக் கொள்ளும் . முத்துக்குளிப்பவர் அந்த முத்துக்களை இவ்வுலகிற்குக் கொண்டு வந்துக் கொடுப்பர். கடலுக்கு வெறுமே காலை நனைக்க வருபவருக்கு இது பற்றித் தெரிய நியாயமில்லை தான்.



- கிருஷ்ணதுளசி மற்றும் நண்பர்கள்.