Wednesday, December 2, 2009

திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்




திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.

தங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.


புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்து விட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.


இது எப்படி சாத்தியம்? கேட்டார்கள். “இந்தப் பெயரைச் சொன்னால் போதும்.. எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.


அவை கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி, உணவு வாங்க ஒரு கொட்டாங்சச்சி, கையிலே சிறு கோல் . இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை யோகி ராம்சுரத்குமார் என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்?’ என்று கேட்டபோது “கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயர் எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார் என்பார்.


இது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.


கணவன் மனைவிக்குள் சண்டை, மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார். ‘ரொம்ப நல்லது, செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன். அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.

என்னாயிற்று..?

எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி..


“பகவான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்தேன், வேலை செய்யவில்லை. மாறாக என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்துவிடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார். உங்களுடைய பக்தராக”,என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு செளக்கியமாக வாழ்ந்தது.
பக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்.. வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்.. அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது ‘வந்தே மாதரம்’ என்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் ‘ராம ராம ராம’ என்றும் ‘ஓம் ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.

ஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, யோகி ராம்சுரத்குமாரை தரிசித்து விட்டுப் போகலாம் என்று வந்தார். தான் திருப்பதிக்கு போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்கு போக வேண்டுமா..? இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் சரியென்று சொல்லி, ‘வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்த பிச்சைக்காரன் யார் என்று கேளுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.

அந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்க சொன்னது ஞாபகம் வந்தது. ‘பெருமாளே.. திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்?’ என்று உரக்க வினவினார்.

“ நேனே” என்று கருவரையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெளிவாக புரிந்தது.

இந்த கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது.. தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்து போய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு..
அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான், அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக் கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.


வணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.

மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, “யோக்கியதை இருந்தால் கூப்பிடுங்கள், எனக்கு யோக்கியதை இருந்தால் பேசுங்கள், எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்த கதவு திறந்தது.

‘உனக்கு என்ன வேண்டும்..?’

‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. என்க்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா ? கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக.

அவர் பதறினார். இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா? என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார். எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது. வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுக்கோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துக்கள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது, உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.

ஞானியிடம் என்ன கேட்பது..? நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளொளியைப் பெருக்கி, இறை தரிசனம் காட்டினார்.

யோகி ராம்சுரத்குமார்....20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலும் பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.


திருவண்ணாமலை செங்கம் ரோடில் அவருடைய ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

“ யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்! ”

என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்” என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.

நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்.



Monday, November 30, 2009

திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்



கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு, பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதை கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.

விளைவு மிகச் சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு “யோகி ராம்சுரத்குமார்” என்று பின்னால் பெயர் வந்தது. இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளைநிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது. ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப்படுத்தினர்.

அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க... “இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்” என்றார்.

காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். ‘எத்தனை மகான்களை தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனிதமான இடம்.’. அவருக்கு மெய்சிலிர்த்தது.


இந்த புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவலிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது. இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அதுவே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது’ . இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.

இது என்ன... இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்... இந்தத் தவிப்பு... இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே... இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே, அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ?. உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறு விதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியமால் போனது.

மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப்படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்கு கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது. அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும், மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. இன்னும் சற்று வயதான பிறகு, கடவுள் தேடலை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, கடவுள் தேடலை கடைசி வரை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் இருந்தது. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தை கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தக் பள்ளிக்கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. அவர் நிர்வாகத்திடம் முறையிட, ‘இது போதும்’ என்று நிர்வாகம் அலட்சியப்படுத்த, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பையன்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பள்ளிக்கூடம் சரியாகும்வரை வரத் தேவையில்லை என்று கட்டளையிட்டார்.

நிர்வாகம் எகிறியது. ஆனால், இவர் விடாப்பிடியாக நின்றார். ஊர்மக்கள் ஒன்று கூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.

பள்ளிக்கூடம் நடக்கத் துவங்கியது. சிறிய வருமானம்;ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது, சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்... அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை.. பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. அவ்வாறே, தெற்கே போக ரயில் ஏறினார். டிக்கெட்டையும் பணப்பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டார். ஆனால், மூன்று ரயில் நிலையங்கள் தாண்டுவதற்குள் டிக்கெட்டும், பணப்பையும் காணாமல் போயின! பதறிப் போய் நான்காவது ரயில் நிலையத்தில் கீழிறங்கினார்.

என்ன செய்வது? ரமண மகரிஷியைத் தேடிப் போவதா.. அரவிந்தரை நோக்கிப் போவதா.. மெளனமாக வீடு திரும்புவதா? ஆரம்பித்த காரியம் சுணங்குகிறதே. ஏன் இப்படி? கடவுள் தேடலை கடவுளே விரும்பவில்லையோ?

தயங்கினார்; குழம்பினார்.

எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார். ஆசிரியர் அவரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.

யார் கையேந்தி கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது. கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.

ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை, ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல்வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை; உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்ததுதான் தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அதே நேரம் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரிய வர, இடிந்து போனார். அற்புதமான இரண்டு ஞானிகளுடன் நெருங்கி இல்லாமல், மறுபடியும் குடும்ப பாரம் இழுக்க வந்தேனே.. என்று கவலைப்பட்டார்.

அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரை இழக்க விரும்பவில்லை. எனவே ராமதாஸை நோக்கி விடுமுறையில் பயணம் துவங்கினார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். “இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும் கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.

உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். அதனால் ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.

உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாக பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது, கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்கு போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமமே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப்பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை; கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.

Saturday, November 28, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -3

சந்தேகம் வந்தபோது மனசு சட்டென்று வெகுதூரம் பின்னோக்கிப் போயிற்று.

தர்மயுத்தம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எனக்கு ரஜினிகாந்த் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. ரஜினிகாந்தின் பரபரப்பான நேரம் அது. வெற்றிகள் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு விதத்தில் அவர் எல்லோராலும் கவரப்பட்டார். அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் உச்சக்கட்டம் அடைந்திருந்த காலம் அது.

சாவி பத்திரிக்கையின் சார்பாய் அவரை பேட்டி காணச் சென்றிருந்தேன். காலை எட்டு மணி இருக்கும்.

“டிபன் சாப்பிட்டீங்களா”. ரஜினி கேட்டார்.
“இல்லை”.

“கார் எங்கே’- தேடினார்.
அவருடைய கார் எங்கேயோ போயிருந்தது.
“எதில் வந்திருக்கிறீர்கள்”.
“ஸ்கூட்டர்”
“வாங்க போவோம்”

நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய, ரஜினிகாந்த் என்னிடமிருந்து வண்டியை வாங்கிக் கொண்டார். நான் பிலியனில் ஏறிக் கொள்ள, வண்டியை அவர் ஓட்டினார். டிரைவ்-இன் ஓட்டலுக்கு வண்டி போயிற்று,

கூட்டம் அதிகமில்லாத அந்த நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசினார். அவர் பேசிய விஷயங்கள் பலது எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன. என் வாழ்க்கையில் அந்தப் பேச்சுகள் மிகவும் உதவின. அவர் சொன்ன நேரடி வாக்கியங்கள் நினைவில் இல்லை. அதனால் அதன் சாராம்சம் சொல்கிறேன்.


“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.

தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.

கண்டக்டரா, கன்னடமா, தமிழ், இங்கிலீஷ், ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.

இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.

மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”


இது ரஜினிக்கு மட்டுமல்ல, பாலகுமாரனுக்கும் பொருந்தும். செய்யும் வேலைக்குக் கேலி வரும். அது மனிதர் குணம். நமக்கு அடுத்த வேலை தான் கவனம். கேலி சாதாரணம்.

வார்த்தைகளாய் அன்று இருந்த ரஜினி, வார்த்தைகளை உள்வாங்கி ஜெயித்திருக்கிறார். உங்களுக்கு இது அது தெரியுமா எனக் கேட்டு, இழிவுபடுத்துவார்கள் என்று நினைத்த ரஜினிகாந்த், இன்று சித்தர்கள் பாடல் பற்றி சொல்லச் சொல்லி கேட்கிறார். ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் தத்துவங்கள் பற்றி படிக்கிறார். ரமணர் வாழ்க்கை பற்றியும், வாக்கு பற்றியும் அதிகம் தெரிந்திருக்கிறார்.

தத்துவங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் பெருமையான விஷயம் இல்லை. அவைகளை உள்வாங்கி ஒட்டி வாழ்தல் முக்கியம் என்பது புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் கோபப்படுவதில்லை. ஆனால் தீர்மனாமாய் இருக்கிறார்.

ரஜினிகாந்த் இனிமையாய் இருக்கிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் இணக்கமாய் இருந்து விடுவதில்லை. மனசு விட்டு பாராட்டுகிறார்.

‘பாலகுமார் சார், அந்த காலேஜ் அட்மிஷன் பத்தி யுவராணி பேசறாது நல்லாயிருந்தது.’

நான் அன்றைய ஷுட்டிங்கிற்கு எழுதிக் கொடுத்து விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டேன். ஆனாலும் கூப்பிட்டு பாராட்டி, “ரஜினி சார்.. நான் நேத்து ஷுட்டிங்க்கு வரலைன்றதுக்காக இப்படி கூப்பிட்டு பாராட்டறா மாதிரி..”

“கடவுளே.. மனசாரப் பாராட்டக் கூடாதா. ஏன் சந்தேகமாவே பார்க்கறீங்க. எனக்கு பிடிக்காத விஷயத்தை மூஞ்சிக்கு நேர சொல்லி விடுவேன்”.

“இதுவரைக்கும் சொன்னதில்லை”

“பிடிக்காதது எதுவும் இதுவரை உங்களாண்ட எனக்குத் தெரியலை. சொல்லலை”

ஆனால் சட்டென்று ஒருநாள் மெத்தென்ற குட்டு விழுந்தது.

“இந்த ஸீனை இப்படி ஆரம்பிச்சா என்ன..” அவர் சொல்ல ஆரம்பிக்க, அதனுடைய நூல் புரிந்து கொண்ட நான் அதே விதமாகவே யோசித்து வைத்திருந்த சந்தோஷத்தில் குறுக்கிட்டு, “க்ரெக்ட்.. இது சொன்னதுக்கப்புறம் அந்த டயலாக் தொடர்ச்சிய..”

சட்டென்று உற்றுப் பார்த்தார்.

“பாலகுமார் சார்.. உங்கக்கிட்ட ஒரு தப்பு இருக்கு.. சொல்லட்டா”.
“சொல்லுங்க சார்”.
“ஸ்பீட் ரொம்ப ஜாஸ்தி. இது தேவையில்லை. என்னை முழுக்கப் பேசவிடறதேயில்லை நீங்க. ஒரு இடம் தொட்டவுடனே மடமடன்னு கம்ப்யூட்டர் கணக்கா போயிடறீங்க. போலாம். தப்பில்லை. எதிராளியைப் பேசவிட்டு அப்புறம் உங்க நேரம் வரபோது பேசுங்க”.

“சரி சார். ஸீன் சொல்லுங்க”
சொன்னார். சொன்ன பிறகு கருத்து கேட்டார்.

அந்த ஸீன் ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. முடித்த விதம் உறுத்தியது.
சொன்னேன்.

“பார்த்தீங்களா.. கரெக்ட்டுன்னு கத்தினீங்களே.. இப்ப இது திசைமாறி இருக்கறது புரியுதா”

“புரியுது சார்..” நான் ஸீனைத் தொடர்ந்து சிந்திக்க தள்ளிப் போனேன்.

அன்று போகும் முன் என்னைத் தேடி கை குலுக்கிவிட்டு முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப்போனார். அந்த வினாடி நேரத்தில் எனக்கு அவர் எண்ணம் புரிந்தது.

“புத்தி சொல்வது போல் எங்கோ உங்கள் மனதை மிதித்து விட்டேனா. ஆமெனில் மன்னிக்க,” முகம் பேசியது. மறுநாள் நேரடியாய் வாய் வார்த்தையாகவும் சொல்லப்பட்டது.

“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் கேட்டார்.

நான் சொன்னேன்.

Friday, November 27, 2009

சொர்க்கம் நடுவிலே - பாலகுமாரன்


"ஜெய விஜயீ பவ"
என் பெயர் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. நான் அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன்.
நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன.



இப்போது பூமியிலுமில்லாமல் பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையிலே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். இங்கே காலம் வித்தியாசமானது. சூரியன் உதிப்பது , மறைவது என்று எதுவுமே இல்லை. எந்நேரமும் மங்கலான ஒரு வெளிச்சம் மட்டுமே உள்ளது.




இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமா ? பனி படர்ந்த நேரத்து விடியற்காலை வெளிச்சம் போல மிகப் பிரம்மாண்டமான வெளி . அதில் தனியே இருப்பது போன்ற உணர்வு. பூமியில் பார்ப்பதும், கேட்பதும் உடல் வழியே நடைபெறுகிறது அல்லவா ? அது இங்கே சாத்தியமில்லை. எல்லாமே உணர்வு தான்.


.......................................... கீழே தொண்டை நாட்டின் ஒரு பகுதியான திருவான்மியூருக்கும் , மயிலாப்பூருக்கும் நடுவே ஒரு இடத்தில் ஒரு பெண் நடந்து கொண்டிருக்கிறாள் ...........................திடீரென்று அவளைச் சுற்றி ஒரு வெற்றிடம் உண்டானது.


இறப்பதற்கு சில விநாடிகள் முன்பு மனிதர்களைச் சுற்றி இப்படி ஒரு வெற்றிடம் உண்டாகும். அந்த வெற்றிடம் உடம்புக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தியை உறிஞ்சி வெளியே இழுத்துப் போடும். அப்படி இழுத்துப் போடுவதற்கு சுற்றிலும் இருக்கின்ற சக்திகள் உதவி செய்யும் . அப்படித் தான் இந்தப் பெண்ணை சுற்றியும் வெற்றிடம் உண்டாகியது. அவள் உயிரை உறிஞ்சுவதற்கு வெளியே இருக்கின்ற சக்திகளும் தயாராக இருந்தன. .......














கற்றுக்கொண்டால் குற்றமில்லை


அறிதல் என்பது ஒரு மனிதனின் ஆயுள் முழுவதும் பரவிக்கிடக்கிற விஷயம். அறிதலில் வேகமும், அறிய வேண்டிய தேவையும் மனிதனின் ஒரு காலகட்டத்தில் அதிகமாகவும், ஒரு காலகட்டத்தில் குறைவாகவும் இருக்குமே தவிர, அறிதலற்ற வாழ்க்கை என்பதில்லை. அறிதல் என்பது இவ்வுலகத்தின் தொடர்ந்த நியதி. அறிதலில் இன்னொரு விதமான வார்த்தை பாகுதான் கற்றுக்கொள்ளல். இந்த கட்டுரையை படிக்கவும் இதை பற்றி சிந்திக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதை படிப்பதின் மூலமும் ஒன்றை கற்றுக் கொள்கிறீர்கள். சிந்திக்கிறீர்கள், படித்ததைப் பற்றி சிந்திப்பது கற்றுக் கொள்வதில் ஒரு பகுதி, ஒரு பரிமாணம்.

இதைப் போலவே பார்ப்பதும், பேசுவதும், எதையோ இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. கற்றுக் கொள்வது என்றால் என்ன? செய்ததை செய்வது. கொச்சையாக சொன்னால் காப்பியடிப்பது, அப்படி செய்வதில், அல்லது காப்பியடிப்பதில் ஒரு வளர்ச்சியை காண்கிறீர்கள். நெருப்புக்கு பயந்த ஆதி மனிதன், காட்டு தீயில் பொசுங்கி போன கன்று மாமிசத்தை தின்று பார்த்து விட்டு ஒரு ருசியை கண்டு கொண்டான். ஒரு உணவை இப்படி பக்குவப்படுத்தலாமோ என்று கற்றுக் கொண்டான். அப்படி கற்றுக் கொண்டதுதான் இன்றைய இடியாப்பம், வடைகறியாக, பிஸ்கட் ஐஸ்கிரீமாக, தந்தூரி சிக்கனாக இருக்கிறது.

உடையும், உறைவிடமும் இப்படி மாறி இருப்பதை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ளமுடியும், ஒரு தனி மனித வளர்ச்சியில் இந்த கற்றுக் கொள்வதுதான் அளவிடப்படுகிறது.

எனவே கற்றுக் கொள்வது என்பது தனி மனித வளர்ச்சி என்பது மட்டுமல்லாது, சமூக வளர்ச்சியாகவும் கருதப்படும். வளர்ச்சி தலைமுறை தலைமுறையாக வளரும் விஷயம். இந்த வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு நிர்பந்தம். நான் கம்ப்யூட்டர் தெரிந்து கொள்ளாமலேயே மத்திம வயதை தாண்டிவிட்டேன். என் பிள்ளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும், இல்லாவிடில் அவன் வாழ்க்கை சிக்கலாகும். இது அவனுக்கு ஏற்பட்ட நிர்பந்தம்.

எனவே கற்றுக்கொள்வது காப்பியடிப்பது மட்டுமல்ல அதை தாண்டியும் போவது. அதே பதினாறாம் வாய்ப்பாடுதான். கருவிதான் வேறு. கற்றுக்கொண்டே இருப்பதில் முன்னேறிக் கொண்டே இருப்பதும் ஒரு நிர்ப்பந்தம்தான். சரி, ஏன் கற்கவேண்டும்? வாலிழந்த நரிக்கூட்டத்தில் வாலுள்ள நரி விநோதம். பைத்தியம். நெருப்பு எதற்கு என்று பச்சையாக மாமிசம் சாப்பிட்டால் இளக்காரமாகும். ஏதோ போல் இருக்கும். உணவில் மட்டுமல்ல இனி குடுமியும், கோவணமும்தான் உடை. என் மூதாதையர்கள் அப்படிதான் இருந்தார்கள் என்று நாம் பேசக்கூட அனுமதிக்கவில்லை. பேண்ட் அத்தியாவசியம்.

கற்றுக்கொள்வதில் ஊரோடு ஒத்து வாழ் என்கிற அர்த்தமும் உள்ளடங்கி இருக்கிறது. அப்படி ஒட்டவில்லையெனில் ‘பல கற்றும் கல்லார்’ என்று சொல்லப்படாமல் இருப்பதற்கே நாம் கற்றாக வேண்டும். எதற்கு எழுதப் படிக்க தெரிய வேண்டும் என்ற காலம் போய் நிச்சயம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற காலம் வந்து விட்டது. நானும் உங்களுக்கு சிலதை கற்றுக்கொடுக்கப் போகிறேன். நான் எங்கோ கற்று கவனித்து தெளிந்து செயல்பட்டதை உங்களுக்கு சொல்லப்போகிறேன். நீங்கள் இதற்கு பிற்பாடு கவனித்து தெளிந்து பிறருக்கு நான் சொன்னதை காட்டிலும் தெளிவாய் சொல்லக்கூடும். இப்படிதான் மனிதன் இனம் வாழ்ந்தது. இனியும் வாழும்.

உங்களுக்கு யாரும் சொல்லித் தராததை சொல்லப் போவதில்லை. இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரிந்திருப்பின் கட்டுரையை புறக்கணித்து விடுங்கள். தெரியாதிருப்பின் கவனித்துக் கொள்ளுங்கள். நான் விஞ்ஞானி இல்லை. வேறு எந்த ஞானமும் கைவரப்படவில்லை. என் நாற்பத்தேழு வயதில் நான் ஊன்றி கவனித்து பழகியவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். எனவேதான் கற்றுத்தருகிறேன் என்ற கர்வம் காட்டுவதுகூட செய்யாதிருக்க தோன்றியது. அனுபவ பகிர்தலை அவசியமான பாடம் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது.

என் அனுபவத்தை நீங்கள் அறிந்து கொண்டால் அதாவது கற்றுக் கொண்டால் பெரிய குற்றம் வந்துவிடாது என்கிற தலைப்பு கொடுத்தேன். இது அவையடக்கமாக சொல்லப்பட்ட தலைப்பு அல்ல. ஆராய்ந்து ஆராய்ந்து ஆதார விளக்கங்களுடன் அதற்கான புத்தக குறிப்புடன் இந்த கட்டுரை எழுதப்படவில்லை என்பதற்காகவே இந்த தலைப்போடு இக்கட்டுரையை தொடர்கிறேன்.

காலையில் எழுந்திருப்பது என்கிற விஷயத்திலிருந்து பேசத் துவங்கி விடுவோமா, உறக்கம் கலைந்து படுக்கையை விட்டு எழுந்திருப்பது எப்படி என்பதைப் பற்றி பேசுவோமா?

மதரீதியான எந்த விளக்கமும் நான் உங்களுக்கு சொல்லப் போவதில்லை. வலது உள்ளங்கையில் சரஸ்வதி இருக்கிறாள் என்றெல்லாம் விளக்கப் போவதில்லை, ‘முருகா’ என்று படுக்கையில் அலறிவிட்டு அமர்ந்தபடியே படுக்கையை விட்டு எழுந்திரு என்கிற உபந்நியாசம் இல்லை. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம். உங்கள் இஷ்டம். இவையாவுமே நன்றாக விழிப்பு கொடுத்தவுடன் வரும் முற்றிலும் மனம் தெளிவடைந்த பிறகு வரும் செயல்கள்.

நான் சொல்லப் போவது வேறு. உறக்கத்திற்கும் விழித்தபின் ஏற்படும் முழுத் தெளிவுக்கும் பின் உருவாகும் ஒரு நிலை. உறக்கம் கலைந்து மறுபடி உறக்கம் வருமே, மறுபடி உறங்கத் தோன்றுமே அந்தநேரம் அந்த நேரத்தில் இரண்டு செயல்கள் செய்யும் சாத்தியம் உண்டு. ஒன்று அந்த தூக்கத்தைப்பற்றி, ஆராய்ந்து, இரண்டு விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது.

தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?

தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.

உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.

சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.

எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.

சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.

நான் சொல்வதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.

இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

இங்கே துணிச்சலாய், “அடச்சீ போ” என்று மனசை அறுத்து விட வேண்டும். இங்கே மனசை அறுக்க சுலபமான வழி எழுந்து படுக்கையில் உட்கார்ந்து விடுவதுதான் முழு விழிப்பையும் அனுபவிக்கத் துவங்குவதுதான். அடுத்த முறை முதல் விழிப்பு வந்த போது கண்ட கனவு பற்றியோ அல்லது மேற்கொள்ளப் போகும் நினைவு பற்றியோ மனதை யோசிக்க வைக்க முயலுங்கள்.

இந்த கட்டுரை புரியலையே என்று படித்து விட்டு சொல்ல வேண்டாம். நான் சொன்னதை பழகிப் பார்த்து விட்டுப் பேசுங்கள். அப்போது நான் சொன்னதையும் தாண்டி பலதும் புரியும். “நானா எங்க எழுந்துக்கறேன், அப்படி எழுந்தாத்தானே பாதி முழிப்பு எங்க வீட்டுல சுளீர்ன்னு தண்ணி ஊத்தி அடிச்சித்தான் எழுப்புவாங்க, நான் அலறிதான் எழுந்திருப்பேன்” என்பவர்களுக்கும் இக்கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை.

“தினம் ராத்திரி தண்ணி போட்டோமா, காலையில புரண்டு படுத்தா தலை நோவறாதுதான் தெரியுது. கனவும் தெரியலை காட்சியும் தெரியலை” என்று சொல்பவர்களுக்கும் எந்தக் கட்டுரையும் அவசியமில்லை.
படுக்கையில் இருந்து எழுந்து பிறகு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்கிறேன்.


.........................................“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”................தொடரும்.

வெற்றி வேண்டுமெனில் - உடலின் ஆட்சி

காமம் தான் ஆரம்பத்திலிருந்து இன்றளவும் இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் சக்தியாக இருக்கிறது. ‘கூடல்’ என்பது மனிதருக்கான விதிமுறையாக மட்டுமில்லை, உலகின் எல்லா உயிர்களின் இயல்பாக இருக்கிறது. நாய், பூனை, ஆடு, மாடு, சிங்கம், புலி, யானை, குதிரை போன்றவைகளோடு தாவரங்களும் புழு, பூச்சி முதலான உயிரினங்களும் கலவையில் களிக்கின்றன. இன்னும் ஆராய்ந்து பார்த்தால் நீரும், நிலமும் புணர்ந்து தாவரங்கள். தாவரம், வெயிலோடு கூடி பச்சையம். வெளியில் காற்று நுழைந்து மழை, குளிர், வெப்பப்பரவல் என்று இடையறாது இடையறாது எதுவோ எதனோடோ கூடல் நடத்திக் கொண்டிருக்கிறது.

இதைக் கண்டு உணர்ந்து சனாதன தர்மம் என்கிற இந்துமதம் ‘ஆவுடையார் லிங்கம்’ என்று ஒரு சிலா ரூபம் உருவகப்படுத்தி கூடலே இவ்வுலகம் என்று மென்மையாய் உணர்த்துகிறது. ‘லிங்கம்’ என்கிற சொல்லுக்கு அடையாளம் என்று அர்த்தம். இவ்வுலகின் அடையாளம் கூடல். கூடலின் ஆதாரம் காமம். காமமே இவ்வுலகை ஆளுகிறது.

ஆளுவது எதுவோ அதைப் புரிந்து கொள்ள மறுத்தால் ஆளுபவர்க்கும், ஆளுமைக்கு ஆட்படுபவர்க்கும் மிகப் பெரிய மோதல், முரண்பாடு ஏற்பட்டுவிடும். வாழ்க்கை நிம்மதியற்றுப் போகும். இதுவே இவ்வுலகின் பல பாகங்களில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

எதை மிகப் பிரியமாய் வணங்கி, வரவேற்க வேண்டுமோ அதைக் கண்டு நடுங்கி ‘வெட்டி வீழ்த்துவேன்’ என்று விரட்டினால், வெறுத்தால் கலவரமே மிஞ்சும். நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ அதுவே உங்களைப் பல்வேறு ரூபத்தில் வந்து தாக்கி அடிமைப்படுத்தும்.

ஏன் இவ்வுலகம் காமத்தைப் புரிந்து கொள்ளவில்லை?

அடுத்து வாழும் மனிதரைப் புரிந்துகொள்ளாதவர், காமத்தையும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் காமம் என்பதை உணர்ந்து அனுபவிக்க அடுத்தவர் தேவை. வேறு ஒரு உயிருள்ள உடல் தேவை. வாழ்ந்து மலர்ந்த மனிதர் தேவை.

தசையைத் தசை உரசுவது மட்டுமே காமத்தைத் தீர்த்துவிடாது. நிர்வாணப்படுத்துவது மட்டுமே ஜெயித்தாகிவிடாது. மதித்தால்தான் காமம் கண்டு மகிழ முதல்படி. பிறரை மதிக்க மனதில் பணிவு வேண்டும். பணிவு தன் மீது நம்பிக்கை உள்ளவருக்கு எளிதில் வரும்.

தன் மீது நம்பிக்கை இல்லாதவரே காமத்தை வெறுத்து இழிவுபடுத்தி வெளியே பேசியும், மனதுக்குள்ளே காமத்தைப் பெரிய ஆலமரமாய் வளர்த்தும் வாழ்வார்கள். இது இரட்டை வாழ்க்கை.

தாயும், தந்தையும் கூடுவதை பல இரவுகள் கண் விழித்துப் பார்த்த ஒரு சிறுவன் இதில் சிக்கித் தவியாய் தவித்தான். அடக்க முடியாது தாயை தவறாகத் தொட, தந்தையிடம் நாயாய் அடிப்பட்டான். படிப்பை புறக்கணித்து பம்பாய் போனான். ஒரு வீட்டில் தட்டு கழுவி, வயிறு வளர்க்க, அவ்வீடு ஒரு மதபோதகரிடம் அடிக்கடி போக அவனும் போதகருக்கு நெருக்கமாகி, ஓரினச்சேர்க்கைக்கு உதவி, அவ்வுதவியால் உயர் இடம் பெற்று போதகரைப் போலவே காமம் புறக்கணித்து அதை இழிவாகப் பேசி எப்படி கட்டுப்படுத்துவதென்று ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அறிவுரை கொடுத்து மற்றவரை வியக்க வைத்து, அவனும் போதகராகி செல்வம் சேர்த்து ஆண்களை, பெண்களை விலைக்கு வாங்கி இடையறாது ஈடுபட்டு நோய்ப்பட்டு தெற்கே திரும்பி வைத்தீஸ்வரன் கோயிலே கதியென்று கிடந்தான்.

‘எனக்கு சொல்லித் தரவேயில்லை. அடித்து நொறுக்கினார்களே தவிர, ஆவேசமாகப் பேசி, இழிவுபடுத்தி மனம் குன்ற வைத்தார்களே தவிர, இது தவறு என்று விளக்கிப் பேசியிருப்பின் புரிந்துகொண்டிருப்பேன். நாற்பத்தேழு வயதில் தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் படித்து தான் காமம் கவனமாகக் கையாள வேண்டிய விஷயம் என்று புரிந்துகொண்டேன். பதினாறு வயதில் தவறு செய்து கடுமையாகக் கண்டிக்கப்பட்டு முப்பது வருடங்கள் குப்பையாய் வாழ்ந்து விட்டேன். காசு கொடுத்து காமம் வாங்கிவிட்டால் காமம் இனிக்காது. கசக்கும். குமட்டும். நேசிக்காத பெண்களோடு வாழ்தல் அபத்தம். கேவலம். எனக்கும் எவர் மீதும் நேசிப்பு இல்லையே. அதனால் கனவில் நேசிப்பு உள்ளவர்களை உருவகப்படுத்தி அவர்களை மனசுக்குள்ளே கூடிக் குலவி வாழ்ந்தேன். கற்பனைகள் வளர வளர காமவேட்டை மிக சுகம் என்று நினைத்தேன். நிர்வாணமாய் பார்த்த பெண்களை மனசுக்குள் இடையாறது கூடினேன். மனம், உடம்பு இரண்டும் நோய்ப்பட்டன.

வேறு எதுவும் முழுமையாய் யோசிக்க முடியாமல் காமவிகார எண்ணங்கள் முட்டி மோதின. நான் பொருளாதார ரீதியாகவும் தோல்வியுற்றேன். என் விழிப்புணர்வு செத்துப் போயிற்று.

இன்னமும் உடல் நோயுற்றப் பிறகும் காமம் அகலவில்லை. மனசுக்குள் நூறு நூறு கற்பனைகள். எனக்கு நானே பேசிக்கொள்கிற அளவுக்கு பகல் கனவுகள். ஒரு நாள் நிச்சயம் எனக்குப் பைத்தியம் பிடிக்கும்’ என்று அழுதான்.

சிறுவயதில் கற்பனைகளில் மிதந்து இடையறாது உடம்பை உஷ்ணப்படுத்தியதில் பிரச்சனைகள் வந்துவிட்டன. எதிரே யுவதிகள் நின்றபோது உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே, மீண்டும் கற்பனைகள். கனவுகள் என்று குழப்பம் வந்துவிட்டது.

இது நேராதிருக்க என்ன வழி ?

காமம் என்பது என்ன என்பதை இளம் வயதிலேயே பேசி புரிய வைக்க வேண்டும். இந்த உறுப்புகள்-வம்சவிருத்தியின் பொருட்டு, இந்த உணர்வுகள்-நல்ல குழந்தைகள் பெறுவதன் பொருட்டு என்று கூற வேண்டும்.

காசு, பணம், அதிகாரம், அந்தஸ்து போதுமா? திருமணம் நடந்து, குழந்தைகள் பெறுதல் மிக முக்கியம். வாழ்வு அப்போதுதான் முழுவட்டம், வடிவம் பெறுகிறது. குழந்தை இல்லாதவர் படும் துயரம் என்ன தெரியுமா என்று உதாரணம் காட்டிப் பேசவேண்டும்.

காமம் அனுபவிக்க அமைதி தேவை.

அமைதி என்பது என்ன? பயமற்று இருத்தல். எப்போது காமம் குறித்த பயம் போகும். முறைப்படி உறவுகொண்டால், நிம்மதியாய் எவர் இடையூறுமின்றி அனுபவிக்கலாம். அனுபவிக்க இச்சமூகம் எல்லா வசதியும் செய்து தரும். மற்றவைகளைக் கண்டிக்கும். கள்ளத்தனத்தை இழிவுபடுத்தும்.

‘கணவனின் துணையோடுதான் காமனை வென்றாக வேண்டும்’. என்பது கருத்துள்ள பாடல். உயர்ந்த அனுபவ வாக்கியம். இதே விதமாய் மனைவியிடம்தான் ருசியான உடலுறவு சாத்தியம்.

ஏன்?

மனைவி ஒரு பொறுப்பு. அவளைப் பேணுதல் ஒரு கடமை. அவள் உனது குழந்தைகளின் தாய். உனக்கு ஸ்நேகிதி. நோய்ப்பட்டபோது தாதி. சுகத்துக்கு மட்டுமான பெண்ணில்லை. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பங்குகொள்ளும் உறவு. தாய்-தகப்பனை விட்டு புருஷன் வீட்டிற்கு வந்த மனைவியைக் கொஞ்சி, சீராட்டி, ‘நானிருக்கிறேன். எந்த பயமின்றி எதுவும் கேள். மனம்விட்டுப் பேசு’ என்று ஆதரவு செய்ய, அவள் வாரி வழங்குவாள். தந்ததற்கு ஒரு பங்கும் இன்னும் தொடர்ந்து தரவேண்டும் என்ற நினைப்பில் இன்னும் கூடுதலாகவும் கிடைக்கும்.

இந்தக் கூடலின் நோக்கம் கூடல் மட்டுமல்ல. குழந்தைப்பேறும் உள்ளடங்கியது. ஒரு வருடம் ஆட்டம் ஆடலாம். மறுவருடம் குழந்தைப் பேறில்லையெனில் கவலை வந்துவிடும். ‘கடவுளே, கடவுளே’ என்று காமத்தில் ஈடுபடவேண்டியிருக்கும்.

இருபத்தியேழு வருடமாகக் குழந்தைப் பேறில்லாத தம்பதியர்கள் அவர்கள். கணவன் சினிமா பார்த்துவிட்டு கூடலுக்கு அழைத்தபோது, ‘வெறுமே எதுக்கு இது? என்ன பிரயோஜனம்?’என்று மனைவி அலுத்துக் கொண்டாராம். ‘அன்று காமம் அறுந்துவிட்டது. இறைவழிபாடு பக்கம் இருவரும் திரும்பிவிட்டோம்’ என்று நொந்தபடி பேசினார்கள்.

அவர்களிடம் செல்வம் உண்டு. அதிகாரம், அந்தஸ்து உண்டு. அனுபவிக்கத் தடையேதுமில்லை. ஆயினும், காமம் அறுந்தது. ஒரு கணம் அங்கே நம்மை நிறுத்திப் பார்க்க, காமத்தின் அர்த்தம், அபத்தம் புரியும்.

காமம் நன்கு அனுபவிக்க, வீடு வாகன சவுகரியங்கள் நிச்சயம் உதவும். இவைகள் பெற, உயர்ந்த படிப்பு, கடும் உழைப்பு அவசியம். படிக்க வேண்டிய காலகட்டத்தில் படித்து ஜெயித்து வேலையில் அல்லது வியாபாரத்தில் முழுமனதாய் ஈடுபட்டு இளமையிலேயே பலமான பொருளாதார அஸ்திவாரம் போட்டுவிட்டால் சுகம் என்கிற வீடு உயர உயர எழுப்பமுடியும்.

காமச்சேறே கதியென உழன்றால், குடிசை கூட கட்ட முடியாது. பாதுகாப்பு தரமுடியாது. ஆணை பெண் நேசிக்கமாட்டாள். நேசிக்காத பெண்ணிடமிருந்து காமம் வராது. வந்தாலும் ருசிக்காது.

போன தலைமுறையைவிட இந்தத் தலைமுறைக்குக் காமப்பிரச்சனைகள் அதிகம். மிக அதிகம். பெண்களிடம் மணி கேட்கவோ, ஒரு குவளை நீர் கேட்கவோகூட அப்போது பயம். கேட்பதை தவறாக நினைத்துக் கொள்பவர்கள் உண்டு. பெண்ணின் அண்மை இல்லாததால் தொந்தரவின்றி தன் காரியத்தில் ஆண் ஈடுபட முடிந்தது. இப்போது சினிமாவும், பத்திரிகைகளும், ஊடகமும், செல்போனும் பெண்களின் மேனியெழிலை பல கோணங்களில் நெருக்கமாய் காட்ட, இளைஞர்களின் மனம் குழம்புகிறது.

கள்ளத்தனமாய் கெட்ட விஷயங்களைப் பார்க்கும் வசதி அதிகரிக்க இருபாலரும் கள்ளத்தனமாகவே பேசிப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். எது மூளையில் பதியவேண்டுமோ, அதைப் பதிய ஒட்டாது இவ்விஷயங்கள் மறைத்துவிடுகின்றன. எனவே தோல்வி, கண்ணெதிரே பேயாட்டம் ஆடுகிறது. தோல்வியிலிருந்து தப்பி உற்சாகம் பெற, இவ்விஷயங்களைக் கற்பனை செய்யும் முட்டாள்த்தனம் மிகுந்துவிடுகிறது. பிறகு, மீட்சியில்லாத மனநோய்தான் மிஞ்சுகிறது.

உடல் உறுதி முக்கியம் என்பது இளம் வயதிலேயே சொல்லித் தரப்பட வேண்டும். விளையாட்டு வீரராய்த் திகழும் ஆசையை விதைக்க வேண்டும். அப்போது தேவையற்ற பேச்சுகள், தொடர்புகள் குறைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்ளே நம்பிக்கை வெற்றியினால் அதிகரிக்கும். ஆரோக்கியமாய், கட்டழகாய் இருக்கிறோம் என்பதே நல்ல நம்பிக்கை. விளையாட்டு, வெற்றி முக்கியமில்லை.

இந்த ஆரோக்கியம் படிப்பில், தொழிலில் முழுவதுமாய் ஈடுபட வைக்க முன்னேறுவது என்பது எளிது. அதுமட்டுமின்றி, இந்த ஆரோக்கியம் பாதுகாப்பு, வைராக்கியம் வளர்க்கும். இந்த உணவு வேண்டாம், இந்தவித கெட்ட படங்கள் வேண்டாம் என்று வரையறைகள் ஏற்படும். வைராக்கியம் இல்லையெனில் வாழ்வே இல்லை. வைராக்கியம்தான் கடும் உழைப்பு தரும்.

‘ராத்திரி ஆச்சுன்னா தண்ணி போட்டே ஆவணும்’ என்று இருபது வயதில் தோன்றுமாயின், நாற்பது வயது தாண்டுவது அரிது. தாண்டினாலும் நிமிர்ந்த நடை இருக்காது. வெறுமே நோயுற்ற பூனையாய் இடையறாத சலிப்பில் வாழ்வு நகரும். நொந்துகொள்ளல் அதிகமாகும்.

‘தோன்றின் புகழொடு தோன்றுக. அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று’ என்பதற்கு அர்த்தம் எல்லோரும் பிரதமராக, தலைவராக வரவேண்டும் என்பதல்ல. பிறர் பாராட்டும்படி நடந்துகொள்பவரே சிறந்தவர்.

“நல்லா வச்சிருக்கீங்களே உடம்பை. வெரிகுட்” “பெரிய படிப்பு படிச்சிருக்கீங்களே” “கல்யாணத்துக்கு முன்னாடியே சொந்த வீடு கட்டிட்டீங்களா. வாழ்க, வாழ்க...”, “ஆங்கிலப் பத்திரிகைகளில் நீங்க எழுதின கட்டுரை படிச்சேன். நல்ல சிந்தனை” இம்மாதிரி ஆயிரம் ஆயிரம் பாராட்டுகள், புகழோடு தோன்றியதை உறுதிப்படுத்துகின்றன. நாலு பேர் பாராட்டாது வாழ்வது வாழ்வே அல்ல.

‘சினிமா ஆசையில் புருஷனை விட்டு ஓடிவந்து எவனோ அயோக்கியனை நம்பி சீரழிந்து அவனும் ஏமாற்ற, கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாப்பா’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவதற்கு அடியில் கட்டறுந்த காமம் இருக்கிறது.

இனி மீட்சி எப்போது?

காமத்தை நன்கு அனுபவிக்க வேண்டுமென்றால், உண்மையான பிரியம் மட்டுமே உதவி செய்யும். பரஸ்பர அக்கறை பலப்படுத்தும். விலகி இருந்தால்தான் எதிர்ப்பட்டதை நன்கு பார்க்க முடியும். காமத்தை தலையிலேயே தூக்கி சுமந்து திரிந்தால் எதுவும் தெரியாது. சுமையால் சலிப்பு ஏற்படுவதே மிஞ்சும்.

இளைஞர்களும், யுவதிகளும் காமம் குறித்து கேள்வி கேட்க, முதியோர் தட்டாது பதில் சொல்லி நல்வழிப்படுத்தல் அவசியம். ஒதுக்கி மறைத்து வைத்தால் ஆர்வம் அதிகமாகும், பிரச்சனைகள் பெரிதாகும்.

காமம்தான் இவ்வுலகை ஆட்சி செய்கிறது. எது ஆளுகிறதோ அதை அறிவதே நல்லது. அறிவுதான் மரியாதை தரும்.

வாழ்வில் வெற்றிபெற வேண்டுமெனில், காமம் பற்றிய தெளிவோடு இருங்கள்.

என்னை சுற்றி சில நடனங்கள் - சுயமாக சிந்தித்து செயல்படுதலே சுதந்திரம்

பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்று கேட்கிறபொழுதே யாராவது கொடுத்து விட்டார்களா என்பது போலத் தான் தொனிக்கிறது. கொடுத்துப் பெறுவதல்ல சுதந்திரம். அடித்துப் பிடுங்கப்படுவது. பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்று கேட்பீர்களாயின் அதை நோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு ‘போர்’ முனையில் வெகு வேகமாக தங்களுடைய சுதந்திரம் குறித்து யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.




இன்றைய பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சுதந்திரம் என்பது என்ன.



ஆண்-பெண் உறவு முறைகளில் யார் உயர்ந்தவர்கள். யார் தாழ்ந்தவர்கள் என்று பார்ப்பதா அல்லது ஆண் சமையலுக்குப் போகட்டும். நான் அலுவலகத்திற்கு போகிறேன். நீ பாவாடை அணிந்து கொள் என்று அட்டகாசம் செய்வதா.


இல்லை. தனக்கு வேண்டும் என்பதை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒரு மனப்பக்குவம் வருவதுதான் சுதந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது அறிவின் பாற்பட்ட சுதந்திரம்.


‘இந்த ப்ளவுஸ், இந்தப் புடவைக்கு மேச்சா இருக்காடி’ என்று நான்கு தோழிகளோடு இரண்டு ப்ளவுஸுக்கு கடை கடையாய் ஏறுவது சுதந்திரம் என்று எனக்குத் தோன்றவில்லை. எதிலேயோ அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.


‘அந்தப் பையன் என்னைப் பார்த்து லவ் யூன்னு சொல்றான். நான் என்ன செய்யட்டும்’ என்று தன்னுடைய தோழிகளோடு ஒருத்தி புலம்புவாளாயின் அவள் சுதந்திரம் பெற்றவளாக நான் நினைக்க மாட்டேன்.
‘நான் வேலைக்குப் போகட்டுமா, வேலைக்குப் போனா ரெண்டாயிரம் ரூபா காசு கிடைக்கும். காசு கிடைச்சா நம்ம வீட்ல அரிசி பருப்புக்கு உதவும்’ என்று அனுமதி கேட்டு கை பிசைந்து நின்றால், அவளுக்கும் ஏதோ அடிமை சிரமம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.


சுதந்திரம் என்பது தன்னுடைய விஷயங்களை தானே மிக சுயமாகச் சிந்தித்து செயலாற்றுவதுதான் என்று நான் நினைக்கிறேன். இந்தச் சுதந்திரம் திருமணமான பெண்களுக்கும், இனி திருமணமாகப் போகிற பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதே என் அபிப்ராயம்.
பெண்களுக்கு சில விஷயங்களில் தீர்மானம் செய்யும் அறிவு போதாது என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிற அகம்பாவம் காரணம் அல்லது அவர்கள் சொல்வது சரிதான் என்று இவர்கள் கிடக்கின்ற அடக்கமும் காரணம்.


‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். அது பட்டுப்புடவையாக இருந்தாலும் சரி, கெட்டிக்கார புருஷனாக இருந்தாலும் சரி. ‘அவன் இல்லையெனில் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்’ என்ற பிடிவாதம் பிடிப்பது ஆரோக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நோய்த்தன்மை இருக்கிறது.
வாழ்க்கையை மிக லகுவாக எடுத்துக் கொள்வதும், அடுத்த கட்டத்திற்கு விரைவாக போவதும், விஷயங்களைத் தானே தீர்மானிப்பதும் வாழ்வின் மிக முக்கியமான அம்சங்கள். இதற்கு பொருளாதார விடுதலை நிச்சயம் உதவி செய்யும். பொருளாதார விடுதலை வேண்டுமாயின், படிப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். படிப்பு என்கிற விஷயத்திற்கு ஒரு முரட்டுத்தனம், வைராக்கியம் தேவைப்படுகிறது. தான் பெண், தான் மெல்லியவள், தான் நாசூக்கானவள், தான் பஞ்சுபோல் மிருதுவானவள் என்ற எண்ணங்களையெல்லாம் உடைத்தெறிந்து மனதில் திண்மையும், மனத்திண்மையால் உடைகளில் மாற்றமும் ஏற்படுத்தி கம்பீரமாக தன்னை நடத்திக் கொண்டு போவதே சுதந்திரத்தின் அடிப்படையான விஷயம்.
ஆரம்ப கட்டங்களில் பெற்றோர்களின் சிறிய ஒத்துழைப்பு இருந்தால் போதும். கூடப் பிறந்தவர்களின் அனுசரணை இருந்தால் போதும். அப்படி வளர்ந்த பிறகும் அது கிடைக்கவில்லையெனில் அந்த இடத்தை விட்டு விலகி தனியாக வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.


தனிமையை உணர்ந்த எல்லோருமே விடுதலை பெற்றவர் என்பது யோக மார்க்கம் சொல்கின்ற வழி. தனிமையில் இருக்க பயந்து கொண்டுதான் பல பெண்கள் பிறரை சார்ந்தும், சார்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.


வன்முறையை தன்மீது ஏவி விட்டால், எந்த நிலையிலும் எப்படியும் சந்திக்கத் தயார் என்ற திமிரும், வீராப்பும் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் வரவேண்டும். ‘ரெளத்திரம் பழகு’ என்று பாரதி இதைத்தான் சொன்னான்.


மெத்தப்படிப்பு, மெல்லிய ரெளத்திரம், பொருளாதார மேன்மை, தன்னைத் தானே எடைப்போட்டு தான் யார் என்று தெளிகின்ற மேன்மை, அதனால் வரும் உன்னதம் அடைந்த பெண்ணுக்கு சுதந்திரம் காலுக்குக் கீழே இருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இந்தவித விடுதலை நோக்கி பெண்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பது உண்மை. ஆனால் வெகுதூரம் போகவேண்டும்.